சலவை இயந்திரத்துக்கு தண்ணீரே தேவையில்லை

தண்ணீரே தேவைப்படாத வாஷிங் மிஷின்கள், பிரிட்டனில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பிரிட்டன் மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகம். தற்போது பிரிட்டன்வாசிகள், சராசரியாக ஒரு நாளுக்கு 21 லிட்டர் தண்ணீரை, துணிகளை சலவை செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டு உபயோகத்துக்காக, பயன்படுத்தும் தண்ணீரில் 13 சதவீதம் சலவை செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. பிரிட்டனில், வாஷிங் மிஷின்கள் தான் பெரும்பாலும் சலவை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஆண்டுதோறும், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சத்துக்கு மேற்பட்ட வாஷிங் மிஷின்கள் விற்பனையாகிறது. தற்போது நடைமுறையில் உள்ள வாஷிங் மிஷின்களில், ஒரு முறை, ஒரு கிலோ எடையுள்ள துணியை சலவை செய்ய, 35 கிலோ தண்ணீர் செலவு செய்யப்படுகிறது.

புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள வாஷிங் மிஷின்களில், இதில் வெறும் 2 சதவீதம் தண்ணீரும், மின்சாரமும் போதுமானது. இந்த வாஷிங் மிஷின்களை, ஜீரோஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு முறை சலவை செய்ய ஒரு கப் தண்ணீர் போதுமானது. இதில் உள்ள பிளாஸ்டிக் சிப்கள், துணிகளில் உள்ள கறைகள், அழுக்குகளை அகற்றி, உலர்த்திவிடும். தனியாக உலர்த்த வேண்டிய தேவை இல்லாததால், டிரையர் தேவையில்லை. இதனால், டிரையருக்கு தேவைப்படும் மின்சார செலவும் மிச்சமாகிறது.சாதாரண வாஷிங் மிஷின்களுக்கும், புதிய வாஷிங் மிஷினுக்கும் விலையில் பெரியளவில் வித்தியாசம் இல்லை. அடுத்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியாக பிரிட்டன் முழுவதும், புதிய வாஷிங் மிஷின்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

No comments: