கூகுளின் அதிரடி நடவடிக்கை... பயர்பொக்ஸுக்கு சவாலா...???

பயர்பொக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார் தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பொக்ஸ் பதிப்பு 5 தொடங்கி இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது.இந்த டூல்பார் மூலம் தான் தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பொக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பொக்ஸ் பிரவுசரில் கிடைக்காது. இதற்குக் காரணம் குரோம் பிரவுசரை கூகுள் முன்னுக்குக் கொண்டு வர ஆசைப்படுவதே ஆகும்.

தொழில்நுட்ப ரீதியாக எப்படி வெற்றி பெறுவது என்பதனை கூகுள் நிறுவனத்தினைப் பார்த்துத் தான் கற்றுக் கொள்ள வேண்டும். இதற்கு அந்நிறுவனம் வழங்கும் குரோம் பிரவுசரே சாட்சி. இதன் பயன்பாடு தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

அறிமுகப்படுத்தப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் குறைவான காலத்தில், இதன் பயன்பாடு வேகமாக உயர்ந்து உள்ளது. பிரவுசர் பயன்பாடு குறித்து ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடும்.

கடந்த ஓராண்டில் குரோம் பிரவுசர் பயன்பாடு 7.24%லிருந்து 13.11% ஆக உயர்ந்துள்ளது. சில குறிப்பிட்ட தகவல் தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு இன்னும் கூடுதலாக 15% லிருந்து 24.4% ஆக உள்ளது.மற்ற பிரவுசர்களில் சபாரி பிரவுசர் நல்ல வளர்ச்சியைக் கொண்டுள்ளது. 2.6% கூடுதலாக இதற்கு வாடிக்கையாளர்கள் மாறி உள்ளனர். தொழில்நுட்ப தளங்களில் சபாரி பிரவுசரின் பயன்பாடு 10.5% ஆக உள்ளது.

குரோம் வளர்ச்சியில் அதிகம் பாதிக்கப்பட்டவை பயர்பொக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களாகும். மொஸில்லா பயர்பொக்ஸ் பயன்பாடு 23.8% லிருந்து 21.7% ஆகக் குறைந்தது. தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு 34.4% லிருந்து 30.9% ஆகக் குறைந்திருந்தது.

கடந்த மூன்று ஆண்டுகளில் 10% அளவிற்குக் குறைந்தது இந்த ஆண்டில் தான். அதிகம் பாதிக்கப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பிரவுசர் தானாகவே இந்த வீழ்ச்சியைத் தேடிக் கொண்டது எனக் கூறலாம். இதன் பயன்பாடு 60.3%லிருந்து 53.7% க்குச் சென்றுள்ளது.

தொழில்நுட்ப தளங்களில் இதன் பயன்பாடு, 37.9% லிருந்து 31.1% ஆகக் குறைந்துள்ளது. மொத்தத்தில் இதன் பயன்பாடு விரைவில் 50% க்கும் கீழாகச் செல்லலாம். இதற்குக் காரணம் மைக்ரோசாப்ட் தன்னுடைய இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9னை, விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் இயக்க முடியாத நிலையில் வடிவமைத்ததுதான்.

அடுத்தபடியாக பாதிப்பு பயர்பொக்ஸ் பிரவுசருக்குத்தான். கடந்த ஆண்டுகளில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசருடன் ஒப்பிடுகையில் பயர்பொக்ஸ் பிரவுசர் தான் மிகவும் பாதுகாப்பான, நிலையாக இயங்கும் பிரவுசராக மதிக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சிறப்பு அம்சங்களை குரோம் எடுத்துக் கொண்டுள்ளது.

பயர்பொக்ஸ் பிரவுசருக்கான கூகுள் டூல்பார், பயர்பொக்ஸ் பிரவுசர் 5 மற்றும் இனி வெளியிடப்பட இருக்கும் அடுத்த பதிப்புகளில் இயங்காது என அறிவித்துள்ளது. பதிப்பு 4 வரை மட்டுமே கூகுள் டூல் பார் இயங்கும்.

தற்போது பயர்பொக்ஸ் 5 பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பயர்பொக்ஸ் 6 ஆகஸ்ட் மத்தியிலும் அதன் பின் 6 வாரங்கள் சென்ற பின்னர் பயர்பொக்ஸ் 7 பதிப்பும் வெளியிடப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.பயர்பொக்ஸ் பதிப்பு 5 கூகுள் டூல்பார் இல்லாமல் இருப்பதனாலேயே பயர்பொக்ஸ் பயன்படுத்துபவர்களில் பலர் புதிய பதிப்பு 5க்கு மாறாமால் உள்ளனர். இவர்கள் புதிய கூகுள் டூல்பாரினை எதிர்பார்க்கின்றனர் என்று மொஸில்லா நிறுவன வல்லுநர் ஒருவர் கூறியுள்ளார்.

பயர்பாக்ஸ் பிரவுசரில் பல விஷயங்கள் கூகுள் டூல் பார் மூலமே இயக்க முடிந்தது. எடுத்துக்காட்டாக பலர் கூகுள் டூல் பார் மூலம் தான் புக்மார்க்ஸ் சேவ் செய்தனர். இப்போது அந்த டூல் பார் இயங்கவில்லை என்றால் புக்மார்க்ஸை இழக்க வேண்டியதுதான் என எண்ணுகின்றனர். ஆனால், அவை www.google.com/bookmarks என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கும் என்பது பலருக்குத் தெரியவில்லை.

மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் பிரவுசர் மூலம், பிரவுசர் பயன்பாடு மற்றும் தேடுதல் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்களை கூகுள் நிறுவனத்தின் ஆய்வுக்குத் தொடர்ந்து தந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் 2004ல் மேற்கொள்ளப்பட்டு மூன்று முறை புதுப்பிக்கப்பட்டு தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

இதற்கு முன்னர் மொஸில்லா தன் பயர்பொக்ஸ் பிரவுசரை, கூகுள் டூல்பாருடன் சேர்த்தே வழங்கி வந்தது. இதற்கு கூகுள் நிறுவனம் கணிசமான பணத்தை மொஸில்லாவிற்கு வழங்கி வந்தது. இப்போது அனைத்தும் முடிவிற்கு வந்துள்ளது.

ஆனால் மொஸில்லா இதனால் கலவரம் அடையவில்லை. மீண்டும் தன்னுடைய மொஸில்லா பயனாளர்களின் தொழில் நுட்ப குழுவினை உயிர்ப்பித்துள்ளது. இதன் மூலம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பல தகவல்களை விவாதித்து தங்கள் படைப்புகளில் பயன்படுத்த முடியும்.இவை பயர்பொக்ஸ் பிரவுசர் கட்டமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பயன்படும். உடனடியாகச் செயல்பட்டு மொஸில்லா நிறுவனம் தன் பயர்பொக்ஸ் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க வேண்டியுள்ளது. உடனே அவர்களின் பயத்தைப் போக்க சில மாற்றங்களையும் வசதிகளையும் பயர்பொக்ஸ் தராவிட்டால் அது பிரவுசர் சந்தையில் தன் பங்கினை இழக்கும் என்பது உறுதி.

வாலி வதை படலம்.... ஒரு சிறிய நோக்கு........!


வானர அரசனான வாலி இந்திரனின் அம்சமாவான். இந்திரன் அழித்த மந்திரமாலையின் சக்தியால் வாலி யாருடன் யுத்தம் செய்ய சென்றாலும் யுத்தம் செய்ய வருபவனின் அரை பலம் வாலியிடம் வந்து தஞ்சமடையும். வாலியை எந்த ஒரு அரசனாலும் நேரில் யுத்தம் செய்து வெல்ல முடியாது. அது ஒரு புறம் இருக்கட்டும். பரம்பொருள் ஏன் வாலியைக் கொல்ல வேண்டும். என்ன காரணம்...? காரணம் உள்ளது... ஏனென்றால் அவன் மாற்றான் மனை தொடுபவன். அவன் செய்கின்ற யுத்தங்கள் எல்லாம் அதர்ம யுத்தம். காரணம் அந்த மந்திரமாலை இல்லாமல் அவன் யுத்தம் செய்வதில்லை.

பரம் பொருள் ஸ்ரீ ராமர் வாலி மீது பாணம் செலுத்திய பின்னர் வாலி அவரைக் குறித்து சில வினாக்களைக் கேட்கிறான். தர்மத்தின் ரூபமான தாங்கள் ஏன் அதர்மம் செய்தீர்கள் என்று கேட்கிறான். அதற்கு பரம்பொருள் பின்வருமாறு பதிலளிக்கிறார். தமது முன்னோரான மாந்தாத்தா அவர்கள் எவ்வாறு ஒரு அதர்மரூபனுக்கு தண்டனை அழித்தார்களோ அதே போல தான் தானும் உனக்கு தண்டனை அழித்திருக்கிறேன். அப்போது வாலி ஸ்ரீ ராமரிடம் அப்படி எந்த தர்மத்தில் எழுதியிருக்கிறது மறைந்திருந்து தாக்குவது தர்மம் என்று என வினவ, அவர் அதற்கு “கொடிய மிருகத்தை மறந்திருந்து தாக்குவது அதர்மம் அல்ல, வானர அரசே” என்று பதிலழிக்கிறார். அது மட்டுமல்ல பலவானின் தவறு கூட தர்மமாகும் என எண்ணி பாவம் செய்த உனக்கு தண்டனை அழித்தது தவறில்லை எனக் கூறுகிறார். அதற்கு வாலி தான் கொடியமிருகம் அல்ல எனக்கூறுகிறான்.
ஸ்ரீ ராமரோ, “ நீ நரமிருகமாவாய், மிருகம் கூட பசி எடுத்தால் தான் வேட்டையாடுகிறது, ஆனால் நீ நினைத்த கணத்தில் வேட்டையாடுகிறாய் அதுவும் அடுத்தவன் துணைவியை, அதனால் தான் நீ உனது தீய திருஷ்டியை சுக்கிரீவனின் மனைவியில் வைத்தாய்..... ” என்று பதிலளிக்கிறார்.

“பேச்சில் தீச்செயல் கொண்டவன் சகல உயிர்களின் ஆனந்தமதை அழிப்பவன் நமது விரோதியாய் இல்லாவிட்டாலும் அவனை வதம் செய்ய வேண்டும்... நமது உடன் பிறந்தவனின் மனைவி, நமக்கு சகோதரியாக, நமக்கு மகளாக, ஏன்... மாதாவாகவும் தெரிய வேண்டும்... இந்த விதியை மீறுபவன் மன்னனாய் இருந்தாலும் மடியத்தான் வேண்டும், எனவும் பதிலளிக்கிறார்.

அதற்கு வாலி, எனக்கு தண்டனை அழிக்கும் அதிகாரத்தை உமக்கு அழித்தது யார்... நீர் யார் என்று குழப்பமடைய, அதற்கு தான் இஷ்வாகு வம்சத்தில் வழி வந்தவர்... தனக்கு அதர்மத்துக்கு எதிராக தண்டனை அழிக்கும் அதிகாரம் இருக்கிறது என பரம்பொருள் பதிலளிக்கிறார்.

இறுதியில் வாலியும் பரம்பொருளை அடையாளம் கண்டு கொண்டான். சுக்கிரீவனிடம் மகுடத்தைக் கொடுத்துவிட்டு, தனது குடும்பத்தை சுக்கிரீவனிடம் ஒப்படைத்துவிட்டு பரம்பொருளின் மடியிலே, ஸ்ரீ ராம நாமத்தை உச்சரித்தவாறே உயிர் பிரிகிறான். பரம்பொருளின் பாணம் பட்டதால் அவனது பாவங்கள் நீங்கி முக்தியடைகிறான்.

தோழியுடன் இனிமையாய் ஒரு நாள்…..!








கைத்தொலைபேசியை எடுத்தேன்… தோழிக்கு அழைத்தேன்…!... பேசினேன்…. சிறியதொரு நலன் விசாரணை….. எனது பல்கலைக்கழகத்தை ஒரு முறை சுத்திக்காட்டலாம் என எண்ணினேன்… ஆரம்பமானது எமது சிறிய சுற்றுலா… ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தினேன்.... இடையில் எமது நண்பர்களின் அறிமுகம்…. சில சில குறும்புக்கதைகள்…. தோழியின் முகத்தில் புன்முறுவலுடன் தொடர்ந்தது…… சிற்றுண்டிச்சாலையில் சில நிமிடங்கள்…. மறக்கமுடியாத சில நிமிடங்கள்…. இனி இப்படி ஒரு குறுஞ்சுற்றுலா வருமோ….!

”கவிதை எழுதுவோமா ?” என யோசித்த படி உட்கார்ந்தேன்....!


கவிதை எழுதுவோமா....?
என யோசித்த படி உட்கார்ந்தேன்....!
எழுதுகிற கவிதைகள் யாவும்
காதலை பற்றியே இருக்கிறதே
என்றொரு யோசனை.....!

வேறு தலைப்பில் எழுத ஆசைதான்
ஆனால் வேறு தலைபு தெரியவில்லை
தெரிந்து எழுத முடியவில்லை....!
ஏன் அப்படியொரு குழப்பம்....!

வீட்டில் பழைய சஞ்சிகைகளைப்
புரட்டிப் பார்த்தேன்....!
ஒன்றுமே தென்படவில்லை....!
என்ன செய்வதென்றும் புரியவில்லை....!

திடீரென்று ஒரு யோசனை
நூலகத்துக்கு போவோமா.....!
பிரபலம் பெரும் கவிஞர்கள்
விதமான கவிதை ஆக்கங்கள்....!
அடுக்கடுக்காய் இருந்தது....!

தேடலில் சில நிமிடங்கள்...
மெது மெதுவாய் ஓடின....!
பற்பல கவிஞர்கள் கூடவே....!
இடையில் எமது கவிப்பேரரசுடன்...!
சொல்லவா வேண்டும்...!

கவிப்பேரரசின் கவிதை என்றாலே....
ஒருவரும் தேவையில்லை....!
வாசிக்க தொடங்கினால் போதும்
ஒவ்வொரு வரியும் இனிக்கும்....

அவர் கவிதைகளில் ஒரு பயணம்.
முடிவில்லாத கற்பனை.......!
கவிஞரின் வரிகளே சிறந்தது....!
அதிலும் கவிப்பேரரசின் வைர வரிகளை
சொல்லவா வேண்டும்...!

காதலை பற்றி எழுதிய கவிஞர்....!
தூங்கிய காதலை எழுப்பி விட்டார்....!
இனி தூங்கவா முடியும்....!
அதில் ஒரு குறுந்தூக்கம்....!
வீடு திரும்பினேன்....!

வீட்டுக்கு வந்து யோசித்தேன்....!
ஒருகையில் பேனாவைத் திறந்தபடி
சும்மா யோசித்தாலும்......!
காதல் கவிதை தான் வருகிறது...!
என்ன செய்வது........!!!!






பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்"....!


கூகுள் நிறுவனம் பேஸ்புக்கிற்கு போட்டியாக "கூகுள் பிளஸ்" என்ற சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கூகுள் நிறுவன பொறியியல் பிரிவு மூத்த துணை தலைவர் குண்டோத்ரா தனது வலைப்பதிவில் தெரிவித்துள்ளதாவது: சமூக இணையத்தளம் எனப்படும் சமூகவலை தளங்களில் மக்கள் பெரும் ஈடுபாடு காட்டி வருகின்றனர்.

அவர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக சமூக இணையதளத்தை உருவாக்கும் முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டு வந்தது. தற்போது கூகுள் பிளஸ் என்ற பெயரில் புதிய ‌தொழில்நுட்பத்திலான சமூக இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.

இந்த புதிய சமூக இணையத்தளம் பேஸ்புக் தளத்தை ஒத்திருக்கும் போதிலும் அதைவிட கூடுதல் வசதிகளை பெற்றுள்ளது. இந்த புதிய சேவையினை ஆண்ட்ராய்ட் ஓபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கைத்தொலைபேசிகள் விற்கும் விற்பனை மையங்களிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்றும், தற்போதைய அளவில் சோதனைக்காக இது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பினும் வருங்காலங்களில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சர்க்கிள்ஸ், ஸ்பார்க்ஸ், ஹேங்அவுட்ஸ் மற்றும் மொபைல் உள்ளிட்ட ‌சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. கூகுள் பிளசில் உள்ள சர்க்கிள்கள், பேஸ்புக்கின் தகவல் பகிர்ந்து கொள்ளும்( இன்பர்மேசன் ஷேரிங்) சேவையை ஒத்திருத்தாலும், இது பேஸ்புக்கைப் போல தனது தகவலை அனைவருக்கும் தெரிவிக்காமல் உப‌யோகிப்பாளருக்கு நெருக்கமான நண்பர்களுக்கு மட்டும் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதாவது உபயோகிப்பாளர்களின் உண்மையான தகவல்களை உரிய நண்பர்களுக்கு மட்டும் தெரிவிப்பது என்ற கொள்கையுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கிளவுட் தொழில்நுட்பமுறையில் இங்கு பொட்டோக்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதால் இன்ஸ்டன்ட அப்லோட் இதில் சாத்தியமாகிறது.

இது இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக அதுவும் பேஸ்புக்கில் இல்லாத சிறப்பம்சமாக இதில் வீடியோ சாட் வசதி உள்ளது. ஒரே சமயத்தில் பல நண்பர்களுடன் வீடியோ சாட் முறையில் தொடர்பில் இருப்பது இந்த சேவையின் மூலமே சாத்தியமாகி உள்ளதாக அவர் அதில் தெரிவித்துள்ளார்.

600 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு சமூக இணையதள உலகில் முடிசூடா மன்னனாக விளங்கிய பேஸ்புக்கிற்கு தங்கள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் கடும் சவாலாக அமையும் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக தகவலுக்கு


உன்அழகான நடையில் பூமியே வியப்படைந்தது.....!

கதிரவன் உதயமதில் தொலைதூரம் நோக்கினேன்
அவள் தோன்றினாள்......தொலைகாட்டி இல்லாமலே
சின்னஞ்சிறு புன்சிரிப்புடன் அழகாகத் தெர்ந்தாள்...!
அவள் வருகையில் கதிரவன் ஒளிவட்டமானான்....!
உன்அழகான நடையில் பூமியே வியப்படைந்தது.....!

மாலைப் பொழுதினிலே, திடீரென தோன்றினாள்... !
அதே சிறிய புன்னகை முகத்துடன்.......!
அவளின் சிரிப்பதில் கதிரவனே சிரித்தபடி மறைகிறான்...
நிலாவும் புன்முறுவலுடன் எட்டிப்பார்க்கிறான்...!

உன்அழகான நடையில் பூமியே வியப்படைந்தது.....!

எதிர்பாராத நேரத்தில் கடவுளைப்போல்

கண்முன்னே காட்சி தருகிறாள்
எதிர்பார்க்கும் நேரங்களில்.....!
காணாது போய்விடுகிறாள்.......!

உன்அழகான நடையில் பூமியே வியப்படைந்தது.....!

அப்பிள் தனது அடுத்த தயாரிப்பான iphone5 ஐ நோக்கி......!


அப்பிள் தனது ஐபோன் வரிசையில் அடுத்த வெளியீடான ஐபோன் 5 வினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக அப்பிள் நிறுவனத்தின் உற்பத்திகள் வெளிவருவதற்கு முன்னரே அவற்றைப்பற்றிய எதிர்பார்ப்புகள், செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு குறைவிருக்காது. அதனைப் போலவே இம்முறையும் ஐபோன் 5 பற்றிய எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது.

ஐபோன் 5 ஆனது தனது கடைசி வெளியீடான ஐபோன் 4 வை விட வேகமானதும், ஐபேட் 2 கணனியில் உபயோகிக்கப்பட்டதுமான ஏ 5 புரவுசரைக் கொண்டிருக்குமெனவும் 8 மெகா பிக்ஸல் கெமராவைக் கொண்டிருக்குமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இது அப்பிள் அண்மையில் அறிமுகப்படுத்திய ஐகிளவுட் வசதியினையும் கொண்டிருப்பதுடன் வடிவத்தில் ஐபோன் 4னை ஒத்ததாகவும் அதனை விட பெரிய தெளிவான திரையை கொண்டிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கு ஐபோன் 5 என பெயரிடாமல் ஐபோன் 4ஜி அல்லது 4 எஸ் எனப் பெயரிடலாம் எனவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன. அப்பிள் தனது ஐபோன் 4வை கடந்த வருடம் ஜூன் மாதம் வெளியிட்டிருந்த போது அது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இதேவேளை அப்பிள் மத்திய தர சந்தைகளை கருத்திற் கொண்டு குறைந்த விலையிலான ஐபோனையும் தயாரித்து வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கூகிளின் மொழி பெயர்ப்பான்......!

கூகிள் நிறுவனம் தனது புதிய மொழிபெயர்ப்பு கருவியை வெளியிட்டுள்ளது. நீங்கள் முதலில் பயன்படுத்திய கூகிள் தட்டச்சு முறையை விட இது என்னும் பல விடயங்களை உள்ளடக்கியுள்ளது. இக்கருவியின் முலம் நாம் எமது விரும்பிய மொழியிலிருந்து விரும்பிய மொழிக்கு எமக்கு தேவையான தகவல்களை மொழிபெயர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக எமது வாசகர்கள் ஆங்கிலத்திலிருந்து தமிழிற்கும் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொசிபெயர்த்துக் கொள்ளலாம்.

உங்கள் மொபைல் நீங்கள் என்னொரு நபருடன் பேசும் போது தானாகவே மின்னேற்றப்படும்

பேசினாலே பற்றரியில் சார்ஜ் ஏறும் புதிய வகையான கைத்தொலைபேசிகளை தென்கொரிய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இந்த புதிய தொழிநுட்பத்தின்படி ஒருவர் பேசும் ஒலி எலக்ட்ரிக் பவராக மாறி கைத்தொலைபேசியின் பற்றரியில் சார்ஜ் ஏற்றப்படுகிறது.

மேலும் கைத்தொலைபேசியில் பேசுபவரை சுற்றி கேட்கும் சப்தம், இசை உள்ளிட்டவைகளின் ஒலியாலும் இவ்வகையான தொலைபேசியில் சார்ஜ் ஏற்றலாம்.

சியோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான சாங் வூகிம் என்பவர் இத்தக‌ைய கைத்தொலைபேசியை கண்டுபிடித்திருப்பதாக தி சன்டே டெலிகிராப் என்னும் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மின்சாரம் இன்றி சுற்றுப்புறத்தில் உள்ள ஒலிகளை மட்டுமே பயன்படுத்தி கைத்தொலைபேசியின் பற்றரியில் சார்ஜ் ஏற்றப்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

கைத்தொலைபேசி பயன்பாட்டில் இல்லாவிட்டாலும் சத்தம் நிறைந்த இடங்களில் வைக்கப்படும் இத்தகைய கைத்தொலைபேசிகள் தானாக சார்ஜ் ஏற்றப்படுகின்றன.

வந்துவிட்டது Windows இன் Online Drive.....!


இன்றைய கால கட்டத்தில் என்ன தான் வன்தட்டின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும் நாம் அதில் பதியும் கோப்புகளின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது.சில நெருக்கடியான வேளைகளில் எந்த கோப்பை அழிப்பது, எந்த கோப்பை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம்.இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஓன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய கோப்புக்களை சேமித்து வைக்கலாம். இப்படி பல தளங்கள் இருந்தாலும் இவற்றில் சில கட்டுப்பாடுகள் இருக்கும்.

இது போன்ற பிரச்னைகள் எதுவும் இல்லாமல் நமக்கு இந்த வகையில் கிடைப்பது தான் Windows Live Sky Drive வசதியாகும்.

குறிப்பிட்ட அளவிற்கு மேல் உள்ள கோப்புக்களை பதிவேற்றம் செய்து வைக்க முடியாது. நமக்கு ஒதுக்கப்படும் ஓன்லைன் டிரைவின் அளவு குறைவாக இருக்கும். திடீரென சில மாதங்கள் அல்லது நாட்கள் கழித்து கட்டணம் செலுத்தச் சொல்வார்கள். சில வேளைகளில் அந்த குறிப்பிட்ட சர்வரை அடைய முடியாது. சில நாட்களில் சர்வர் இல்லை என்ற செய்தியும் கிடைக்கும்.

இந்த ட்ரைவில் கோப்புக்களை சேமித்து வைக்க ஒவ்வொருவருக்கும் 25 ஜிபி இடம் தரப்படுகிறது. எனவே இதில் ஏறத்தாழ சராசரியான 1000 டாகுமெண்ட்களை சேமித்து வைக்கலாம். 3,000 பாடல்களைப் பதிந்து வைக்கலாம். 10,000 பொட்டோக்களை இதில் பாதுகாத்து வைக்கலாம். இதற்கு கடவுச்சொல் பாதுகாப்பு உண்டு.

அத்துடன் இந்த கோப்புக்களை மற்றவர்கள் பார்ப்பதற்கும் அனுமதிக்கலாம். பிரைவேட்(Private) என வகைப்படுத்திவிட்டால் நீங்கள் மட்டுமே அதனைக் கையாள முடியும். ஷேர்டு(Shared) என ஒதுக்கினால் மற்றவர்களுடன் கோப்புக்களை பகிர்ந்து கொள்ள முடியும். அனைவரும் பார்க்கலாம் என்றால் பப்ளிக்(Public) என வகைப்படுத்த வேண்டும்.

இதனைப் பெற http://skydrive.live.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். இதில் உங்களுக்கென்று கணக்கு ஒன்றைத் தொடங்கி கொள்ளுங்கள்.

பின் அதில் தரப்படும் வழி நடத்தல்களின் படி சென்று கோப்புக்களை பதிவேற்றம் செய்திடலாம். உங்கள் கோப்புக்கள் வைத்திடும் ட்ரைவினை, உங்கள் கணணியில் உள்ள மற்ற வன்தட்டு ட்ரைவ் பிரிவுகளில் ஒன்றாக இயக்கலாம்.

இதனால் நீங்கள் ரகசியமாக வைத்துப் பார்க்க வேண்டிய கோப்புக்களை உங்கள் கணணியில் வைக்காமல் ஓன்லைன் ட்ரைவில் வைக்கலாம். உங்கள் அனுமதியின்றி யாரும் பார்த்துவிட முடியாது. இந்த அனைத்து வசதிகளும் இலவசம் என்பது இதன் உன்னத சிறப்பாகும்.

நியுட்டனின் நோக்கி.......!


உலகில் தோன்றிய விஞ்ஞானிகள் அனைவரிலும் தலைசிறந்தவராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் திகழ்ந்தவர் ஐசக் நியூட்டன். தலை சிறந்த வான நூலறிஞராகத் திகழ்ந்த கலிலியோ 1642 இல் காலமானார். அதே ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று இங்கிலாந்திலுள்ள ஊல்ஸ் திரோப் என்னுமிடத்தில் நியூட்டன் பிறந்தார். நபிகள் நாயகத்தைப் போன்று நியூட்டனும் தந்தை இறந்த பின்னர் பிறந்தவர். குழந்தைப் பருவத்திலேயே எந்திர நுட்பத்தில் மிகுந்த நாட்டமுடையவராகவும் கைவினைகளில் தேர்ந்தவராகவும் திகழ்ந்தார். இவர் திறமை வாய்ந்த மாணவராக விளங்கிய போதிலும், பள்ளியில் அசட்டையாக இருந்தார். பள்ளியில் யாருடைய கவனத்தையும் கவரவில்லை. இவர் குமரப் பருவத்தை எட்டிய போது, இவருடைய தாய் இவரைப் பள்ளியிலிருந்து நிறுத்தி விட்டு வயல் வேலைக்கு அனுப்பினார். இவர் ஒரு வெற்றிகரமான பண்ணைக் குடியானவராக விளங்குவார் என இவருடைய தாய் நம்பினாள். எனினும், இவருடைய உண்மையான நாட்டமும் திறமையும் எது என்பதை அவள் புரிந்து கொண்டு, இவரை பதினெட்டாம் வயதில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்த்தார். அங்கு இவர் அறிவியலையும் கணிதத்தையும் மிக விரைவாகக் கற்றுத் தேர்ந்தார். விரைவிலேயே தமது சுதந்திரமான ஆராய்ச்சிப் பணிகளையும் தொடங்கினார். தமது 21- ஆம் வயதிலிருந்து 27 - ஆம் வயதிற்குள்ளாக, பிற்காலத்தில் உலகில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்திய அறிவியல் கோட்பாடுகளுக்கு இவர் அடித்தளங்களை அமைத்தார்.


பதினேழாம் நூற்றாண்டில் மத்திய காலம், பெரும் அறிவியல் கொத்தளிப்புக்குரிய காலமாக விளங்கியது. அந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்காடி, வானியல் ஆராய்ச்சியில் புரட்சியை நம்பிக் கொண்டிராமல், தாங்களே பரிசோதனைகளைச் செய்து அறிவியல் உண்மைகளைக் கண்டறியும் படி ஐரோப்பா முழுவதும் ஆங்கிலத் தத்துவ ஞானி ஃபிரான்சிஸ் பேக்கனும், ஃபிரெஞ்சுத் தத்துவ ஞானி ரெனே டேக்கார்ட் பேக்கனும், டேக்கார்ட்டேயும் போதித்ததைக் கலிலியோ செயல் முறையில் நிறைவேற்றி வந்தார். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தொலைநோக்காடியைக் கொண்டு அவர் நடத்திய வானாராய்ச்சிகள் வானியல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின. அவர் மேற்கொண்ட எந்திரப் பரிசோதனைகள் இன்று நியூட்டனின் முதல் இயக்க விதி எனப் பெயர் பெற்றுள்ள விதியை நிலை நாட்டின.

இரத்த ஓட்டத்தைக் கண்டுபிடித்த வில்லியம் ஹார்வி, சூரியனைச் சுற்றும் கோளங்களின் இயக்கங்களை விவரிக்கும் விதிகளைக் கண்டுபிடித்த ஜோகன்னஸ் கெப்ளர் போன்ற மற்ற சிறந்த விஞ்ஞானிகள், அறிவியல் சமுதாயத்திற்கு புதிய அடிப்படைத் தகவல்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். எனினும், தூய அறிவியல் என்பது இன்னும் ஆய்வறிவாளர்களின் விளையாட்டுக் கருவியாகவே இருந்து வந்தது. அறிவியலைத் தொழில் நுட்பத்திற்குப் பயன்படுத்தினால், மனித வாழ்க்கை முறை முழுவதையுமே புரட்சிகரமாக மாற்றியமைத்து விடலாம் என ஃபிரான்சிஸ் பேக்கன் கூறி வந்தார். ஆனால், அவருடைய கூற்று மெய்ப்பிக்கப்படாமலே இருந்து வந்தது.


பண்டைய அறிவியலின் சில தவறான கோட்பாடுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, இந்த அண்டத்தினை மேலும் நன்கறிந்து கொள்வதற்குக் கோப்பர்னிக்கசும் கலிலியோவும் உதவினார்கள். எனினும், ஒன்றுகொன்று தொடர்பில்லாதவை போல் தோன்றிய அறிவியல் உண்மைகளை, அறிவியல் ஊகங்களைச் செய்வதற்குத் துணை புரியக் கூடிய ஒருங்கிணைந்த கோட்பாடாக உருவாக்குவதற்கு விதிமுறைகள் வகுக்கப் படாமலிருந்தது, அந்த ஒருங்கிணைந்தக் கோட்பாட்டினை வகுத்து, நவீன அறிவியலை அதன் இன்றைய முன்னேற்றப் பாதையில் வழி செலுத்தியவர் ஐசக் நியூட்டனே ஆவார்.

நியூட்டன் தாம் கண்டறிந்த அறிவியல் உண்மைகளை வெளியிடுவதில் எப்பொழுதுமே தயக்கம் காட்டினார். தமது கோட்பாடுகள் பெரும்பாலானவற்றுள் அடிப்படைக் கொள்கைகளை இவர் 1669 - லேயே வகுத்தமைத்து விட்ட போதிலும், இவருடைய கோட்பாடுகளில் பெரும்பாலானவை பல ஆண்டுகளுக்குப் பின்னரே வெளியிடப்பட்டன. இவரது கண்டுபிடிப்புகளில் முதன் முதலாக வெளியானது ஒளியின் இயல்பு பற்றிய புரட்சி நூலேயாகும். சாதாரண வெண்ணிற ஒளியானது வானவில்லின் வண்ணங்கள் அனைத்தும் அடங்கிய கலவை என்பதை இவர் நுட்பமான பரிசோதனைகள் வாயிலாகக் கண்டுபிடித்தார். ஒலிப் பிரதிபலிப்பு (Reflection of Light) ஒளிக் கோட்டம் (Refraction of Light) ஆகியவை பற்றிய விதிகளின் விளைவுகளையும் இவர் கவனமாகப் பகுப்பாய்வு செய்தார். இந்த விதிகளைப் பயன்படுத்தி, இவர் 1668 இல் முதன் முதலில் பிரதிபலிப்புத் தொலைநோக்காடியை (Reflection Telescope) வடிவமைத்துத் தயாரித்தார். இந்த வகைத் தொலை நோக்காடி தான் இன்று பெரும்பாலான வானியல் ஆராய்ச்சிக் கூடங்களில் பயன்படுத்தப் படுகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகளையும் தாம் மேற்கொண்ட வேறு பல ஒளியியல் பரிசோதனைகளின் முடிவுகளையும் இவர் தமது 29 ஆம் வயதில் பிரிட்டிஷ் ராயல் கழகத்தில் செயல் விளக்கம் செய்து காட்டினார்.

ஒளியியலில் நியூட்டன் புரிந்த சாதனைகளே, அவருக்கு அறிவியல் துறையில் உயர் தனியிடத்தை ஈட்டித் தரப் போதுமானவை. ஆனால், தூய கணிதத்திலும், எந்திரவியலிலும் அவருடைய சாதனைகளுடன் ஒப்பிடும் போது இவை மிக அற்பமானவையேயாகும். முழுமைக் கலனத்தை (Integral Calculus) கண்டுபிடித்தது கணிதத்திற்கு இவர் அளித்த மாபெரும் நன்கொடையாகும். இவர் தமது 23 அல்லது 24 ஆம் வயதிலேயே இந்தக் கணிதத்தைக் கண்டு பிடித்தார். நவீன கணிதவியலின் தலையாய சாதனை எனக் கருதப்படும் இந்தக் கண்டுபிடிப்பு, நவீன அறிவியல் கோட்பாட்டின் பெரும் பகுதி தோன்றுவதற்கு வித்தாக அமைந்தது மட்டுமின்றி, இது கண்டுபிடிக்கப் பட்டிராவிட்டால் இன்றைய அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டிராது என்று கூறும் அளவுக்கு இன்றியமையாச் சாதனமாகவும் விளங்குகிறது. நியூட்டன் வேறெந்தச் சாதனையும் செய்யாதிருந்தாலும் அவர் கண்டுபிடித்த முழுக் கலனம் ஒன்றே தலைசிறந்த அறிவியல் அறிஞர்களின் வரிசையில் அவருக்கு இடந்தேடித் தந்திருக்கும்.

எந்திரவியல் துறையில் தான் பெரும்பாலான முக்கிய கண்டுபிடிப்புகளை நியூட்டன் செய்தார். பருப்பொருள்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை விவரிக்கும் அறிவியலே எந்திரவியல் ஆகும். முதலாவது இயக்க விதியைக் கலிலியோ கண்டுபிடித்திருந்தார். புறவிசைகள் எவற்றுக்கும் உட்படாதிருக்கும் போது பருப்பொருள்களின் இயக்கத்தை இந்த விதி விவரிக்கிறது. ஆனால், நடைமுறைகளில் எல்லாப் பருப்பொருள்களுமே புற விசைகளுக்கு உட்படுகின்றன. இத்தகை சூழ்நிலைகளில் பருப்பொருள்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதே எந்திரவியலில் எழும் தலையாய கேள்வி. இந்த கேள்விகளுக்கு நியூட்டன் தமது புகழ் பெற்ற இரண்டாம் இயக்க விதியின் மூலம் விடை கண்டு கூறினார். " ஒரு பொருளின் முடுக்கமானது (அதாவது , அதன் வேக வளர்ச்சியின் வீதம்) அந்தப் பொருளின் மீதான நிகர விசையினை அந்தப் பொருளின் பொருண்மையினால் வகுப்பதால் கிடைக்கும் ஈவுக்குச் சமம்." என்பது இரண்டாம் இயக்க விதியாகும். இந்த விதியை F = ma என்னும் கணிதச் சமன்பாடாகக் கூறலாம். இதில் F = விசை; m = பொருண்மை a = முடுக்கம்). முதல் இரு இயக்க விதிகளுடன் தமது புகழ்பெற்ற மூன்றாவது விதியாகும். அத்துடன், புவி ஈர்ப்பு விதியினையும் கண்டு பிடித்தார். இந்த நான்கு விதிகளையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது, ஒரு கூட்டிணைவாக விதியமைப்பு முறை கிடைக்கிறது. இதனைக் கொண்டு ஓர் ஊசலின் அசை வாட்டத்திலிருந்து சூரியனை வட்டப்பாதையில் சுற்றி வரும் கோளங்களின் இயக்கம் வரையில் கண்ணுக்குப் புலனாகிற அனைத்து எந்திரவியல் அமைப்பு முறைகளையும் விளக்கிவிடலாம்; அவற்றின் நடத்தை முறையினையும் ஊகிக்கலாம். நியூட்டன் இந்த எந்திரவியல் விதிகளைக் கண்டுபிடித்துக் கூறியதுடன் நின்று விடவில்லை. கலனம் என்னும் கணிதச் சாதனத்தைப் பயன்படுத்தி நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பதற்கு இந்த அடிப்படை விதிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அவர் மெய்ப்பித்துக் காட்டினார்.

நியூட்டனின் விதிகளை ஏராளமான அறிவியல் மற்றும் பொறியியல் சிக்கல்களுக்குத் தீர்வு காணப் பயன்படுத்தலாம்; பயன்படுத்தப்பட்டன. அவருடைய ஆயுட் காலத்திலேயே வானியல் துறையில் அவரது விதிகள் பயன் படுத்தப்பட்டு அதிசமயனான முடிவுகள் பெறப் பட்டுள்ளன. இத்துறையிலும் வழி காட்டியவர் நியூட்டனே ஆவார். அவர், 1687 இல் தமது தலை சிறந்த நூலாகிய " இயற்கைத் தத்துவத்தின் கணித விதிகள்" என்ற நூலை வெளியிட்டார். இதில் அவர் தமது புவிஈர்ப்பு விதியினையும், இயக்க விதிகளையும் விரிவாக விளக்கிக் கூறியிருந்தார். சூரியனை வலம் வரும் கோளங்களின் இயக்கங்களை துல்லியமாக ஊகித்தறிவதற்கு இந்த விதிகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை அவர் விளக்கினார். இயக்கவியல் வானியலில் இருந்து வந்த முக்கியமான சிக்கல் - அதாவது விண்மீன்கள், கோளங்கள் ஆகியவற்றின் நிலைகளையும், இயக்கங்களையும் ஊகித்தறியும், சிக்கல் - இதன் மூலமாக முற்றிலுமாகத் தீர்க்கப்பட்டு விட்டது. இதற்காகவே, வானியலறிஞர்களில் தலைசிறந்தவராக இவர் போற்றப்படுகிறார்.

அப்படியானால் நியூட்டனின் அறிவியல் முக்கியத்துவத்தைக் கணிப்பது எவ்வாறு? அறிவியல் கலைக் களஞ்சியத்தின் பொருட் குறிப்பு அகராதியை நோக்கும் போது, வேறெந்த தனி விஞ்ஞானியையும் விட மிக அதிகமான அளவுக்கு (இரண்டு மூன்று மடங்குகள் மிகுதியாக) நியூட்டனின் விதிகள், கண்டு பிடிப்புகள் பற்றிய குறிப்புகளைக் காண்கிறோம். மேலும், நியூட்டனைப் பற்றி மாபெரும் விஞ்ஞானிகள் கூறியுள்ளதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். லைப்னிட்ஸ் ஒரு சிறந்த விஞ்ஞானி. அவர் நியூட்டனுக்கு நண்பர் அல்லர். சொல்லப் போனால், நியூட்டனுடன் கடும் சர்ச்சையில் ஈடுபட்டிருந்தார். அவர் சொல்லுகிறார்: " உலகின் தொடக்கம் முதல் நியூட்டன் வாழ்ந்த காலம் வரையில் கணிதத்தை எடுத்துக் கொண்டால், கணிதத்திற்கு நியூட்டன் ஆற்றிய தொண்டு தான் பெரும்பகுதியாக இருக்கும்". லாப்லாஸ் என்ற தலைசிறந்த ஃபிரெஞ்சு விஞ்ஞானி கூறுகிறார்: " இயற்கை தத்துவத்தின் கணித விதிகள்" என்ற நூல், மனித அறிவின் வேறெந்தப் படைப்பையும் விட மிகச் சிறந்தது ". " உலகில் அவதரித்த அறிஞர்கள் அனைவரிலும் தலை சிறந்தவர் நியூட்டன் " என்று லாக்ராங்கே கூறினார். எர்ன்ஸ்ட் மார்க் 1901 இல் எழுதுகையில், " நியூட்டன் காலம் முதற்கொண்டு எந்திரவியலில் ஏற்பட்டுள்ள விதிதருமுறையான, வடிவ முறையான, கணித முறையான வளர்ச்சி அனைத்தும் நியூட்டனின் விதிகளை அடிப்படையாகக் கொண்டவையே" என்கிறார். சுருங்கக்கூறின், இங்கொன்றும் அங்கொன்றுமாகத் தனித்தனி உண்மைகளையும், விதிகளையும் கொண்ட ஒரு கதம்பமாக அறிவியலை அவர் கண்டார். இதைக் கொண்டு சில நிகழ்வுகளை விளக்க முடிந்ததேயொழிய, எதையும் துல்லியமாக ஊகித்தறிய முடியாதிருந்தது. நியூட்டன் நமக்கு ஒருங்கிணைந்த அறிவியல் விதிகளை வகுத்தமைத்துத் தந்து விட்டுச் சென்றார். அவற்றை ஏராளமான இயற்பியல் நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தி, துல்லியமான ஊகங்களைச் செய்ய முடிகிறது.

இந்தச் சுருக்கமான கட்டுரையில், நியூட்டனின் கண்டு பிடிப்புகள் அனைத்தையும் விவரித்துக் கூற இயலாது. அவருடைய பல முக்கியமான சாதனைகளேயாகும். எடுத்துக்காட்டாக, அனல் இயக்கவியலுக்கும் (வெப்பம் பற்றிய ஆய்வு) , ஒலி ஆய்வியலுக்கும் அவர் பெருந்த தொண்டாற்றி யுள்ளார். இயங்கு விசைப் பாதுகாப்பு, கோண இயங்கு விசைப் பாதுகாப்பு பற்றி மிக முக்கியமான இயற்பியல் விதிகளைக் கண்டு பிடித்தவர் நியூட்டனே ஆவார். கணிதத்தில் ஈருறுப்புத் தொடர் தேற்றத்தினை (Binomial Theorem) இவர் தான் கண்டுபிடித்தார். விண்மீன்களின் தோற்றம் குறித்து முதன் முதலில் நம்பகமான விளக்கம் அளித்தவரும் இவர் தான்.

தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற 11 தகுதிகள்

செம்மொழி என்றால் அனைத்து வகையாலும் செம்மையாக அமைந்த மொழி என்று பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Classical Language என்பர். செம்மொழி என்பது மிகத் தொன்மையும் நீண்ட நெடிய வரலாறுப் பின்னணியும் கொண்டதாக இருக்கும் என்பது பொதுவான கருத்து. அந்த வகையில், உலகின் உலகின் தொன்மை மொழிகளாக ஆறு மொழிகளை ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் 'யுனெசுக்கோ' அறிவித்துள்ளது. அவை, தமிழ், சமற்கிருதம், சீனம், இலத்தீனம், கிரேக்கம், இப்ரூ ஆகியன.


இவற்றுள், சமற்கிருதம் பேச்சு மொழியாக இல்லை; 'மந்திரங்கள்' என்ற உருவில் மட்டுமே இருக்கிறது. இலத்தீன், இப்ரூ மொழிகள் வழக்கொழிந்துவிட்டது. இசுரேலிய அரசு ஏசுபிரான் பேசிய இப்ரூ மொழிக்கு மீண்டும் உயிரூட்டி வருகிறது. கிரேக்க மொழியும் கிட்டதட்ட அழிவின் எல்லையைத் தொட்டுவிட்டு இப்போது மறுவாழ்வு பெற்று வருகிறது. சீன மொழியோ பட எழுத்து அமைப்பில் அமைந்தது. ஆதலால், மாந்த உள்ளுணர்வுகளை சீன மொழியால் மிகத் துள்ளியமாக வெளிப்படுத்த முடியாது என்பது மொழியறிஞர்கள் கருத்து.


ஆனால், சிறந்த இலக்கிய வளம், செம்மாந்த இலக்கண அரண், செறிவான விழுமியம், பொதுமை மரபு, உயரிய சிந்தனை, பாரிய சொல்வளம், வரலாற்றுப் பின்னணி, தனித்தியங்கும் மாண்பு, அழிவில்லா வாழ்வு, காலத்திற்கேற்ற புதுமை என பல வகையிலும் சிறப்புபெற்றிருக்கும் ஒரே மொழி...


அன்று தாம் வாழ்ந்த காலத்தில் பிறமொழிகளோடு வளமாக வாழ்ந்து; இன்று தன்னோடு வாழ்ந்த மொழிகள் பல அழிந்த பின்பும்கூட இன்னும் வளத்தோடு வாழுகின்ற ஒரே மொழி... நம்முடைய தமிழ்மொழிதான்!


தமிழ்ச் செம்மொழியின் தகுதிகள்


ஒரு மொழியைச் செம்மொழியாக ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில் அதற்கு பதினொரு (11) தகுதிப்பாடுகள் இருக்க வேண்டும் என்று மொழியியல் வல்லுநர்கள் வரையறை செய்துள்ளனர். இந்தப் 11 தகுதிப்பாடுகளையும் உருவாக்கியவர்கள் மேலை நாட்டு மொழி அறிஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


உலகில் பழம்பெரும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள எந்த ஒரு மொழிக்கும் செம்மொழிக்குரிய 11 தகுதிகளும் முழுமையாக இல்லை. சமற்கிருதத்திற்கு 7 தகுதிகளும், இலத்தின், கிரேக்க மொழிகளுக்கு 8 தகுதிகளும் மட்டுமே உள்ளன என்பது அறிஞர்கள் கூற்று.


ஆனால், என்ன ஒரு வியப்பு என்றால், நம் அன்னைத் தமிழுக்கு மட்டுமே செம்மொழித் தகுதிப்பாடுகள் பதினொன்றும் முழுமையாக உள்ளது. மேல்நாட்டு வல்லுநர்கள் வகுத்த மொழித் தகுதிப்பாட்டுக்கு நம்முடைய தமிழ்மொழி முற்றும் முழுவதுமாக ஒத்துப் போவது மிகப்பெரிய வரலாற்று உண்மையாகும்.


இனி, தமிழ்ச் செம்மொழிக்கு இருக்கின்ற அந்தப் 11 தகுதிகளைக் காண்போம்:-


1.தொன்மை (Antiquity)

2.தனித்தன்மை (Individuality)

3.பொதுமைப் பண்பு (Common Characters)

4.நடுவு நிலைமை (Neutrality)

5.தாய்மைத் தன்மை (Parental Kinship)

6.பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு (Finding expression in the culture art and life experiences of the civilized society)

7.பிறமொழிக் கலப்பில்லாத் தனித்தன்மை (Ability to function independently without any impact or influence of any other language and literature)

8.இலக்கிய வளம் (Literary prowess)

9.உயர்சிந்தனை (Noble ideas and ideals)

10.கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு (Originality in artistic and literary expressions)

11.மொழிக் கோட்பாடு (Linguitik principles)


இப்படி 11 தகுதிகளும் முழுமையாக பெற்றுள்ள தமிழ் மொழியைத் தாய்மொழியாகப் பெற்றதற்காக ஒவ்வொரு தமிழரும் பெருமையும் பீடும் கொள்ள வேண்டும். மொழியின் பெருமையை; வரலாற்றை; பாரம்பரியத்தை அறிந்து உணர்ந்துகொண்டால் தமிழர்கள் உலக இனங்களுக்கு இணையாக நிமிர்ந்து நிற்க முடியும் என்பது திண்ணம்.


தனித்த விழுமியங்களோடு உலகில் உய்வதற்கும் வாழ்வில் உயர்வதற்கும் தமிழர்களுக்குப் பெரும் தன்னம்பிக்கையத் தரவல்லது தமிழ்மொழி ஒன்றே. தமிழை முன்னெடுத்தால் ஒழிய தமிழர் வாழ்வு வளம் பெறாது. தமிழே தமிழரின் முகவரி என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர்ந்து தெளிய வேண்டும்.