பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் கார்

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் காரை ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது.

தண்ணீரில் ஓடும் கார்

தாறுமாறாக உயர்ந்து விட்ட பெட்ரோல், டீசல் விலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே எதிர்கால தேவையை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக வேறு எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள ஜெனிபாஸ் என்ற நிறுவனம் தண்ணீரில் ஓடும் காரை கண்டுபிடித்து உள்ளது.

1 லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்

இந்த காரில் உள்ள `டேங்க்'கில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பினால் போதும். அந்த தண்ணீரின் மூலம் காரில் உள்ள ஜெனரேட்டர் இயங்கி மின்சாரம் உற்பத்தி ஆகும். அந்த மின்சாரத்தின் மூலம் கார் இயங்கும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு இந்த கார் 80 கிலோ மீட்டர் தூரம் ஓடும். மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கார் செல்லும்.

மழை நீர், ஆற்று நீர், குழாய் நீர், கடல் நீர் எதை வேண்டுமானாலும் நிரப்பலாம். தண்ணீரை நிரப்புவதற்கான `டேங்க்' காரின் பின் பகுதியில் இருக்கும்.

சுற்றுச்சூழல்

ஜெனரேட்டர் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தினால் காரில் உள்ள பேட்டரியும் `சார்ஜ்' ஆகிவிடும்.இது தண்ணீரில் ஓடும் கார் என்பதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது ஆகும்.

தண்ணீரில் ஓடும் காரை அறிமுகப்படுத்திய ஜெனிபாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கியோஷி ஹிரசாவா மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.

இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

No comments: