மனிதனானேன்!

கண்ணே...
உன் கண்களை காதலித்து,
ஓவியனானேன்!

உன் செவிகளை காதலித்து,
இசை ஞானியானேன்!

உன் பேரழகை காதலித்து,
கலைஞனானேன்!

உன் உடமைகளை காதலித்து
கவிஞனானேன்!

உன் காதலை காதலித்து
மனிதனானேன்!

வெற்றி

நிலா தேய்வதால்
வானம் வருத்தப்படுவதில்லை...

பூக்கள் உதிர்வதால்
செடிகள்புலம்புவதுமில்லை...

மழையில் நனைவதால்
மரங்கள் குடை பிடிப்பதுவுமில்லை...

மதங்கள்வேறுபடுவதால்
மனிதம் மாறுவதுமில்லை...

நம்பிக்கை தொடர்வதால்
தோல்வி வெற்றியின் வேரறுப்பதுமில்லை..

உழைத்து வாழ்வதால்
வாழ்வில் வறுமை வீசுவதுவுமில்லை..!

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடம்

உலகின் முதலாவது சுழலும் மாடிக் கட்டிடமொன்றை துபாயில் ஸ்தாபிப்பதற்கான திட்டம் கட்டிடக் கலைஞர்களால் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. 420 மீற்றர் உயரமான இந்த 80 மாடிக் கட்டிடமானது நியூயோர்க்கைச் சேர்ந்த கட்டிடக் கலைஞர் டேவிட் பிஷரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டிடத்தின் மாடிகளுக் கிடையில் சுழலும் இயந்திர சாதனங்கள் பல பொருத்தப்பட்டுள்ளதால், ஒவ்வொரு மாடியையும் விரும்பிய திசைக்கு திருப்ப முடியும் என டேவிட் பிஷர் கூறுகிறார். இந்தச் சுழலும் மாடியிலுள்ள ஒவ்வொரு குடியிருப்பு அலகும் ஒரு சதுர அடிக்கு 3000 டொலர் வீதம், 4 மில்லியன் டொலரிலிருந்து 40 மில்லியன் டொலர் வரையான விலைக்கு விற்பனையாகவுள் ளது. மேற்படி சுழலும் மாடிக் கட்டிடத்தை நிர்மாணிக்கும் பணிகள் 2010 ஆம் ஆண்டுக்குள் பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது

செவ்வாயின் சூழலில் உயிரின வாழ்க்கை சாத்தியம்



செவ்வாய் கிரகத்தின் மண், உயிரினங்கள் வாழ்வதற்கு தேவையான அனைத்து சக்திகளையும் கொண்டு உள்ளதாகவும், உப்பு கலந்த சுற்றுச்சூழல் இருப்பதாகவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் உயிரினம் வாழ்வதற்கான சூழல் இருக்கிறதா என்பது பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக அமெரிக்கா பீனிக்ஸ் என்ற விண்கலத்தை அனுப்பி வைத்தது. இந்த கிரகத்தில் இறங்கிய பீனிக்ஸ் விண்கலம் சமீபத்தில் தான் பனிக்கட்டிகள் அங்கு இருப்பதை கண்டுப்பிடித்தது. இதன் மூலம் அங்கு தண்ணீர் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கு வித்திட்டது. அதன் பிறகு அந்த விண்கலத்துடன் இணைக்கப்பட்டு இருக்கும் ரோபோட் கை மூலம் மண் அள்ளப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.



இந்த சோதனையில், செவ்வாய் கிரகத்தின் வட துருவ பகுதியில் உப்பு கலந்த சுற்றுச்சூழல் உள்ளது என்பதும், மனிதர்கள் வாழ்வதற்கு தேவையான ஆர்கானிக் கார்பன் சத்து உள்ளது என்பதும் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.

குசேலனில் விஜய், அஜீத் நடிக்காதது ஏன்?

குசேலன் பட பாடலில் ரஜினியுடன் அஜீத், விஜய் நடிக்காதது ஏன் என்பதற்கு வாசு விளக்கம் அளித்தார். ரஜினி, நயன்தாரா, பசுபதி நடிக்கும் ‘குசேலன்' படத்தின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று சென்னை சாந்தி தியேட்டரில் நடந்தது. படத்தில் ரஜினி, நடிகராகவே நடிக்கிறார்.

ரஜினியின் படத்தின் முதல்நாள் காட்சியை ரசிகர்கள் பார்ப்பது போன்றும், அவரது கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்வது போன்றும் காட்சிகள் படமாக்கப்பட்டது.

இதில் ரஜினி ரசிகர்கள் கலந்து கொண்டு நடித்தார்கள். தமிழ்நாடு முழுவதிலிமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 500 ரசிகர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். ரஜினி ரசிகர்களுடன் 1000 துணை நடிகர், நடிகைகளும் கலந்து கொண்டு நடித்தனர்.

பின்னர் இயக்குனர் வாசு கூறுகையில், "குசேலன் படத்தில் 'சினிமா சினிமா...'எனத் தொடங்கும் பாடலில் அஜீத், விஜய், விக்ரம் உட்பட முன்னணி நடிகர்களை நடிக்க வைக்க திட்டமிட்டோம். இப்போது அவர்களை ஒருங்கிணைப்பதில் சிரமம் உள்ளது. இதனால் இத்தட்டத்தை கைவிட்டுள்ளோம்" என்றார்.

அஜீத், விஜய் உட்பட சில நடிகர்களிடம் கால்ஷீட் கேட்காமலேயே அவர்கள் நடிப்பார்கள் என வாசு அறிவித்திருந்தார். இதனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள் அதிருப்தியில் இருந்தனர். எங்கள் பட ஷ¨ட்டிங்கில் பிசியாக உள்ளோம்.

இதனால் குசேலனில் நடிக்க முடியாமலும் போகலாம். எங்களிடம் கேட்காமலேயே எப்படி நீங்கள் இவ்வாறு அறிவிக்கலாம்? என நடிகர்கள் தரப்பிலிருந்து கேள்வி எழுப்பினர். இதனால் ரஜினியின் ஆலோசனைப்படி முன்னணி நடிகர்களை சேர்க்கும் திட்டத்தை வாசு கைவிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள்
தெரிவித்தன.

இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஜப்பான் போர்க் கப்பல் முதற் தடவையாக சீனா வருகை

இரண்டாம் உலகப் போரின் பின்னர் முதற் தடவையாக ஜப்பானின் கடற்படைக் கப்பலொன்று சீனாவை வந்தடைந்துள்ளது. சீனாவின் போர்க்கப்பலொன்று ஜப்பானுக்கு விஜயம் மேற்கொண்ட 7 மாதங்களின் பின்னர் 5 நாள் துறைமுக அழைப்பில் இக் கப்பல் தென்சீன துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கடந்த வருடம் இருநாட்டு இராணுவ தலைவர்களுக்குமிடையில் அடையப்பட்ட இணக்கப்பாட்டைத் தொடர்ந்து பரஸ்பர துறைமுக அழைப்புக்கள் விடப்படுகின்றன.

இருநாட்டு உறவிலும் காணப்படுகின்ற பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில் இது ஒரு முன்னேற்றகரமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. தாக்கியழிக்கும் ரகத்தைச் சேர்ந்த இக் கப்பல் சீனத் துறைமுகத்தை வந்தடைந்ததை சீனத் தொலைக்காட்சியொன்று ஒளிபரப்பியுள்ளது.

இக் கப்பல் கடந்த மாதம் சீனாவில் ஏற்பட்ட பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்களை காவி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ் விஜயம் இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையில் அமைந்த நட்புறவை வளர்ப்பதற்கு உதவுமென சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மகளீருக்கும் "ருவென்ரி ருவென்ரி" உலகக் கிண்ணம்

மகளிருக்கும் 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்துகிறது சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஆடவருக்கான உலகக் கிண்ணப் போட்டியுடன் இதுவும் நடைபெறுமென ஐ.சி.சி. அறிவித்துள்ளது.

இலங்கை உட்பட 8 நாடுகள் மகளிருக்கான போட்டியில் விளையாடும். இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகியன மற்றைய நாடுகளாகும்.

ஆடவருக்கான போட்டிகள் லோர்ட்ஸ், ஓவல் மற்றும் டிரென்ட்பிரிட்ஜ் மைதானங்களில் நடத்தப்படவுள்ளது. தற்போது டான்டனும் அப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. அங்கு மகளிருக்கான போட்டிகள் நடைபெறும்.

எத்தியோப்பியாவில் மர்மயோகி - உலக நாயகனின் உலக உலா!

ஜுலை 13-ந் தேதி மும்பையில் நடைபெறவிருந்த 'மர்மயோகி' படத்தின் துவக்கவிழா தவிர்க்க முடிந்த(?) காரணத்தால், 25-ந் தேதிக்கு தள்ளிப் போயிருக்கிறது. மிக பிரமாண்டமாக இந்த துவக்கவிழாவை ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார் கமல். இதற்காக மட்டும் சுமார் 50 லட்சத்தை ஒதுக்கியிருக்கிறாராம் அவர். உலகம் முழுவதும் தாங்களே ரிலீஸ் செய்யவிருப்பதால், தேவையில்லாத ஆர்ப்பாட்டம் எதற்கு என்று முடிவு செய்த பிரமிட் சாய்மீரா, 'துவக்க விழாவே வேண்டாம். நேரடியாக படப்பிடிப்புக்கு போய் விடலாம்' என்று கருத்து தெரிவித்ததாம். ஆனாலும், விழா நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த கமல் தனது செலவில் இந்த விழாவை நடத்துவதாக கூறிவிட்டாராம். (முன்பணமாக வாங்கிய நான்கரை கோடியில் ஐம்பது லட்சத்தை செலவிடுவதில் என்ன தயக்கம் இருக்க முடியும்?)

பிரமிட் சாய்மீராவோடு ராஜ்கமல் நிறுவனமும் இந்த தயாரிப்பில் இணைந்திருக்கிறது. இந்தியாவை தவிர, உலகம் முழுவதும் உள்ள முக்கியமான நாடுகளில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறாராம் கமல். எத்தியோப்பியா போன்ற நாடுகளும் இந்த லிஸ்டில் அடக்கம்! சுமார் 80 கோடி ரூபாயில் மர்மயோகியை உருவாக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

தசாவதாரத்தின் அறிக்கை சுமாராக இருந்தாலும், வருமானம் பிரமாதமாக இருப்பதால் புதிய தெம்போடு காணப்படுகிறார் கமல். குறிப்பாக சில இடங்களில் ரஜினியின் சிவாஜி கலெக்ஷனையே முறியடித்திருக்கிறதாம் தசாவதாரம்! இந்த யோகம் மர்மயோகியிலும் தொடரட்டும்!

ரூ.40க்கு பெற்ற மகனை விற்ற அன்னை............விசாரணையில் திருப்பம்

திருப்பூரில் குழந்தையை ரூ.40க்கு தாய் விற்கவில்லை என போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தாயிடமே குழந்தை ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் கலா. இவர் 3 மாத கர்ப்பிணியாக இருந்த போது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். தனது மகன் அழகேசனுடன்(6) தனியாக வசித்து வந்தார். கட்டிட வேலைக்குச் சென்று கலா பிழைப்பு நடத்தி வந்தார்.

கலாவுக்கு கடந்த 22ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அங்கிருந்து டிஸ்சார்ஜ் ஆன கலா, குழந்தையுடன் திருப்பூர் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது கலாவுடன் கட்டிட வேலை செய்யும் செல்வி என்பவர் அங்கு வந்தார். அவரிடம் குழந்தையை காட்டிய கலா, ‘இதை எப்படி வளர்ப்பது என தெரியாமல் தவிப்பதாக’ புலம்பியுள்ளார். தானே வளர்ப்பதாக கூறியதால் செல்வியிடம் குழந்தையை கொடுத்தார் கலா.

அசதியாக இருந்த கலாவிடம் ஏதாவது சாப்பிட்டு விட்டு போ என கூறி 40 ரூபாயை செல்வி கொடுத்துள்ளார். குழந்தையுடன் வீட்டுக்கு வந்த செல்வியிடம் அக்கம்பக்கத்தினர் விசாரித்தனர். அதன் பிறகு குழந்தையை ரூ.40க்கு செல்வி வாங்கி வந்ததாக தகவல் பரவியது. குழந்தையை தத்து எடுக்க அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் போட்டி போட்டுள்ளனர். இதுகுறித்து செல்வி, கலாவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், கலா மற்றும் செல்வியை, பெருமாநல்லு£ர் போலீசில் நேற்று முன்தினம் ஒப்படைத்தார். விசாரணையில் குழந்தையை பணத்துக்காக விற்கவில்லை என தெரிந்தது. இதையடுத்து, குழந்தையை கலாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

போதை பொருள் கடத்தும் நீர் மூழ்கி கப்பல்



கொலம்பியாவில் போதை பொருள்களை கடத்தும் கும்பல் இப்போது நவீன உத்திகளை கையாள்கிறது. தண்ணீருக்கு அடியில் செல்லும் நீர் மூழ்கி கப்பலையும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்துகிறார்கள். இந்த நீர் மூழ்கி குட்டி கப்பல் ஒன்றை போலீசார் கைப்பற்றிய காட்சி.

இஸ்ரேல் விமான நிலையத்தில் பதற்றம்

பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி மற்றும் அவரது பாரியால் கார்லா புரூனி ஆகியோர் இன்று செவ்வாய் கிழமை ரெல் அவிவ்ஸ் பென் குரியொன் விமான நிலையத்தில் நின்ற சமயம் இஸ்ரேலிய எல்லை பொலிஸ் அதிகாரியொருவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இஸ்ரேல் விஜயம் செய்துள்ள பிரான்ஸ் ஜனாதிபது மற்றும் அவரது மனைவி கார்லா புரூனி ஆகியோர் இன்று தமது விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புவதற்காக விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களை வழியனுப்புவதற்காக இஸ்ரேலிய ஜனாதிபதி எஹுட் ஒல்மேர்டும் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தார். இச் சமயமே இவ் இஸ்ரேலிய எல்லை காவல் பொலிஸ் அதிகாரி தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக சார்கோஸியும் அவரது மனைவியும் விமானத்தில் ஏறியுள்ளனர் .அத்துடன் விமான நிலையம் வந்திருந்த இஸ்ரேலிய ஜனாதிபதி எஹுட் ஒல்மேர்டும் பாதுகாப்பாக சென்றுள்ளதாக சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன

லண்டனில் சாதனை படைத்த இந்திய பணக்காரர்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் வசித்து வருபவர் லஷ்மி மிட்டல்.

இந்திய தொழில் அதிபரான இவர் உலக பணக்காரர் வரிசையில் 4-வது இடம் பிடித்தவர் என்பது விசேஷம்.

லண்டனில் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் சென்சிங்டன் கார்டன் பகுதியில் லஷ்மிமிட்டல் ஏற்கனவே 2 பெரிய சொத்துக்களை வாங்கினார். இதன் மதிப்பு 27மில்லியன் பவுன்ட்ஸ் ஆகும்.

தற்போது லஷ்மிமிட்டல் தனது மகன் ஆதித்யாவுக்காக அதே பகுதியில் 16 ஆயிரத்து 250 சதுரஅடியில் ஒரு இடம் வாங்கினார்.

அதன்மதிப்பு 117 மில்லியன் பவுன்ட்ஸ் ஆகும்.

இதன் மூலம் பெரும் பணக்காரர்கள் வசிக்கும் தெருவில் 3 பெரிய சொத்து வாங்கியவர் என்ற பெருமையை லஷ்மிமிட்டல் பெற்றுள்ளார்.

அவர்கள் வந்து வாங்கிக்கொண்டு போக வேண்டும் - கமல்

கொடைக்கானல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. முதல் கேசட்டைக் கமல் வெளியிட பாரதிராஜா பெற்றுக்கொண்டார். தசாவதாரம் பட வெளியீட்டுக்குப் பிறகு கமல் கலந்துகொள்ளும் விழா என்பதால், சற்று ஆர்வம் கூடியது ரசிகர்களிடத்தில். அப்படத்தைப் பற்றி அதிகம் பேசவில்லை என்றாலும் லேசாகத் தொட்டுக்கொண்டார் கமல்.

தசாவதாரம் படத்தின் வெற்றியைப் பார்த்து, மற்றவர்கள் எல்லாம் பாராட்டும் போது பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு படத்துக்கும் இது போல் கடினமாக உழைத்து அதற்காகக் கிடைக்கிற பாராட்டுகள் நெகிழ வைக்கிறது. இங்கே பேசியவர்கள் ஆஸ்கார் விருது பற்றி குறிப்பிட்டார்கள். நாம் அங்கு போய் வாங்குவதை விட இங்கு வழங்கப்படும் விருதை வெள்ளைக்காரர்கள் வாங்கிக்கொண்டு போக வேண்டும். அதுதான் நமக்குப் பெருமை. இதை என் வாழ்நாளில் பார்த்துவிட்டுதான் போவேன் என்றார் கமல்.

கொடைக்கானல் படத்தின் இயக்குனர் டி.கே. போஸும் பாரதிராஜாவும் ஆரம்ப காலங்களில் ஒரே அறையில் தங்கியிருந்தவர்களாம். பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்த பாரதிராஜா, சுமார் 40 வருடங்களுக்கு முன் டி.கே.போஸ் எழுதிய உடனடிக் கவிதை ஒன்றையும் மறக்காமல், வரி மாற்றாமல் மேடையில் வாசிக்க, அப்படியே உறைந்துபோனார் போஸ்.

படத்தின் நாயகி பூரணா, பரத்துடன் விலங்கியல் 3 ம் ஆண்டு படத்தில் நடித்து வருகிறார். முன்னதாகப் பேசிய தொகுப்பாளினி, ஸ்கேட்டிங் சக்கரத்தில் நின்றபடியே பரத நாட்டியம் ஆடுவதில் வல்லவர் என்று பூரணாவைப் பற்றி குறிப்பிட, வியப்போடு அவரை ஆசிர்வதித்தார் கமல்

இசைஞானி காலில் விழுந்த நிலாவும், ராஜாவும்.....படப்பிடிப்பில் பரவசம்

இதுவரை ஆயிரக்கணக்கான பாடல்களை கொடுத்து ஒட்டுமொத்த இசை ரசிகர்களையும் கட்டிப்போட்ட இசைஞானி இளையராஜா, ஒரு முறை கூட, தன் பாடல் எப்படி படமாக்கப்படுகிறது என்பதை பார்க்க செட்டுக்கு போனதே இல்லை. முதன் முதலாக அவர் தனது பாடல் படமாக்கப்படுவதை நேரில் பார்த்து அசந்து போயிருக்கிறார்.

பண்ணைபுரத்தில் இருக்கிற தனது வீட்டுக்கு சென்னையில் இருந்து கிளம்பிய ராஜா, மதுரை வழியாக போய் கொண்டிருந்தாராம். ராஜா இசையமைத்த ஜெகன்மோகினி படப்பிடிப்பு மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் நடந்து கொண்டிருந்தது. தயாரிப்பாளர் எச்.முரளியும், இயக்குனர் என்.கே.விஸ்வநாதனும், படப்பிடிப்புக்கு வர வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் விடுக்க, தட்ட முடியாமல் மதுரையில் காரை நிறுத்த சொல்லி சில நிமிடங்கள் அங்கே செலவிட்டார் இளையராஜா.

படத்தின் நாயகன் ராஜாவும், நிலாவும் ஆடிப்பாடும் காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தார்கள். இவர் போனதும் யூனிட்டே பரவசம் ஆகிவிட்டதாம். நிலாவும், ராஜாவும் இசைஞானி காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டதுதான் ஹைலைட்!

வியப்பூட்டும் நட்பு

ஜாக்கி என்ற நாயின் முதுகில், குளிரை தாக்குப்பிடிப்பதற்காக ஸ்வெட்டர் அணிந்து கொண்டு பயணிக்கிறது ராமு என்ற குரங்கு.

கடுமையாக மழை பெய்து வருவதால் வடமாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான பகுதியை நோக்கி செல்கின்றனர். அப்படித்தான் அலகாபாத்தின் கங்கை கரைப் பகுதியிலிருந்து ராமுவும், ஜாக்கியும் பாதுகாப்பான இடத்தை நோக்கி விரைகின்றன. வழியில் எஜமானரின் வருகைக்காக சற்று நின்று திரும்பிப் பார்க்கின்றன.

யானை, குரங்கு, நாய் உள்ளிட்ட விலங்குகள் அறிவுப்பூர்வமாக செயல்படுவது போன்ற காட்சிகளை திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். நிஜத்திலும் இப்படி நடக்கும் என்பதை நிரூபித்திருக்கின்றன இந்த ராமுவும் ஜாக்கியும்.

விளையாடும் புலிக்குட்டிகள்

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் உயிரியல் பூங்காவில் புதிதாக 2 புலிக்குட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஒன்று 6 வாரமே ஆன வெள்ளை புலிக்குட்டி. இன்னொன்று தங்கப் புலிக்குட்டி. 2 புலிகளும் ஒன்றின் மீது ஒன்று ஏறி விளையாடுவது

பார்வையாளர்களை கவர்கிறது.

தமிழக அரசியலில் "கிங்மேக்கர்" விஜயகாந்த்

ஒரு கூட்டணியிலிருந்து விலகிய பிறகு கூடும் கட்சியின் பொதுக் குழுவில் காரசாரமான விவாதங்கள் இருக்கும். அடுத்து எந்த அணிக்கு போகப் போகிறது அந்தக் கட்சி என்ற முன்னோட்டம் தெரியும். ஆனால், இது எதுவுமே தெரியாமல் அமைதியாக முடிந்திருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு!

தி.மு.க.விலிருந்தோ அ.தி.மு.க.விலிருந்தோ பல கட்டங்களில் விலகியிருக்கிறது பா.ம.க. அப்போது நடைபெற்ற பொதுக் குழுக்களைப் போல் எந்த பரபரப்பும் இன்றி இப்பொழுது கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது.

"எங்களை தன்னிச்சையாக தி.மு.க. வெளியேற்றிவிட்டது" என்பதை மட்டுமே தீர்மானமாக வடித்து,"காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் நீடிக்கிறோம்" என்று முடிவு செய்திருக்கிறது பா.ம.க.

இந்த நேரத்தில் தி.மு.க. கைவிடாது "விலக்கப்பட்டால் அ.தி.மு.க. சேர்த்துக் கொள்ளும்" என்ற நினைப்பிலேயே கடந்த சில மாதங்களாக டாக்டர் ராமதாஸ் தி.மு.க. எதிர்ப்பு என்ற ஆயுதத்தை ஆக்ரோஷமாக எடுத்தார்.

ஆனால், பா.ம.க.வின் நினைப்புக்கு ஏற்றமாதிரி தி.மு.க.வும் அ.தி.மு.கவும் நடந்துகொள்ளவில்லை என்ற நிலை இப்போது ஏற்பட்டுள்ளது.

என்ன காரணம்?

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு ஒரு வலிமையான மாற்று என்பதை முதலில் பரிசோதனை செய்து பார்த்தவர் மூப்பனார். ராஜீவ் உயிருடன் இருந்தபோதே தமிழகத்தில் 1989 இல் தனியாக காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. சுமார் 47 இலட்சம் வாக்குகளைப் பெற்று பிரதான மாற்று சக்தியானது.

இந்த வாக்கு வங்கி காங்கிரஸ் கட்சிக்கு தமிழக அரசியலில் "கிங் மேக்கர்" ரோலை பெற்றுத் தந்தது என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால், அதன் பிறகு அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் போட்டி போட்டுக்கொண்டு அக்கட்சியுடன் கூட்டணி அமைத்தன.

அந்த அளவுக்கு ஒரு "காங்கிரஸ் ஈர்ப்பு சக்தி' இந்த இரு கட்சிகளிடமும் இருந்தது. பிறகு கழகங்களுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் காங்கிரஸின் ?கிங் மேக்கர் ரோல்" கரையத் தொடங்கியது.

அந்த இடத்தை புதிதாக முளைத்த பா.ம.க.வும் ம.தி.மு.க.வும் பங்கு போட்டுக் கொள்ள முயற்சி செய்தன. 1989 பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. கால் வைத்தது. 1996 சட்டமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. குதித்தது. இரு கட்சிகளும் கூட்டாக ஏறக்குறைய 30 இலட்சம் வாக்குகளைப் பெற்றன. இதனால் ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் இந்த ?கிங் மேக்கர்' ரோலை ஓரளவு செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது.

இந்நிலையில் காங்கிரஸே இல்லாத அணியில் ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் இருந்தால் போதும்! வெற்றி பெற்று விடலாம் என்ற தேர்தல் ஃபார்முலாவை 1998 இல் முதலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கண்டுபிடித்தார்.

அதை ஆதாரமாக வைத்து 1999, 2001, 2006 ஆகிய தேர்தல்களில் "நாங்கள் இல்லாத அணி வெற்றி பெறாது" என்று டாக்டர் ராமதாஸும் வைகோவும் குரல் கொடுத்தார்கள். இதுவே ஒரு கட்டத்தில் இந்த இருவரில் யார் பெரியவர்? என்ற விவாதத்திற்கு எல்லாம் வித்திட்டது.

ஆனால், சென்ற சட்டமன்றத் தேர்தலில் புதிதாக களத்திற்கு வந்த தே.மு.தி.க. சுமார் 27 இலட்சம் வாக்குகளைப் பெற்றது. விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. பெற்ற இந்த வாக்குகள் அ.தி.மு.க.வுக்கு எச்சரிக்கை மணியாக அமைந்தது. பா.ம.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளிடம் இருந்த "கிங் மேக்கர்' ரோலை கைப்பற்ற உதவியது.

2006 தேர்தல் முடிவுகள் விஜயகாந்த்தை "கிங் மேக்கர்" ரோலுக்கு அருகாமையில் கொண்டு வந்து அமர்த்திவிட்டது. அதனால் இதுவரை வீற்றிருந்த நாற்காலியை விட்டுச் செல்ல வேண்டிய நிலையில் ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் இருக்கின்றன.

இந்த விஷயத்தை நன்கு உணர்ந்த ம.தி.மு.க. பொதுச் செயலாளர்

வைகோ, "அ.தி.மு.க.வுடனான கொள்கை முரண்பாடு பற்றிக் கவலைப்படவில்லை. சேது சமுத்திரத் திட்டத்தில் நாம் உரிமை கொண்டாட முடியவில்லையே என்று நினைக்கவில்லை. ஈழத் தமிழர் பற்றி வேகமாகப் பேச முடியவில்லையே என்று வருந்தவில்லை. மண்டல மாநாட்டிற்கு ஜெ. வரவில்லை என்று கருதவில்லை. நாம் அ.தி.மு.க. அணியில் நீடிப்போம்' என்ற உறுதியுடன் அமைதி காக்கிறார்.

ஆனால், டாக்டர் ராமதாஸோ, எனக்கு கொள்கை இருக்கிறது. உங்களுடன் (தி.மு.க.) எல்லா கொள்கையிலும் ஒத்துப் போக முடியாது. எனக்குத் தோல்வி இல்லை. வெற்றி மேல் வெற்றிதான். நான் இன்னும் "கிங் மேக்கர்தான்" என்பதை நிலைநாட்ட அறிக்கை மேல் அறிக்கை விட்டு தி.மு.க.விடம் வம்பை விலை கொடுத்து வாங்கிவிட்டார்.

இந்தச் சூழ்நிலையில் பா.ம.க.வை வளைத்துப் போடுவதைவிட, தே.மு.தி.க.வுடன் பேசுவதே சரியான அணுகுமுறை என்று தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் கருதத் தொடங்கிவிட்டன. முதல்வர் கருணாநிதியைப் பொறுத்தமட்டில் மீண்டும் நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் கைப்பற்ற ஒரு "கூட்டணி ஃபார்முலா" வேண்டும். அதை மனதில் வைத்து இப்போதே பத்து தொகுதிகளை ரெடி பண்ணிவிட்டார். (பா.ம.க. விலகியதால் 6, ஏற்கனவே ம.தி.மு.க. விலகியதால் 4).

முதல்வருக்கு டெல்லி ஆசை கிடையாது. அதாவது பிரதமராக வேண்டும் என்ற ஆசை கிடையாது. இந்த 10 தொகுதிகளை வைத்துக்கொண்டு விஜயகாந்தை தி.மு.க.வுடன் இல்லாவிட்டாலும் காங்கிரஸுடன் அணி சேர்க்க முயற்சி செய்வார் என்றே தெரிகிறது. அதனால்தான் நாயுடு சமூகத்தைச் சேர்ந்த ஆர்க்காடு வீராச்சாமியை முன்னிறுத்தி பா.ம.க.வுடன் மோதினார்.

அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் டெல்லி ஆசையும் இருக்கிறது. பிரதமர் பதவிக்கு உரிய வேட்பாளர் அவர் என்பதை அ.தி.மு.க.வினர் பொதுக் குழுக் கூட்டங்களில் கூட பேசியிருக்கிறார்கள்.

அதனால் அவரும் 40க்கு 40 தொகுதிகளை வெல்ல என்ன ஃபார்முலா? என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறார். அதற்காக அவர் காங்கிரஸை முதலில் எதிர்பார்க்கிறார். அதனால்தான் தி.மு.க. பா.ம.க. உறவு முறிவை "நமது எம்.ஜி.ஆர்" இதழில் கடைசிப் பக்கச் செய்தியாக்கியவர், "இந்திரா காந்தியை கொல்ல சதி செய்தது தி.மு.க' என்ற ராமதாஸின் பொதுக்குழு குற்றச்சாட்டை முதல் பக்கச் செய்தி ஆக்கியுள்ளார்.

இதனால் பா.ம.க.வுக்கு வரவேற்பு என்று அர்த்தமில்லை. தி.மு.க. காங்கிரஸ் உறவில் உரசலை ஏற்படுத்த பா.ம.க.வின் பேச்சைப் பயன்படுத்துகிறார் அவ்வளதுதான்! காங்கிரஸ் வராத பட்சத்தில் ஜெ.யின் கவனம் தே.மு.தி.க. பக்கம்தான் திரும்பும். அப்போதும் விஜயகாந்த்தான் எதிர்பார்க்கப்படும் கூட்டணிக் கட்சியாக இருப்பார்.

ஆக, சென்ற 2006 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு விஜயகாந்திற்கு "கிங் மேக்கர்" ரோல் கிடைத்தது. அந்த வாக்குகளை அப்படியே வைத்திருக்கிறாரா விஜயகாந்த் என்பதைவிட, வைகோ, ராமதாஸ் ஆகியோரிடமிருந்து கைப்பற்றிய "கிங் மேக்கர்" ரோல் இன்னும் அவரை விட்டு விலகவில்லை.

பா.ம.க.வை தி.மு.க.வே விலக்கியதும் விலக்கப்பட்ட பிறகு பாய்ந்து பிடித்துக் கொள்ள அ.தி.மு.க. மறுப்பதும் இந்த உண்மையைப் பிரதிபலிக்கின்றன.

ஒலிம்பிக்கிலும் தேமதுர தமிழிசை

உலகத்தையே பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது ஒலிம்பிக் ஜுரம். தங்கம்,வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை குவிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள் வீரர்கள். இந்தியா பதக்கம் வெல்கிறதோ, இல்லையோ! அதையும் தாண்டி பெருமைப்பட்டுக் கொள்ள ஒரு விஷயத்தை செய்திருக்கிறது. லேகா-சொனாட்டோன் என்ற இசை நிறுவனம், இந்திய ஜெர்மனி தயாரிப்பாக பல்வேறு இசை டிராக்குகளை உருவாக்கி உலக சந்தையில் விற்று வருகின்றன.

ஹாலிவுட் படங்களிலும், உலகெங்கும் பரவியிருக்கும் தொலைக்காட்சி நிலையங்களிலும் இந்த இசைத் தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் படங்களிலும் இந்த இசை டிராக்குகளை பின்னணி இசையாக பயன்படுத்த பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன் வந்துள்ள நிலையில், ஒலிம்பிக்கில் தங்கள் இசை பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கிறார் லேகா-சொனாட்டோன் நிறுவனத்தின் இந்திய ஒருங்கிணைப்பாளர் லேகா ரத்னகுமார்.

இவர் தயாரித்த ஏசியா டுடே என்ற இசை குறுந்தகட்டிலிருந்து ஒலிம்பிக்கிற்கு தேவையான இசை டிராக்குகளை பயன்படுத்தவிருக்கிறார்களாம். விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து முன்னணி இசையமைப்பாளர்களும் 'ஒரு எட்டு போய் வருவோமே' என்று லேகா-சொனாட்டோனின் சென்னை கிளைக்கு விசிட் அடிக்கிறார்கள். பக்கத்தில் இருக்கிறது வள்ளுவர் கோட்டம். ஈதல் 'இசை'பட வாழ்தல் என்கிறார் வள்ளுவர் மாதிரியே, லேகா ரத்னகுமாரும்!

சர்வம் படப்பிடிப்பு தளத்தில் இருவர் பலி

அஜீத்தின் பில்லாவை அடுத்து விஷ்ணுவர்த்தன் இயக்கும் படம் சர்வம். ஆர்யா ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்காக செட் போடும் வேலைகள் சென்னை மவுண்ட் ரோடு அருகில் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் நடைபெற்று வந்தது.

பல வருடங்களாக நீதிமன்ற வழக்கில் இருக்கும் இக்கட்டிடம் அவ்வப்போது சினிமா படப்பிடிப்புக்கு மட்டும் வாடகைக்கு விடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை அங்கு செட் வேலைகள் செய்து கொண்டிருந்த இருவர் லிப்ட் அறுந்து விழுந்து பலியாகிவிட்டார்கள்.

மனோஜ் என்பவர்தான் இப்படத்தின் ஆர்ட் டைரக்டராம். திரையுலகை உலுக்கியுள்ள இந்த சம்பவத்தையடுத்து, அங்கு விரைந்த திரைப்படத்தின் பல்வேறு அமைப்பை சேர்ந்த முக்கியஸ்தர்கள் விபத்து எவ்வாறு நடந்தது என்பதை கவலையோடு விசாரித்து வருகிறார்கள். காவல் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.

இலங்கையின் நடுமத்தி எங்கே உள்ளது



இலங்கையின் நடுமத்தி எங்கே உள்ளது தெரியுமா? அனைவரும் கண்டி என்பார்கள்.

ஆனால் உண்மையில் அது கண்டி உன்னஸ்கிரிய வீதியில் மலைப்பாங்கான பகுதியில் உள்ளது. அம்மத்தியை என்றோ நாட்டை ஆண்ட வெள்ளைக்காரர் கல்நட்டு தெரியப்படுத்திச் சென்றுள்ளனர். ஆனால் அது பற்றிப் பலருக்குத் தெரியாது. அக்கல்லின் தோற்றமே இது.

இதனை இன்றும் பார்க்கலாம்.

ஆணாக மாறிய பெண் பறவை

லக்னோ உயிரியல் பூங்காவில் உள்ள அரிய வகை பெண் பறவை, ஆண் பறவையாக மாறி வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே காணப்படும் அரிய இனபறவை, மயில்களை போல நீண்ட தோகை கொண்டது. ஆண் பறவைகளின் உடல் வெண்மை நிறமாக காணப்படும். மார்பு பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும்.

பெண் பறவைகளை விட ஆண் பறவைகள் உயரமாக இருக்கும் ஆண் பறவைகளின் கண் பகுதியை சுற்றிலும், இரத்த சிவப்பு நிறத்தில் திட்டு இருக்கும். பெண் பறவைகள் இயல்பாக எடை மற்றும் உயரம் குறைவாகவும், பழுப்பு நிறத்தில் இருக்கும். லக்னோ உயிரியல் பூங்காவில், இரண்டு ஆண் பறவைகளுடன் பெண் பறவையும் கூண்டில் வளர்ந்து வந்தது.

ஆண் பறவைகளுடன் உறவு கொண்டு, முட்டையிட்டு வந்தது. கடைசியாக 2006ம் ஆண்டு இந்த பெண் பறவை முட்டையிட்டது. அதன் பின்னர், முட்டையிடுவது நின்று போனது. இதன் உடல் பகுதியும், நிறமும் ஆண் பறவை போல மாறியுள்ளது.கண்களுக்கு அருகில் சிவப்பு நிற திட்டு தோன்ற ஆரம்பித்துள்ளது. பெண் பறவைகளுக்கு சுரக்கும் ஹார்மோன்கள் நின்று போய், ஆண் பறவைகளுக்கான ஹார்மோன் சுரப்பிகள் திடீரென்று செயல்படத் துவங்கியுள்ளது தான் மாற்றத்திற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

இப்போது, இது பெண் பறவையாகவே கருத்தப்பட்டாலும், முழுமையாக் ஆண் பறவையாக மாறும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக கருதப்படுகிறது. இது ஆண் பறவையாக மாறி, பெண் பறவையுடன் சேர்ந்து இன விருத்தியில் ஈடுபட்டால், அது மிகப்பெரிய அதிசயமாக கருதப்படும் என்று உயிரியல் பூங்கா அதிகாரிகள் கூறினர்.

மனிதர்களிலும் இது போல ஹார்மோன் சுரப்பிகள் குளறுபடி ஏற்படுவது உண்டு. சில பெண்களுக்கு நடுத்தர வயதின் போது, ஆண் ஹார்மோன் சுரப்பிகள் திடீரென்று செயல்படத்துவங்கும். அப்போது, அவர்களுக்கு முகம் மற்றும் உடலில் முடி முளைக்கத்துவங்கும். இது போல தான், பறவைகக்கும் மாற்றம் ஏற்படுள்ளதாக கருதப்பட்டாலும், ஆண் பறவைக்குரிய அனைத்து அம்சங்களும் இதில் ஏற்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

சுறாவிடமிருந்து புற்று நோய்க்கு மருந்து

புற்று நோய்க்கு புதுப்புது மருந்துகளை கண்டு பிடிக் கும் ஆராய்ச்சியில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஈடுபட்டனர்.

இந்த ஆராய்ச்சிக்குப் பிறகு அவர்கள் சுறா மீன் களின் செல்களில் இருந்து புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடித்துள்ளனர். சுறாமீன் செல்களில் உள்ள மரபணுக்களை எடுத்து அவற்றுடன் சோதனை கூடத்தில் புரோட்டீன் களை சேர்த்து அவற்றை நோய் எதிர்ப்பு செல்களாக மாற்றினார்கள்.

இந்த செல்களை உடலில் செலுத்தியதும் அந்த நோய் எதிர்ப்பு செல்கள் புற்று நோய் செல்களை அழித்து விட்டன. அது மட்டு மல்ல மலோசியா, வாத நோய், முட்டு வலி போன்றவற்றுக் கும் இதை மருந்தாக பயன் படுத்தலாம்.

தென் தமிழின் வீழ்வும் திராவிடச் சுயம்புகளும்

"தமிழில் என்ன இருக்கிறது? அது ஒரு காட்டுமிராண்டி மொழி! நீங்கள் உங்கள் வீடுகளிலும் ஆங்கிலத்தையே பேச்சு மொழியாகப் பயன்படுத்துங்கள்!" என்றெல்லாம் பெரியார் ஒரு கட்டத்தில் வெளிப்படையாகவும் தீர்மானமாகவும் பேசினார்.

தமிழ் என்னும் அடையாளமில்லாமல் தமிழர்கள் ஓரினமாக எப்படி ஒருமைப்பட முடியும் என்பதற்கான விடை அவரிடம் இல்லாவிட்டாலும்கூட, மொழிப்பற்றைத் "தாய்ப்பால் பைத்தியம்' என்று அவர் நகையாடத் தயங்கவில்லை.

அவருக்கு ஆரிய மொழிதான் அடிமைப்படுத்தக் கூடாது: ஆங்கில மொழி அடிமைப்படுத்தலாம்! ஆங்கிலம் அறிவு மொழி என்பது அவருடைய தீர்மானமான கருத்து! உலகம் பெற்றிருக்கும் உயரறிவை எந்த மொழி வாயிலாகவும்பெற்று உயர்வடையலாம் என்னும் எளிய உண்மையைச் சிந்தனையாளர் பெரியார் ஏற்கவில்லை.

பெரியார் கறுப்புத் தமிழனை ஒரு பரிசுத்த வெள்ளையனாக்க விரும்பியது போலவே, அவருக்கு முந்தைய காலத்தில் இந்தியர்கள் அனைவரையுமே வெள்ளைக்காரர்களின் எதிரொலியாக்க ஒருவன் நினைத்தான். அவன் பெயர் மெகாலே!

அதற்கு அவன் ஆங்கில மொழியைக் கருவியாகக் கொண்டான். அதை இந்தியாவின் பயிற்று மொழியாக்கினான். நியூட்டனின் விதி, குறிக்கணக்கீட்டியல், பிரெஞ்சுப் புரட்சி எனக் கற்கத் தகுந்த எதையுமே ஆங்கில மொழி வாயிலாக மட்டுமே கற்பதற்குப் பிரிட்டிஷ் ஆட்சிப் பின்புலத்தில் வகை செய்தான் அவன்!

"நிறத்தால் அவர்கள் இந்தியர்களாக இருப்பார்கள்; ஆனால் நடையால், உடையால், பழக்க வழக்கத்தால், பண்பாட்டால் அனைத்தாலுமே அவர்கள் ஐரோப்பியர்களாக மாறுவார்கள்" என்று அடித்துச் சொன்னான். நூற்றி ஐம்பது ஆண்டுகள் வெள்ளைக்காரன் இந்தியாவை எல்லா வல்லமையோடு ஆண்டும். மெகாலேயின் கனவுகள் மெய்ப்படவில்லை. அவை சுக்கல் சுக்கலாக நொறுங்கிப் போயின.

இந்தியர்கள் வெள்ளத்தோடு போய்விடாமல் அவர்களைத் தடுத்தாட்கொண்டு, இந்தியமொழிகளையும், இந்தியப் பழக்க வழக்கங்களையம், நடை உடைகளையும், பண்பாட்டையும் கட்டிக்காத்தவன் ஊழித் தீயென போர்பந்தரில் தோன்றிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி!

அந்தச் சான்றோன் உருவாக்கிய வார்தா கல்விக் கொள்கையை 1937 இல் ஆட்சிக்கு வந்த ராஜாஜி நிறைவேற்றினார். மெகாலேயின் ஆங்கிலப் பயிற்று மொழித்திட்டம் புதைகுழிக்கு அனுப்பப்பட்டு, தமிழ் பயிற்று மொழியாக்கப்பட்டது. வெள்ளையர்களின் கண் முன்னாலேயே இது நடந்தது. தமிழ் அறிவியலைப் பயிற்றும் ஆற்றல் சான்றது என்பதை மெய்ப்பிக்கத் திண்ணை இரசாயனம் பற்றி நூல் எழுதினார் ராஜாஜி.

இதற்காகத் "தமிழ் கொண்டான்" என்பது போன்ற பட்டங்களை அன்றைக்கு யாரும் ராஜாஜிக்கு வழங்கவில்லை. வசன கவிஞர்களை விட்டுச் சொரியச் சொல்லி சுகங்காணும் பழக்கம் அன்றைய முதலமைச்சர்களிடமில்லை! கால்டுவெல் கால்கோல் விழா நடத்தி, மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை, மறைமலை அடிகள் ஆகியோர் தொடங்கிய தமிழ் மறுமலர்ச்சி இயக்கம் புலவர்கள் இயக்கமாகச் சிறுத்துவிடாமல், ராஜாஜி தோற்றுவித்த தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தின் மீது படர்ந்து, ஊற்றம் பெற்றது!

ஆங்கில மொழி சிறந்தது; ஆங்கிலேயப் பழக்கவழக்கங்கள் சிறந்தவை என்னும் மோகத்தைச் சம்மட்டி கொண்டு தகர்க்காவிட்டால், விடுதலை அடைந்தாலும் மக்கள் அடிமை மனப்பான்மையிலே வாழ்வர் என்று காந்தி பிழையறச் சிந்தித்தார்

அடிமை வாழ்வை மறுக்க முதலில் ஆங்கிலத்தை மறுக்க வேண்டும் என்பதில் தொடங்கினர். இந்திய மொழிகளின் பழம் பெருமைகள் தோண்டி எடுக்கப்பட்டன. தாய்மொழியில் பேசுமாறும் எழுதுமாறும் மக்கள் தூண்டப்பெற்றனர். ஆங்கிலம் அறிந்த காந்தி தன்னுடைய வாழ்க்கை வரலாற்று நூலைத் தன் தாய்மொழியான குஜராத்தியில் எழுதினார். ஆங்கிலம் அதை மொழி பெயர்த்துக் கொண்டது. அதைத்தானே அது காலமெல்லாம் செய்து கொண்டிருந்தது.

அதனுடைய தொடர்ச்சியாக அண்ணா, தமிழ் மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்து, அதனை மக்கள் இயக்கமாக்கி வெற்றிபெறச் செய்தார். 1950 க்கும் 1970 க்கும் இடைப்பட்ட காலம் தமிழின் பொற்காலம்! அது அண்ணாவின் காலம்! ஒரு தலைவனின்வெற்றி அவன் வாழ்ந்த காலத்து மக்களின் வாழ்க்கை முறைகளைக் கொண்டே அறியப்படும். தலைவனின் பிறந்த நாள் விழாக்களில் வசனகவிஞர்கள் பாடுவதைக் கொண்டு அறியப்படுவதில்லை.

1970 க்குப் பிறகு தமிழ் உணர்வு படிப்படியாகத் தேயத் தொடங்கியது. "திராவிடச் சுயம்புகள்" என்று சொல்லிக் கொண்டவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கியும் அது வெறும் உதட்டுச் சேவகமாக முடிந்து போனது. 1970 இல் தொடங்கிய சரிவு 1991 இல் தொடங்கிய உலகமயமாக்கலால் விரைவு பெற்றது. ஒரு வகையில் தமிழின் இருண்ட காலம் தொடங்கிவிட்டது எனலாம்!

வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில் கூடத் தாய் 'அம்மா' என்றே அழைக்கப்பட்டாள். 'மம்மி'யாகவில்லை, மாமியார் அத்தை என்றே அழைக்கப்பட்டார். அன்டியாகவில்லை! ஒரு பெண்ணை அவர் யாராக இருந்தாலும் எந்த வயதினராக இருந்தாலும் "அம்மா' என்று விளித்துப் பேசிய தமிழ்நாட்டில் இப்போது பெண்களெல்லாம் "மேடம்' ஆகிவிட்டார்கள்.

பாவாடை, தாவணி போய், பஞ்சாபிய உடையான சுடிதாரோடு ஒரு துப்பட்டாவும் வழக்கிற்கு வந்து இப்போது அவையும் போய், ஒரு முழுக்காற்ச்சட்டையும் ஒரு பனியனும் இளம் பெண்களின் உடையாகிவிட்டது. மார்புச் சேலை போடும் உரிமை வேண்டும் என்று ஒரு வகுப்பார் சென்ற காலங்களில் போராடியதுபோய், அது வேண்டாம் என்று போராடும் காலம் வந்துவிட்டது. வசதியற்ற வீட்டுப்பிள்ளைகள் மட்டுமே தமிழ்வழிப் பள்ளிகளுக்குச் செல்கின்றனர். வள்ளுவனின் தாய்மொழி இன்று வறியவர்களின் மொழியாகிவிட்டது!

நீதிமன்றங்கள் முழுவதும் எண்ணிலடங்கா மணமுறிவு வழக்குகள்! நான்கைந்து முறை கணவனை மாற்றிக்கொண்டவள் அரிஸ்டாட்டிலின் தர்க்க விதிகளைப் பயன்படுத்தி அளப்பரிய வகையில் ஆணாதிக்கம் பற்றி அலசி எடுக்கிறாள்!

அகத்திணை பெற்ற மொழி உலகிலேயே தமிழ் ஒன்றுதான்! ஆனால் தமிழ்நாடு அமெரிக்க அழி கலாசாரத்திலிருந்து வாழ்க்கையைப் பெற்றுக் கொள்ள புறப்பட்டிருக்கிறது. தாயை அம்மா என்றழைக்கக் கூடத் தாய்மொழி தேவைப்படாதபோது தமிழ் செம்மொழியாக இருந்தாலென்ன? குறுமொழியாக இருந்தாலென்ன?

தமிழ்நாட்டை மராட்டியர்கள், நாயக்கர்கள், நவாபுகள், ஆங்கிலேயர் என்று பலரும் ஆண்டார்கள். அவரவர் ஆட்சிக் காலத்தில் அவரவரின் தாய்மொழியே அரண்மனை மொழியாக இருந்தது. ஆங்கிலேயரைத் தவிர மற்ற அனைவரையும் தமிழ் உள்ளிழுத்து, உறிஞ்சி அவர்களையும் ஒரு ஜாதியாக்கி உள்ளடக்கிக் கொண்டுவிட்டது.

இப்படிப் பெரியார்களாலும், மெகாலேக்களாலும், ஆங்கிலேய நேரடி ஆட்சிகளாலும் அசைக்க முடியாதபடி நங்கூரம் பாய்ச்சி நின்ற தமிழ், 1991 க்குப் பிந்தைய உலகமயமாக்கலால் ஆட்டம் காணும் நிலைக்கு உள்ளாகி இருப்பது வரலாற்று அவலம்.

தமிழனின் நடை, உடை, பழக்கவழக்கம், பண்பாடு, நயத்தக்க நாகரிகம் ஆகிய அனைத்தும் ஆட்டம் காண்பதற்கு அதுதான் காரணம்! கொழுத்த பணம் சுரண்டலின் வெளிப்பாடு என்னும் கோட்பாடு சுட்டெரிக்கப்பட்டுவிட்டது. நுகர்ச்சி வெறி உலகம் முழுவதும் ஊழிக்கூத்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

பணம் வழிபாட்டுக்குரியது என்னும் நச்சுக் கருத்தை எங்கெங்கும் வெற்றிகரமாக விதைத்ததிலேதான் உலகமாக்கலின் வெற்றியே அடங்கி இருக்கிறது. ஒரே ஒரு கொடி, ஒரே ஒரு நாட்டின் ஆதிக்கம், ஒரே ஒரு மொழி, ஒரே ஒரு நாகரிகம் என்பதை நோக்கி உலகு செலுத்தப்படுகிறது. நுண்ணிய வேறுபாடுகளும், பண்பாட்டுப் பன்மையும் அழிக்கப்பட்டால்தானே உலகை ஒரு கொடி, ஒரு மொழி, ஒரு ஆதிபத்தியத்தின் கீழ் ஒருமைப்படுத்த முடியும்!

அதற்கு புஷ்ஷின் மகள் வந்து தமிழ்நாட்டை ஆள வேண்டியதில்லை. கருணாநிதியே ஆள்வார். ஆனால் உலகின் மெக்காவாக வாஷிங்டன் மாறிவிடும்! இந்த ஆதிபத்தியதை உலகம் முழுவதும் தடுத்து நிறுத்த சோவியத் இல்லாத நிலையில் இஸ்லாமிய நாடுகள் மட்டுமே இதில் முனைந்து நிற்கின்றன. நடை, உடை, நாகரிகம், பண்பாடு, அரேபிய மொழி ஆகியன எதிலும் அமெரிக்கக் கலப்பின்மை என்று எந்தப் பாதிப்பும் இல்லாமல் வாழ்வதோடு, அந்த ஆதிபத்தியத்தை எதிர்த்துப் போரும் நடத்துகின்றன!

நம்முடைய ஆட்சியாளர்கள் உலகமயமாக்கலை எதிர்த்துக் கருத்துருவாக்கம் செய்யக்கூடப் போதுமானவர்களில்லை. அவர்களின் குடும்பமயமாக்கலே இன்னும் முடிந்த பாடாய் இல்லையே.

ஒரு தசாப்தத்தின் பின் வளர்த்தவரைத் தேடி வீடு திரும்பிய புறா

ஸ்பெயினில் நண்பர் ஒருவருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட பந்தயப் புறா 10 ஆண்டுகளின் பின்னர், அதனை வளர்த்துவந்த பழைய எஜமானரிடமே பறந்து திரும்பி வந்துள்ளது.

பிரிட்டனின் நார்த் யார்?க்ஷர் நகரைச் சேர்ந்த பந்தயப் புறா ஆர்வலரான 76 வயதுடைய டினோ ரியர்டென் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டிஷ் றோயல் விமானப் படைக்கு உதவிக்காக பந்தயப் புறாக்களை பழக்கியவர். இவர் வளர்த்துவந்த பெண் புறா பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட தூரம் பறந்து சாதனை படைத்தது.

கடந்த 1998 ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் அல்ஜெரிக்ஸ் நகரில் இருந்து பறக்கவிடப்பட்ட பெண் புறா 1,200 மைல்கள் பறந்து நார்த் யார்?க்ஷரில் உள்ள ஸ்கிப்டன் பகுதியில் உள்ள ரியர்டன் வீட்டுக்குத் திரும்பியது. அப்போது, இந்த புறாவின் சாதனை பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. இந்த சாதனையைத் தொடர்ந்து நார்த் யார்?க்ஷரை சேர்ந்த இன்னொரு புறா ஆர்வலருக்கு, இந்த புறாவை அளித்தார் ரியர் டன். ஆனால், உடனடியாக ரியர்டன் வீட்டுக்குத் திரும்பிவந்துவிட்டது.

அதே ஆண்டு லன்காஷைர் பகுதியைச் சேர்ந்த தனது நண்பர் அல்ப் பின்னிங்டன் என்பவருக்கு இந்த புறாவை பரிசாக அளித்தார். கடந்த 10 ஆண்டுகளாக அல்ப் பின்னிங்டனிடம் வளர்ந்து வந்த 13 வயது பெண் புறா திடீரென்று தந்தையர் தினமான ஜூன் 16 ஆம் திகதி ரியர்டன் வீட்டுக்கு திரும்பிவந்தது. 10 ஆண்டுக்குப் பின், தனது எஜமானரை தேடி, அவரிடமே புறா திரும்பி வந்திருப்பது பெரிதும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

புறா மீண்டும் வீடு திரும்பியதுடன் ரியர்டனை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் நடந்து வந்தது. புறாவை எடுத்து சோதித்த போது அதன் வலது காலில் பொருத்தப்பட்டு இருந்த வளையம் இருந்தது தெரியவந்தது. இதன் மூலம், 10 ஆண்டுக்கு முன் தனது நண்பருக்கு பரிசளிக்கப்பட்ட புறா என்பதை ரியர்டன் புரிந்து கொண்டார். இனி தனது வீட்டிலேயே தொடர்ந்து அந்த புறாவை வளர்க்க முடிவு செய்துள்ளார்.

ரஜினியின் ஆயுதத்தை பயன்படுத்திய கலைஞர்!

"இதோ, அதோ' என்று எதிர்பார்க்கப்பட்ட "தி.மு.க. பா.ம.க. கூட்டணி விவகாரம்' முடிவுக்கு வந்துவிட்டது.

முதல்வர் கருணாநிதி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அறிக்கைகள், விமர்சனங்கள், வெளிப்படையான கருத்துகள் என்று தி.மு.க. மீது "போர்' தொடுத்துக் கொண்டிருந்தார் பா.ம.க. நிறுவுனர் டாக்டர் ராமதாஸ்.

சென்ற சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் வடமாவட்டங்களில் பா.ம.க.விற்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையைச் சமாளித்து பா.ம.க.வை உயிரோட்டமாக வைத்துக் கொள்வதற்கே இப்படியொரு "விமர்சன' ஆயுதத்தைக் கையிலெடுத்தார் ராமதாஸ். ஆனால் அந்த ஆயுதம் அவரை நோக்கியே திரும்பிப் பாய்ந்தது என்னவோ, காடுவெட்டி குருவின் புண்ணியத்தால் மட்டுமே!

காடுவெட்டி குருவின் பேச்சு, தி.மு.க.வினரைக் கொதிப்படைய வைத்தது. அதேநேரத்தில் அப்போது காங்கிரஸ், "இங்கும் அங்குமாக' அல்லாடிக் கொண்டிருந்த நேரம்! "விஜயகாந்துடன் கூட்டணி வைத்தால் என்ன? அ.தி.மு.க. என்ன நிரந்தர எதிரியா?' போன்ற எண்ணங்கள் காங்கிரஸ் மேலிடப் பிரதிநிதியாக வந்த அருண்குமார் போன்றோரால் எழுப்பப்பட்டன.

அதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களின் ஒரு பகுதியினரின் (நிதியமைச்சர் ப.சிதம்பரம் உட்பட) ஆதரவும் இருந்தது. அதைத் தொடர்ந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் உணர்வுகளுடன் சம்பந்தப்பட்ட ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தால் கர்நாடகாவிற்கும் தமிழகத்திற்கும் அறிக்கைப் போர் நடந்தது.

இந்த இரு விடயங்களும் காடுவெட்டி குருவின் சி.டி.மீது அதிக அக்கறை காட்ட முடியாமல் தி.மு.க.வைத் தடுத்து நிறுத்தியது. இதைப் பயன்படுத்திக் கொண்டுதான் "காங்கிரஸுடன் கூட்டணி' என்ற ஒரு புது ஃபார்முலாவை விதைத்தார் டாக்டார் ராமதாஸ். இந்த விஷயங்கள் எல்லாமே இப்போது கிளியர் ஆகிவிட்டன! காங்கிரஸ் தி.மு.க.வுடன் தான் இருக்கும் என்ற சூழ்நிலை உறுதியாகியுள்ளது.

கர்நாடக தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கும் பெரிய பிரச்சினை இல்லை என்றே தெரிகிறது. ஆனால் தி.மு.க. மீதான டாக்டர் ராமதாஸின் "அட்டாக்' மட்டும் குறையவில்லை என்ற கோபம், தி.மு.க. தலைமைக்கு உண்டு. அதைவிட "தி.மு.க. பா.ம.க. தொண்டர்கள்' மத்தியில் ஆங்காங்கே தொகுதிக்குத் தொகுதி ஒற்றுமை சீர்குலைந்த நிலையில் இருக்கிறது.

இப்படி அனைத்துக் காரணங்களையும் அலசிப் பார்த்த முதல்வர் கருணாநிதி பா.ம.க.வை இப்படியே விட்டால் தனது "லீடர்ஷிப்' மீதே மக்களுக்குச் சந்தேகம் வந்துவிடும் என்ற முடிவுக்கு வந்தார். அதன் எதிரொலிதான் முரசொலி "சேது' இல்லத் திருமண விழாவில் காடு வெட்டி குருவின் சி.டி.யை "டச்' பண்ணி, ""இப்படிப்பட்ட கட்சியுடன் உறவு தொடருவதுதான் கூட்டணிக்கு இலக்கணம் என்றால் அது பெரிய அவமானம்' என்ற கடுமையான சொற்களைப் பயன்படுத்தினார் முதல்வர் கருணாநிதி.

அதற்கு டாக்டர் ராமதாஸிடம் இருந்து, "காடுவெட்டி குரு பேசியதில் எனக்கு உடன்பாடில்லை' என்று வெளிப்படையான மறுப்பு அறிக்கை வரும் என்றே எதிர்பார்த்தார். ஆனால் அவரோ, "அது பொதுக்குழுவில் பேசியது. ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் பேசியது' என்பது போல் பதிலளித்து, காடுவெட்டி குருவின் பேச்சை நியாயப்படுத்தினார். அதன்பிறகு தி.மு.க.வின் கடலூர் மகளிர் மாநாடு நடைபெற்றது. இதற்கிடையில் திருமாவளவன், தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி போன்றோர் "கூட்டணிக்குள் ஒற்றுமை வேண்டும்' என்ற கருத்தை வலியுறுத்தினர்.

அதை ஆமோதிக்கும் வகையில் கடலூர் மகளிர் மாநாட்டில் பத்திரிகையாளர் பற்றிக் குறிப்பிட்டுப் பேசிய முதல்வர் கருணாநிதி, ""இந்த மாநாட்டோடு இவர்களுக்கும் வேறு சில கட்சிகளுக்கும் ஊடல் விளையுமா? கூடல் முறியுமா?' என்ற அந்த எண்ணத்தோடு, அந்த ஆசையோடு கேட்கிறவர்கள் எல்லாம் உண்டு. உங்கள் அவசரத்திற்கு நானும் அவசரப்பட முடியாது. யாரோ சில பேர் அவசரப்பட்டு ஏதேதோ சொல்கிறார்கள் என்பதற்காக அதே பாணியில் நானும் கட்சி நடத்த முடியாது. எல்லாம் 17 ஆம் திகதி உயர்நிலை செயல்திட்டக் குழுவில் முடிவு செய்யப்படும்' என்ற ரீதியில் பேசினார்.

இதன் மூலம் 48 மணி நேரம் பா.ம.க.வுக்கு "டைம்' கொடுத்தார். இந்த அவகாசத்தைப் பயன்படுத்தியாவது காடுவெட்டி குருவின் பேச்சுக்கு ஓப்பனாக டாக்டர் ராமதாஸ் கண்டனம் தெரிவிப்பார் என்றே கருதினார் முதல்வர். ஆனால், அந்த வாய்ப்பையும் டாக்டர் ராமதாஸ் நழுவவிட்டார். மாறாக இது தொடர்பாக அப்போது முதல்வர் எழுதிய கடிதத்தையும் வெளியிட்டு, "மார்ச்சில் என் மீது நம்பிக்கை வைத்தவர் இப்போது நம்ப மறுப்பது ஏன்?' என்றே கேள்வி எழுப்பினார்.

அதேநேரத்தில் மத்திய அமைச்சர் அன்புமணியோ, ""அவர் பேசுவதை சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள். கூட்டணி முறிவு பற்றியெல்லாம் யோசிக்க வேண்டாம்' என்று தி.மு.க. தரப்பிடம் சொல்ல, அவர்களிடமிருந்தோ, "எங்களால் உங்கள் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது என்ற உத்தரவாதத்தைத் தருகிறோம். ஏனென்றால் உங்களுக்கும், தி.மு.க.வுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை' என்றே சொல்லியுள்ளார்கள்.

இப்படி பரபரப்பான சூழ்நிலையில், தி.மு.க.வின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூடுவதற்கு முன்பு திங்கட்கிழமையன்று இரவு, சி.ஐ.டி. நகரில் உள்ள முதல்வர் இல்லத்தில் சீனியர் தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இரவு 7.30 மணியிலிருந்து 9 மணி வரை நடைபெற்ற அக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் அன்பழகன், ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன் ஆகியோர் முதல்வருடன் பா.ம.க. விவகாரம் குறித்து விவாதித்தார்கள். இந்த "சீனியர்கள் கூட்டம்' முடிந்த மறுநாள் (கடந்த செவ்வாய்க்கிழமை) உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காடுவெட்டி குருவின் சி.டி. பற்றிய விபரங்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, "தலைவரையே விமர்சித்துவிட்டு, அதற்க வருத்தமும் தெரிவிக்காத நிலையில், பா.ம.க.வுடன் கூட்டணியைத் தொடருவதில் அர்த்தமில்லை' என்று ஆணித்தரமாக வாதத்தை வைத்தது அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்தானாம்.

இவருக்கும் பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கும் ஏற்பட்ட மோதலில்தான் "சேலத்தில் தி.மு.க.வுடன் கூட்டணி கிடையாது' என்று அம்மாவட்ட பா.ம.க. முடிவு செய்து முன்பு அறிவித்தது. அதேபோல் அமைச்சர் துரைமுருகனும் கருத்து தெரிவித்துள்ளார். இருவருமே வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தக் குழுவில் பேசியவர்கள் அனைவருமே, "தலைவரின் முடிவுதான் இறுதியானது. அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்' என்ற கருத்தை முன்வைத்தார்கள். இதைத் தொடர்ந்து ஒன்பது பக்கத் தீர்மானம் வெளியிடப்பட்டது.

அதில் காடுவெட்டி குருவின் பேச்சும் விபரமாகக் கொடுக்கப்பட்டு, கடைசியில், ""எவ்வளவு இழிவாக, தரக்குறைவாக, தன்மான உணர்வைப் பறிக்கும் விதமாக கேவலப்படுத்தப்பட்டாலும், அப்படிக் கேவலப்படுத்துகிறவர்களோடு உறவை நீடிப்பதுதான் கூட்டணியின் இலக்கணம் என்று ஏற்றுக் கொள்ள இயலாத காரணத்தால், அவர்களையும் (பா.ம.க.) இணைத்துக் கொண்டு இந்தக் கூட்டணியை இனித் தொடர முடியாது என்ற நிலையை இந்த உயர்நிலை செயல்திட்டக் குழு வருத்தத்தோடு அறிவிக்கின்றது' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தத் தீர்மானம் காடுவெட்டி குருவின் வன்முறைப் பேச்சுகளை மையமாக வைத்து எழுதப்பட்ட தீர்மானம். சூப்பர் ஸ்டார் ரஜினியின் கருத்தை மையமாக வைத்தே இது போன்றதொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாம். சென்ற பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு டாக்டர் ராமதாஸுக்கும் ரஜினிக்கும் இதேபோல் பிரச்சினை வெடித்தது. அப்போது "யாருக்கு வாக்களிக்க வேண்டும்?' என்பது குறித்து சூப்பர் ஸ்டார் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "எனக்குப் பிடிக்காதது இரண்டு. ஒன்று ஊழல்; இரண்டாவது வன்முறை, டாக்டர் ராமதாஸ் வன்முறையின் ராஜாவாகத் திகழ்கிறார். அரசியல் என்ற பெயரில் இம்மாதிரியான ராட் சஸ செயல்களிலும், அராஜகங்களிலும் வன்முறைகளிலும் ஈடுபடும் டாக்டர் ராமதாஸை நான் என்னுடைய தனிப்பட்ட பாதிப்பிற்காக எதிர்க்கவில்லை. இந்த தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக எதிர்க்கிறேன்' என்று கூறி, "பா.ம.க. போட்டியிடும் ஆறு தொகுதிகளிலும் அந்தக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்' என்று கேட்டுக் கொண்டார்.

"வன்முறைக்கு ஆதரவு' பற்றிய ரஜினியின் அதே ஆயுதத்தைக் கையிலெடுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்று "காடுவெட்டி குருவின் வன்முறைப் பேச்சை' காரணம் காட்டி, "பா.ம.க.வுடன் கூட்டணி இல்லை' என்று அறிவித்துள்ளார். "கூட்டணி முறிவு' அறிவிப்பின் மூலம், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகள் அமைவதில் "முதல் மூவ்' பண்ணியுள்ளார். முதல்வர் கருணாநிதி இதன் மூலம் "கவுண்ட்டர் மூவ்' செய்யும் பணியையும், அ.தி.மு.க.வுக்கு என்று ஒரு தேர்தல் அணியை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியத்தையும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தியுள்ளார்.

இப்போதைக்கு விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், சரத்குமார் ஆகியோர் ஜெ.வின் எதிரே இருக்கிறார்கள். தேசியக் கட்சி வரிசையில் பா.ஜ.க. காத்திருக்கிறது. "பா.ம.க.வும் விஜயகாந்தும் ஒரே அணியில் நீடிக்க முடியுமா?' என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். ஏனென்றால் 2001 இல் தேர்தல் முடிந்து முதல்வரானவுடன் அளித்த பேட்டியில், "மூப்பனாருக்கும், ஆதரவு தெரிவித்த மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் நன்றி' என்று ஜெ.சொன்னாரே தவிர, ராமதாஸ் பெயரைச் சொல்லி நன்றி சொல்லவில்லை. மூப்பனார் மறைவிற்குப் பிறகு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஜி.கே.வாசனுக்கு திருச்சி மாநகராட்சியைக் கொடுத்தார். ஆனால் எவ்வளவோ கேட்டும் சேலம் மாநகராட்சியை பா.ம.க.வுக்குக் கொடுக்காதது மட்டுமின்றி, அக்கட்சியுடன் கூட்டணியே வேண்டாம் என்று உதறித்தள்ளினார் ஜெ.

லேட்டஸ்டாக பா.ம.க. விலக்கப்பட்ட விஷயத்தை அ.தி.மு.க.வின் அதிகாரப் பூர்வ நாளேடான "நமது எம்.ஜி.ஆர்.' கட்சி பக்கத்தில் சிறிய செய்தியாக மட்டுமே போட்டுள்ளது. இந்தச் சூழ்நிலைகளை வைத்துப் பார்க்கும் போது, "பா.ம.க. விடயத்தில் அ.தி.மு.க. அவசரப்படவில்லை' என்பது தெரிகிறது. ஆகவே அடுத்து ஜெயலலிதா செய்யப்போகிற "கூட்டணி மூவ்' வருகின்ற பாராளுமன்றத் தேர்தல் பந்தயத்தில் பா.ம.க.வுக்கு முக்கியத்துவம் கிடைக்க உதவுமா? அல்லது தனிமைப்படுத்தப்படும் சூழ்நிலையை உருவாக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

கல்வித்துறையில் தேசிய கணிப்பீட்டு முறைமை

கல்வியினூடாக வறுமையைக் குறைப்பதாயின், மாணவரின் பாடசாலை சேர்வு வீத அதிகரிப்பு, பாடசாலைக் கல்வியை முடித்துக்கொள்வோரின் வீதத்தின் அதிகரிப்பு என்பன மட்டும் போதாது; மாணவர்களில் ஏற்படும் கல்வித்தேர்ச்சி, அறிவாற்றல் அதிகரிப்பு என்பன வறுமைத் தணிப்புக்கு முக்கியமானவை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கான கல்வியின் முழு ஆற்றலையும் பெற்றுக்கொள்ள உயர்தரமான அறிவும் அறிவுத்திறன்களும் மாணவர்களில் வளர்க்கப்படல் வேண்டும்.

வளர்முக நாடுகளில் பாடசாலைக் கல்வியைப் பெறும் மாணவர்களின் கற்றல் தேர்ச்சி மிகவும் குறைவு என ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நாடுகள் மாணவர்களின் கல்வித்தேர்ச்சிகளை முறையாகக் கண்காணிப்பதில்லை; மாணவர் சித்தி பற்றிய தமது சொந்த கணிப்பீடுகளை நடத்துவதில்லை; சர்வதேச, பிராந்திய ரீதியான கணிப்பீடுகளிலும் கலந்து கொள்வதில்லை. இவ்வாறான கணிப்பீடுகள் இல்லாமையால் மாணவர்களின் கல்வித் தேர்ச்சி பற்றியும் காலப்போக்கில் அதில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றியும் அறிந்துகொள்ள முடியாதுள்ளது. கல்வியின் தராதரங்களை மேம்படுத்த அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் தாக்கம், நாட்டின் பின்தங்கிய பிரிவினர்களின் கல்விச் சித்தி போன்ற விடயங்கள் பற்றி எதுவும் அறியமுடியவில்லை.

1990 களிலும் பின்னர் 2000 இல் தொடங்கிய தசாப்தத்திலும் தேசிய, சர்வதேசிய ரீதியாக மாணவர்களின் கல்விச் சித்தி பற்றிய மதிப்பீடுகள் பிரசித்தி பெற்றுவிட்டன. கல்வியின் தராதரம் பற்றித் தீர்மானிப்பதற்கான முக்கிய கருவிகளாக அவை கருதப்படுகின்றன. இக்கணிப்பீடுகள் இரு வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தவை;

முதலாவதாக, கோளமயமாக்கம் அதிகரித்து வருவதையும், "யாவருக்கும் கல்வி' என்னும் கொள்கையில் அக்கறை செலுத்தப்பட்டு வருவதையும் இது காட்டுகின்றது. சர்வதேச ரீதியான கணிப்பீடுகள் கோலமயமாக்கத்தின் ஒரு விளைவேயாகும். இதுவரை காலமும் பாடசாலைகளின் வளங்களைக் கொண்டு கல்வித்தராதரங்களை மதிப்பிடும் போக்கில் ஏற்பட்டு வரும் மாற்றத்தையும் இது காட்டுகின்றது. பாடசாலையின் பௌதீக வளங்கள், ஆசிரியர் பயிற்சி, பாட ஏற்பாட்டு மற்றும் கற்பித்தல் சாதனங்கள் பற்றிய வள மதிப்பீட்டை விடுத்து, பாடசாலைக் கல்வியினால் மாணவர் பெற்ற கல்விச் சித்தியைக் கணிப்பீடு செய்யும் புதிய போக்குத் தென்படுகின்றது.

இன்று மாணவர்களின் கல்வித் தேர்ச்சியில் அக்கறை செலுத்தக் காரணம் மனித வளவிருத்தியில் புதிதாகச் செலுத்தப்படும் கவனமாகும். பொருளாதார அபிவிருத்தியின் மூலப்பொருட்களும் உழைப்பையும் விட அறிவு முக்கிய பங்கு கொள்கின்றது; சர்வதேச சந்தையில் நாட்டின் போட்டித்தன்மையையும் அதன் பொருளாதார வளர்ச்சி வீதத்தையும் தீர்மானிப்பதில் அறிவும் திறன்களையும் கொண்டோர் முக்கிய பங்கு கொள்கின்றனர் என்பதால் கல்வித் தேர்ச்சியில் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. இப்பின்புலத்தில் இன்று கல்வி முறைகளின் செயலாற்றத்தினை அறிய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

மாணவர்களின் கல்விச்சித்தி பற்றிய தேசிய கணிப்பீடுகளைக் கொண்டு, கல்வி முறைகளின் செயலாற்றத்தை அறியலாம். இத்தேசிய கணிப்பீடு குறிப்பிட்ட தரத்தில் (Grade) அல்லது குறிப்பிட்ட வயதினருக்கு, பாட ஏற்பாட்டின் ஒரு துறையில் நடத்தப்படலாம். மாணவர் சித்தி பற்றிய இக்கணிப்பீடு, கல்விமுறையின் சித்தி அடைவு பற்றிய ஒரு மதிப்பீட்டைத் தருகின்றது. கல்வி முறையின் சில பிரதான அம்சங்கள் பற்றிக் கொள்கை வகுப்பாளர்கள் தகவலைப் பெற்றுக்கொள்ள இத்தேசிய கல்வி ஆய்வு உதவும். மாணவர்களுக்கு அல்லது அவர்களில் சிலருக்கு (Sample) நடத்தப்படும். இக்கணிப்பீட்டோடு, ஆசிரியர்கள், பெற்றோர்கள், அதிபர்கள் போன்றோரும் பல பின்னணித் தகவல்களை வழங்குதல் வேண்டும். மாணவர்களின் சித்தி! பற்றிய தகவல்களோடு (புள்ளிகள்/ தரங்கள்) வினாக் கொத்துகள் மூலம் பெறப்படும் பின்னணித் தகவல்கள் ஒப்பிட்டுப் பார்க்கப்படும். மாணவரின் சித்தியில் செல்வாக்குச் செலுத்தும் குடும்பப் பின்னணி, ஆசிரியர் பயிற்சி, ஆசிரியர் உளப்பாங்கு, பாட ஏற்பாட்டுத் துணைச் சாதனங்கள் என்பன பற்றியும் ஆராயப்படும்.

பொது அம்சங்கள்

உலகின் பல பாகங்களிலும் நடத்தப்படும் தேசிய கணிப்பீட்டு முறைமைகளில் பல பொது அம்சங்கள் உண்டு; சகல கணிப்பீடுகளும் மொழியறிவு/ எழுத்தறிவு, கணிதத்திறன்கள்/ எண்ணறிவு பற்றியன. சில நாடுகளில் இரண்டாம் மொழி, விஞ்ஞானம், திசை, சமூகக்கல்வி என்பனவும் உள்ளடக்கப்படுகின்றன. சகல தேசிய கணிப்பீடுகளிலும் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் பங்குகொள்கின்றனர். மேலும், கட்டாயக்கல்வியின் முடிவில் இக்கணிப்பீடுகள் நடத்தப்படுகின்றன.

வேறுபாடுகள்

தேசிய கணிப்பீட்டு முறைமைகளில் நாட்டுக்கு நாடு வேறுபாடுகளும் உண்டு. சில நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் கணிப்பீடுகள் நடத்தப்படுகின்றன. வெவ்வேறு பாடப்பரப்புகளில் கணிப்பீடு செய்யப்படுவதும், உண்டு. வேறு சில நாடுகளில் கணிப்பீடுகள் அடிக்கடி நடைபெறுவதில்லை. சில நாடுகளில் கல்வி அமைச்சும் வேறு சில நாடுகளில் தேசிய ஆராய்ச்சி நிலையம், பரீட்சைச் சபை, பல்கலைக்கழகங்கள் எனப் பல்வேறு நிலையங்கள், இக்கணிப்பீடுகளைச் செய்கின்றன. சில நாடுகளில் பாடசாலைகள் விரும்பினால் மட்டும் கணிப்பீட்டில் பங்குகொள்ளலாம். சில நாடுகளில் சகல பாடசாலைகளும் பங்குகொண்டேயாக வேண்டும். சில பாடசாலைகள் பங்குகொள்ளாதபோது, பெறுபேறுகள் கல்வி முறைகளின் செயலாற்றம் பற்றிய சரியான முடிவுகளைப் பெறமுடியாது.

வளர்ச்சியடைந்த கைத்தொழில் நாடுகள் சில காலமாகத் தேசிய கணிப்பீட்டு முறைமையைப் பயன்படுத்தி வந்தாலும் 1990 களிலேயே ஏனைய நாடுகள் இக்கணிப்பீட்டை நடத்தும் வசதிகளைப் பெற்றன. இலத்தீன் அமெரிக்க நாடுகள் 1990 களில் இக்கணிப்பீட்டை நடத்தத் தொடங்கின. 1990 இல் "யாவருக்கும் கல்வி'யைப் பிரகடனம் செய்த Jomptien மகாநாடானது, கல்வி விரிவை மட்டுமன்றி கல்வித் தேர்ச்சிகளையும் வலியுறுத்தியது; 2000 ஆம் ஆண்டின் Dakar நடவடிக்கைச் சட்டமும் இதே விடயத்தை வலியுறுத்தியது. அதன்படி "கல்வித்தராதரத்தின் சகல அம்சங்களிலும் மேம்பாடு காண வேண்டும், சகல பிள்ளைகளும் எழுத்தறிவிலும் எண்ணறிவிலும் வாழ்க்கைத்திறன்களிலும் தேர்ச்சி காண வேண்டும்.'

இப்பின்புலத்தில், "யாவருக்கும் கல்வி' என்ற கொள்கையை ஏற்றுக்கொண்ட சகல நாடுகளும் மாணவர்களின் கற்றல் தேர்ச்சியை அறிந்து கொள்ளும் ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதாயிற்று. தேசிய அரசாங்கங்கள் நன்கொடை வழங்கும் நாடுகளின் உதவியுடன் தேசிய கணிப்பீட்டு ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கின. இக்கணிப்பீடுகளைப் பயன்படுத்திக் கல்வித் தராதரங்களை மேம்படுத்த வேண்டும் என்ற தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. ஆயினும், 2004 வரை செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, தேசிய கணிப்பீட்டு முறைகள் மாணவர்களின் தேர்ச்சியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை.

மாணவர்களின் தொகை அதிகரிப்புக்கு ஏற்ப, பாடசாலை வளங்கள் அதிகரிக்கப்படவில்லை என்பதோடு, பல வளர்முக நாடுகளில் செய்யப்பட்ட தேசியக் கணிப்பீடுகள் வழங்கிய தகவல்கள் தரங்குறைந்து காணப்பட்டன.

இக்கணிப்பீடுகள் ஆராய முற்பட்ட விடயங்கள்

*மாணவர்கள் பாடசாலை முறையில் எந்த அளவு சிறப்பாகக் கற்கின்றார்கள்? (பொது எதிர்பார்ப்புகள், பாட ஏற்பாட்டு நோக்கங்கள், வாழ்க்கைக்கான ஆயத்தம் என்பவற்றோடு தொடர்புபடுத்தி இவ்விடயம் ஆராய்ப்படும்)

*குறிப்பிட்ட துணைச் சமூகக் குழுக்களின் செயலாற்றம் எப்படி உள்ளது? (ஆண்கள் பெண்கள், நகர கிராமப்புற மாணவர்களில் வெவ்வேறு இன,மொழிக் குழுக்களைச் சேர்ந்த மாணவர்கள், வெவ்வேறு பிராந்தியங்களில் வாழும் மாணவர்கள் இவர்களுடைய செயலாற்றல்களில் ஏற்றத்தாழ்வுகள் உண்டா?

*மாணவர்களின் சித்தியோடு, தொடர்புடைய காரணங்கள் எவை? பாடசாலை வளங்கள், ஆசிரியர்களின் ஆயத்த நிலை, தகுதி, பாடசாலை வகை போன்ற நிலைமைகளா அல்லது மாணவரின் வீட்டுச் சூழலும் சமூகச் சூழலுமா?

*அரசாங்கம் வகுத்துள்ள நியமங்களுக்கேற்ப வளங்கள் வழங்கப்பட்டுள்ளனவா? உதாரணமாக, பாடநூல்கள், ஆசிரியர் தகுதிகள் பிற தராதர உள்ளீடுகள் என்பன.

*காலப்போக்கில் மாணவர்களின் சித்தி மட்டங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றனவா?

பொதுப் பரீட்சைகளும் தேசிய மதிப்பீடுகளும்

எல்லா நாடுகளிலுமே பொதுப் பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. (உதாரணமாக இலங்கையில் 5ஆம் வகுப்புப் புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த. சா/நி, உ/நி பரீட்சை) ஆனால், இப்பரீட்சைகள், தேசிய கணிப்பீடு வழங்கும் தகவல்களைத் தருவதில்லை. பொதுப் பரீட்சைகள் மாணவர் சித்திக்குச் சான்றிதழ் வழங்குகின்றன; அடுத்த கட்டப் படிப்புக்கு மாணவர்களைத் தெரிவு செய்கின்றன; பாடசாலைகளில் கற்கப்படும் விடயங்களைத் தரப்படுத்த உதவுகின்றன.

பொதுப் பரீட்சைகளின் பிரதான பணி அடுத்த கட்டக் கல்விக்கும் வேலைகளுக்கும் மாணவர்களைத் தெரிவு செய்வதாகும். சார்பளவில் உயர்சித்தி மாணவர்களை வேறுபடுத்திக் காட்டவும் உதவுகின்றது. இதனால், முழுப்பாட ஏற்பாட்டையும் உள்ளடக்கியதாகப் பொதுப் பரீட்சைகள் அமைவதில்லை.

இரண்டாவதாக, ஆண்டுக்கு ஆண்டு பரீட்சைக்கு வெவ்வேறு மாணவர்கள் அமர்கின்றனர். இதனால், கால அடிப்படையில் ஒப்பீடுகளையும், செய்துகொள்ள முடியாது.

மூன்றாவதாக, இப்பரீட்சைகள் மாணவர்களுக்கு எதிர்காலப் பயனுடையவை என்பதாலும், ஆசிரியர்களுக்கும் பரீட்சை முடிவுகள் விளைவுகளை ஏற்படுத்துவதாலும் பரீட்சிக்கப்படும் பாடப்பகுதிகள் மட்டுமே முக்கியத்துவம் பெற இடமுண்டு, உதாரணமாக செயல்முறைத் திறன்கள் பரீட்சிக்கப்படுவதில்லை. இதனால், பரீட்சைகள் பாட ஏற்பாட்டை முழுமையாகப் பிரதிபலிப்பதில்லை.

பொதுவாக, இப்பரீட்சைகள் மிகப் பிந்தியே நடத்தப்படுகின்றன. (தரம் 11, 13) ஆனால், மாணவர்கள் பற்றிய தகவல் அவர்கள் சிறு வயதினராக இருக்கும் போதே பெறப்படல் வேண்டும். இப்பின்புலத்தில் பொதுப் பரீட்சைகளை விட தேசிய கணிப்பீடுகள் கல்வி முறையின் கல்வித்தராதரத்தைப் பற்றி அறிய அதிகம் உதவுவன.

23-06-2008 தினக்குரல்

கடல் நீரை குளிராக்கும் தூசுப் புயல்!

சஹாரா பாலைவனத்தில் உருவாகும் தூசுப் புயல் வான் வெளியில் எழும்பி அட்லாண்டிக் மேற்குக் கடல் பகுதிக்கு மேல் வீசுகிறது. இதனால் காற்றில் சேரும் அதிகப்படியான தூசுகளால் கடல் நீரை அடையும் சூரிய வெப்பத்தின் அளவு குறைகிறது. இதனால் கடலின் மேற்புற நீர் குளிரடைகிறது. அவ்வாறு குளிரடைவதால் பலத்த சேதங்களை விளைவிக்கும் புயல்கள் ஏற்படும் வாய்ப்புகளும் குறைகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் வானிலை துணைக்கோள் ஆய்வுகளுக்கான கூட்டுறவு நிறுவனம் (சி.ஐ.எம்.எஸ்.எஸ்.), இந்த ஆண்டின் துவக்கத்திலேயே அட்லாண்டிக் கடல் பகுதிகளில் ஆப்பிரிக்க தூசுப் புயலால் கடல் நீர் குளிரடைந்து விடும் என்று கூறியிருந்தது. இதனை வைத்துக் கொண்டு தற்போது வானிலை ஆய்வாளர்கள் இந்த ஆண்டின் தட்ப வெப்பம், புயல் நிலவரங்களை கணித்துள்ளனர்.

ஆப்பிரிக்க சஹாரா பாலைவனத்தின் தூசுப் புயலால் மேற்புற கடல் நீரின் வெப்ப நிலை எந்த அளவுக்கு குறையும் என்பதற்கான கணினி மாதிரியை உருவாக்கி உள்ளதாக இந்த ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் தூசுப் புயலால் கடல் நீர் பெரிய அளவிற்கு குளிரடையும் என்று கூற முடியாது என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், புயல் காற்றின் தீவிரம் எந்த அளவிற்கு இருக்கும் என்பதை தற்போது கணித்து விடலாம் என்று கூறியுள்ளனர்.

கடல் நீரின் மேற்பரப்பு வெப்ப நிலை அதிகமாக இருந்தால் 5ஆம் அபாய எச்சரிக்கை புயல்கள் உருவாகலாம்

10 ஆண்டுகளாக முடிவெட்டாத ஆஸ்திரேலியர்

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவர் பில் மூர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக முடிவெட்டிக் கொள்ளவில்லை., ஷேவ் செய்து கொள்ளவும் இல்லை. இதனால் அவரது தலைமுடி நீளமாக நம் ஊர் பெண்களின் கூந்தல் போல உள்ளது.

சாமியார்கள் வைத்து இருப்பது போல தாடி நீளமாக வளர்ந்து உள்ளது. அவரது இந்த தோற்றம் அவரது சொந்த ஊரான எல்மூர்ஸ்ட் டில் அவரை பிரபலப்படுத்தி உள்ளது. அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

42 வயதான அவரது இந்த தோற்றத்துக்கு முதல் ரசிகர் அவரது மகன் தான். அவனும் தன் தந்தையை போல முடி வளர்த்துக்கொண்டு இருக்கிறான்.

ஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் மாயம்.....

நேபாள மன்னருக்கு ஹிட்லர் அளித்த விலை உயர்ந்த கார் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டில் தற்போது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. நேபாளத்தில் மன்னராட்சி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, மக்களாட்சி மலர்ந்ததையடுத்து, நாராயணிஹீட்டி அரண்மனையில் வசிந்து வந்த மன்னர் ஞானேந்திரா குடும்பத்தினரை அரசு அங்கிருந்து வெளியேற்றியது.

அதனைத் தொடர்ந்து, அந்த அரண்மனையை அருங்காட்சியமாக மாற்ற அரசு முடிவு செய்தது. இதற்காக, நேபாள அரச பரம்பரைக்கு கொடையாக அளிக்கப்பட்ட பரிசு பொருள்களைச் சேகரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இரண்டாம் உலக போரின் போது, பிரிட்டன், பிரான்ஸ் படைகளுக்கு ஆதரவு கரம் நீட்டாது, ஜெர்மானிய படைகளுக்கு பக்கபலமாக இருந்ததற்காக அப்போதைய நேபாள மன்னர் திருபுவனுக்கு விலை உயர்ந்த மெர்சிடஸ் காரை ஜெர்மன் ஆட்சியாளர் ஹிட்லர் பரிசாக அளித்தார்.

இந்த கார் தற்போது அரண்மனையில் இல்லை. இதனை அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

ஆனால், இந்த கார் 1943-ம் ஆண்டிலேயே இந்தியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்டு விட்டதாக முன்னாள் பிரதமரின் மகள் ஜனக் ராஜ்ய லஷ்மி ஷா கூறியுள்ளார். தற்போது 92 வயதாகும் இவர், இந்த கார் மன்னர் திருபுவனுக்கு வழங்கப்படவில்லை என்றும், தனது தந்தையும், அப்போதைய பிரதமருமான ஜூதா சும்ஷீர் ராணாவுக்கே அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அந்த காலகட்டத்தில் இந்தியா வந்த ஜூதா அந்த காரை தன்னுடனே கொண்டு சென்றார். இந்தியாவில் அந்த காரை தான் 17 ஆண்டுகள் பயன்படுத்தி வந்ததாகவும், பின்னர் அதனை தனது சகோதரரிடம் ஒப்படைத்துவிட்டு, தான் மீண்டும் நேபாளம் திரும்பியதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, ஹிட்லர் கொடையாக அளித்த காரால் நேபாளத்தில் புதிய சர்ச்சை தோன்றியுள்ளது

குசேலன் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இளைய தளபதி மற்றும் அல்டிமேட் ஸ்டார்

தமிழ் திரையுலகின் 75-வது வருட பவள விழாவையொட்டி, `சினிமா'வை பற்றிய ஒரு பாடல், `குசேலன்' படத்தில் இடம்பெறுகிறது. இந்த பாடல் காட்சியில் ரஜினிகாந்துடன் விஜய், அஜீத், விக்ரம் போன்ற முன்னணி கதாநாயகர்கள் தோன்றுகிறார்கள்.

பி.வாசு பேட்டி

கேரளாவில் வெற்றிபெற்ற `கத பறயும் போள்' என்ற மலையாள படம், `குசேலன்' என்ற பெயரில் தமிழில் தயாராகிறது. இந்த படத்தில் ரஜினிகாந்த், `சூப்பர்ஸ்டார்' ஆக நடிகராகவே நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா, நடிகையாகவே வருகிறார்.

பசுபதியும், மீனாவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பி.வாசு டைரக்டு செய்து இருக்கிறார். டைரக்டர் கே.பாலசந்தரின் கவிதாலயம் நிறுவனமும், செவன் ஆர்ட்ஸ் என்ற பட நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளன.

படப்பிடிப்பு முடிவடைந்து, படம் அடுத்த மாதம் (ஜுலை) திரைக்கு வர இருக்கிறது. இதையொட்டி டைரக்டர் பி.வாசு, சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

``குசேலன், என் டைரக்ஷனில் வெளிவரும் 55-வது படம். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது. `டப்பிங்' வேலைகளும் முடிவடைந்தன. வருகிற திங்கட்கிழமை முதல் பின்னணி இசைசேர்ப்பு வேலை தொடங்க இருக்கிறது. `கிராபிக்ஸ்' வேலைகள் கடந்த மார்ச் மாதமே தொடங்கி விட்டன. மே மாதம் முதல் வாரத்தில் அந்த வேலைகள் முடிவடைந்தன.

அதனால் `குசேலன்' படம் அடுத்த மாதம் திரைக்கு வந்துவிடும்.

ரஜினிகாந்த்

இந்த படத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, பசுபதி, மீனா, லிவிங்ஸ்டன், பி.வாசு, எம்.எஸ்.பாஸ்கர், சந்தானபாரதி, மயில்சாமி, தியாகு, கீதா, சோனா, பாத்திமா பாபு, ஆர்.சுந்தர்ராஜன், மனோபாலா, சின்னிஜெயந்த் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.

சிறப்பு தோற்றங்களில் பிரபு, விஜயகுமார், நிழல்கள் ரவி, மதன்பாப், குஷ்பு, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் ஒரே சமயத்தில் தயாராகி இருப்பதால், 60 நடிகர்கள் பங்கேற்றுள்ளனர். 4 மாதங்கள் இடைவிடாமல் படப்பிடிப்பு நடத்தியதால், படம் 82 நாட்களில் முடிவடைந்து இருக்கிறது.

'சினிமா' பற்றிய பாடல்

நான், டைரக்டர் கே.பாலசந்தரின் ரசிகர். அவருடைய நிறுவனத்தின் படத்தை டைரக்டு செய்ததை பெருமையாக நினைக்கிறேன்.

இந்த படத்தில் ரசிகர்கள் ஜாலியாக-சந்தோஷப்படுகிற அளவுக்கு, ரஜினிகாந்த் வருவார். படத்துக்கு படம் அவர் இளமையாகிக்கொண்டே வருகிறார். இந்த படத்தில் இன்னும் இளமையாக தெரிவார்.

தமிழ் திரையுலகின் 75-வது வருட பவள விழாவையொட்டி, `சினிமா'வை பற்றிய பாடல் ஒன்று `குசேலன்' படத்தில் இடம்பெறுகிறது. ``சினிமா சினிமா சினிமா எம்.ஜி.ஆர், சிவாஜி, என்.டி.ஆர், ராஜ்குமார் இவர்கள் இருந்த சினிமா...இனிமேல் இதுபோல் வருமா...கடவுளை யார் நேரில் பார்த்தது...அதை கண்ணில் காட்டியது சினிமாதான்...'' என்ற அந்த பாடலை, கவிஞர் வாலி எழுதியிருக்கிறார். ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து இருக்கிறார்.

விஜய்-அஜீத்-விக்ரம்

சினிமாவில் பணிபுரியும் புரொடக்ஷன் உதவியாளர்கள், லைட்மேன்கள் போன்ற தொழிலாளர்களை பெருமைப்படுத்தும் வகையில், இந்த பாடல் அமைந்து இருக்கிறது. 100 கைகள் சேர்ந்தால்தான் சினிமா ஜெயிக்கும் என்ற கருத்து, இந்த பாடலில் இருக்கிறது.

`சினிமா'வை பெருமைப்படுத்தும் பாடல் என்பதால், இந்த பாடல் காட்சியில் ரஜினியுடன் விஜய், அஜீத், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்கள்-நடிகைகள் 30 பேர்களை தோன்ற வைக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறோம். இதற்காக அவர்களை இன்னும் அணுகவில்லை. இனிமேல்தான் அணுக வேண்டும்.படத்துக்கு மிக அத்தியாவசிய தேவை என்றால் மட்டுமே இவர்களை பயன்படுத்துவோம்.

ரூ.60 கோடி

படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் வருகிற 30-ந் தேதி நடைபெற இருக்கிறது.

`குசேலன்' படத்தை சாய்மீரா நிறுவனம் சுமார் ரூ.60 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அந்த நிறுவனத்துக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.''இவ்வாறு பி.வாசு கூறினார்.பேட்டியின்போது தயாரிப்பாளர்கள் புஷ்பா, கந்தசாமி, விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.


விசித்திரமான வாழை



ப‌ன்‌னிர‌ண்டா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொட‌ங்‌‌கி இரு‌ப‌த்‌தியோரா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌‌ல் கம‌ல்

கம‌ல் ப‌த்து வேட‌ங்க‌ளி‌ல் நடி‌த்‌திரு‌க்கு‌ம் தசாவதார‌ம் ப‌ன்‌னிர‌ண்டா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் தொட‌ங்‌‌கி இரு‌ப‌த்‌தியோரா‌ம் நூ‌ற்றா‌ண்டி‌ல் முடியு‌ம் மெகா மார‌த்தா‌ன். இ‌ந்த‌க் கா‌ட்டா‌ற்று வெ‌ள்ள‌த்‌தி‌ல் ஒருவ‌ர் உண‌ர்‌ச்‌சிகரமான கதையையோ, ஊடுரு‌வி‌த் துளை‌க்கு‌ம் கா‌ட்‌சியையோ எ‌தி‌ர்பா‌ர்‌த்தா‌‌ல் ஏமா‌ற்றமே. ஆ‌ற்‌றி‌ல் கு‌தி‌த்த‌பி‌ன் அத‌ன் போ‌க்‌கி‌ல் ‌நீ‌‌ந்துவதுதானே பு‌த்‌திசா‌லி‌த்தன‌ம்!

சைவ, வைணவ ச‌ண்டையுட‌ன் தொட‌ங்கு‌கிறது தசாவதார‌ம். ச‌ண்டை எ‌‌ன்று வ‌ந்த‌பி‌ன் செ‌க்கேது... சிலையேது... சிவனை வண‌ங்க மறு‌க்கு‌ம் ராமானுஜ ந‌ம்‌பியை கோ‌வி‌ந்த ராஜ பெருமா‌ள் ‌சிலையுட‌ன் ‌பிணை‌த்து கட‌லி‌ல் வ‌ீசு‌கிறா‌ன் சைவனான குலோ‌த்து‌ங்க சோழ‌ன். சோழனா‌ல் சமு‌த்‌‌திர‌த்‌தி‌ல் மூ‌ழ்‌கிய கதை ‌மீ‌ண்டெழுவது இருப‌த்‌தியோராவது நூ‌ற்றா‌ண்டி‌ல்.

அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ‌வி‌ஞ்ஞா‌னியாக இரு‌க்கு‌ம் கோ‌வி‌ந்த‌ன் வைர‌ஸ் ஒ‌ன்றை‌க் க‌ண்டு‌பிடி‌க்‌கிறா‌ர். பர‌வினா‌ல் தர‌ணியே நாசமாகு‌ம் அ‌ந்த வைரசை ‌தீ‌விரவா‌தி‌க்கு ‌விலை பேசு‌கிறா‌ர் கோ‌வி‌ந்த‌னி‌ன் உயர‌திகா‌ரி. எ‌தி‌ரி கை‌க்கு வைர‌ஸ் செ‌ன்று‌விட‌க் கூடாது எ‌ன்பதா‌ல் வைரசை‌க் கட‌த்து‌கிறா‌ர் கோ‌வி‌ந்த‌ன். மு‌ன்னா‌ள் ‌சிஐஏ ஏஜெ‌ண்டான வெ‌ள்ளை அமெ‌ரி‌க்க‌ன் ‌பிளெ‌ட்ச‌ர் ‌வி‌ல்ல‌ன். கோ‌வி‌ந்த‌ன் ஓட ‌பிளே‌ட்ச‌ர் துர‌த்த ‌மீ‌தி ர‌ீ‌ல் முழுவது‌ம் ஜா‌லியோ ‌ஜி‌ம்கானா!

சில நி‌மிட‌ங்களே ‌நீடி‌க்கு‌ம் ஆர‌ம்ப‌க் கா‌ட்‌சி‌யி‌ல் ந‌ம்‌பியாக வரு‌ம் கம‌லி‌ன் நடி‌ப்பு‌ம், தே‌விஸ்ரீ ‌பிரசா‌த்‌தி‌ன் ‌பி‌ன்ன‌ணி இசையு‌ம், சோழ‌ர் கால அர‌ங்க அமை‌ப்பு‌ம், ரேஷமையா‌வி‌ன் க‌ல்லை க‌ண்டா‌ல் பாடலு‌ம் மாய‌ம் பு‌ரி‌கி‌ன்றன. மற‌க்க நெடுநா‌ள் ஆகு‌ம் கா‌ட்‌சியமை‌ப்பு.

கோ‌வி‌ந்த‌னி‌ன் ஓ‌ட்ட‌ம் அமெ‌ரி‌க்கா‌வி‌ல் துவ‌ங்‌கி இ‌ந்‌தியா வ‌ந்து ‌சித‌ம்பர‌ம் வ‌ழியாக‌ச் செ‌ன்னை சுனா‌மி பேரலைகளுட‌ன் ‌நிறைவடை‌கிறது. இ‌ந்த நெடு‌ம் பயண‌த்‌தி‌ல் ரா உளவு‌த்துறை அ‌திகா‌ரி ப‌ல்ரா‌ம் நாயுடு, த‌லி‌த் தலைவ‌ர் ‌வி‌ன்செ‌ன்‌ட் பூவராகவ‌ன், கி‌ரு‌ஷ்ணவே‌ணி பா‌‌ட்டி, ஏழடி உயர க‌லிபு‌ல்லா கா‌ன், ஜ‌ப்பா‌ன் த‌ற்கா‌ப்பு‌‌க் கலை ‌நிபுண‌ர், ப‌ஞ்சா‌ப் பாடக‌ர் அவதா‌ர் ‌சி‌ங், ஜா‌ர்‌ஜ் பு‌ஷ் என‌ப் பலவேச‌ம் கா‌ட்டு‌கிறா‌ர் கம‌ல்.

சு‌ந்தர தெலு‌ங்கு‌ம் கொ‌ஞ்சு‌ம் த‌மிழு‌ம் கல‌ந்து ப‌ல்ரா‌ம் நாயுடு உ‌தி‌ர்‌க்கு‌ம் ஒ‌வ்வொரு வா‌ர்‌த்தையு‌ம் நகை‌ச்சுவை சரவெடி. மேன‌ரிச‌ம், தோ‌ற்ற‌ம், குர‌ல் என அ‌த்தனை‌யிலு‌ம் நாயுடுவாகவே மா‌றி‌யிரு‌க்‌கிறா‌ர் கம‌ல்.

கமலா எ‌ன்று ஆ‌ச்ச‌ரிய‌ப்படு‌த்து‌கிறா‌ர் ‌வி‌ன்செ‌ன்‌ட் பூவராகவ‌ன். கறு‌ப்பு உட‌ம்‌பி‌ல் இரு‌ந்து வெ‌ளி‌ப்படு‌ம் ‌சிவ‌‌ப்பு‌ச் ‌சி‌ந்தனைக‌ள் பள‌ீ‌ர். எ‌தி‌ரி‌யி‌ன் குழ‌ந்தைகளை‌க் கா‌ப்பா‌ற்ற‌ப்போ‌ய் சுனா‌மி‌யி‌ல் உ‌யி‌ர்‌விடு‌ம் பூவராகவ‌னி‌ன் முடிவு க‌ண்‌ணீ‌ர்‌த்து‌ளி. வெ‌ள்ளை‌க்கார ‌வி‌ல்ல‌ன் ‌பிளெ‌ட்ச‌‌ர் (இதுவு‌ம் கம‌ல்தா‌ன்) வி‌ல்‌லி‌‌ல் இரு‌ந்து புற‌ப்ப‌ட்ட அ‌ம்பு. இல‌க்கை‌த் த‌விர எதையு‌ம் ம‌தி‌க்காத முர‌ட்டு‌த்தன‌ம். ‌சி‌ன்ன‌க் க‌த்‌தியு‌ம் சேவ‌லி‌ன் ‌சி‌லி‌ர்‌ப்புமாக

ஆ‌ச்ச‌ர்ய‌ப்படு‌த்து‌கிறா‌ர். கிளைமா‌க்‌சி‌ல் ‌பிளெ‌ட்சரு‌ம் ஜ‌ப்பா‌ன் கமலு‌ம் மோ‌தி‌க்கொ‌ள்ளு‌ம் கா‌ட்‌சி ஆ‌க்ஷ‌ன் க‌விதை. கிரு‌ஷ்ணவே‌ணி பா‌ட்டி‌யிட‌ம் மே‌க்க‌ப் தூ‌க்க‌ல். அவ‌ர் உ‌ட்பட ‌சில கம‌ல் கேர‌க்ட‌ர்க‌ளி‌ன் பே‌ச்சு உ‌ன்‌னி‌ப்பாக‌க் கே‌ட்டாலொ‌ழிய பு‌ரிவது கடின‌ம். ந‌ம்‌பி‌‌யி‌ன் மனை‌வி, சித‌ம்பர‌ம் ஆ‌ண்டா‌ள் என அ‌சினு‌க்கு இரு வேட‌ங்க‌ள். பெருமா‌ள் ‌சிலையுட‌ன் கமலை படமுழு‌க்க ‌பி‌ன்தொடரு‌ம் ஆ‌ண்டா‌ள், அ‌ப்ளா‌ஸ்களை அ‌ள்‌ளி‌க் கொ‌ள்‌கிறா‌ர்.

‌வி‌ல்லனு‌க்கு உத‌வி செ‌ய்து அ‌நியாயமாக உ‌யி‌ர்‌விடு‌ம் ‌சிஐஏ ஏஜெ‌ண்டாக ம‌ல்‌லிகா ஷெராவ‌த். மண‌க்காத ம‌ல்‌லிகை. பி.வாசு, ச‌ந்தான பார‌‌தி, நாகே‌ஷ், ஜெய‌ப்ரதா, கே.ஆ‌ர்.விஜயா, வையாபு‌ரி ஆ‌கியோரு‌ம் உ‌ண்டு‌. சே‌ஸி‌ங்‌கி‌ன் நடுவே சு‌ம்மா வ‌ந்து போவதா‌ல் ‌சில கம‌ல்க‌ள் மனதை‌க் கவர‌வி‌ல்லை எ‌ன்பது கம‌லி‌ன் உழை‌ப்‌பி‌ற்கு‌ப் பே‌ரிழ‌ப்பு.

ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர் ர‌விவ‌ர்ம‌‌ன், பாட‌ல்களு‌க்கு இசையமை‌த்த ‌ஹ‌ிமே‌ஷ் ரேஷமையா, பி‌ன்ன‌ணி இசையமை‌‌த்த தே‌விஸ்ரீ ‌பிரசா‌த், எடி‌ட்ட‌ர் த‌ணிகாசல‌ம், கலை இய‌க்குந‌ர்க‌ள், மே‌க்க‌ப் கலைஞ‌ர்க‌ள், ச‌ண்டை‌ப் ப‌யி‌ற்‌சியாள‌ர்க‌ள் ஆ‌கியோரு‌க்கு‌த் த‌னியே பாரா‌ட்டு ‌விழா நட‌த்தலா‌ம். பட‌த்‌தி‌ன் ‌நிஜமான பல‌ம் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம், கிராஃ‌ப்‌பி‌க்‌சி‌ல் தூ‌சி முத‌ல் சுனா‌மி வரை வரவழை‌‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் அ‌ல்ல உ‌ய‌ர்நு‌ட்ப‌ம்!

வசன‌த்‌தி‌ல் காரமு‌ம் உ‌ண்டு காமெடியு‌ம் உ‌ண்டு. ஜா‌ர்‌ஜ் பு‌ஷ், வைர‌சி‌ன் ‌மீது அணுகு‌ண்டு போடலாமா எ‌ன போ‌னி‌ல் கெ‌த்தாக‌க் கே‌ட்டு‌வி‌ட்டு அரு‌கி‌ல் இரு‌ப்பவ‌‌ரிட‌ம் வைர‌சி‌ன் பெயரை‌ச் சொ‌ல்‌லி அது எ‌ன்ன எ‌ன்று கே‌ட்பது உலக நாயக ந‌க்க‌ல். அதேபோ‌ல் அ‌சி‌னி‌ன், கடவு‌ள் இரு‌க்கா‌ர் எ‌ன்று சொ‌ல்லு‌ங்கோ எ‌ன்ற கெ‌ஞ்சலு‌க்கு, கடவு‌ள் இ‌ல்லைனு நா‌ன் சொ‌ன்னேனா... இரு‌ந்‌திரு‌ந்தா ந‌ல்லா இரு‌க்கு‌ம்னுதா‌ன் சொ‌ல்றே‌ன் எ‌ன்ற கம‌லி‌ன் ப‌திலடியு‌ம் ஜோ‌ர்.

பட‌த்‌தி‌ல் ஹ‌ிரோ‌ஷிமா, பிய‌ர்‌‌ல்ஹா‌ர்ப‌ர் பெய‌ர்களு‌ம் வரு‌கி‌ன்றன. பட‌ம் நெடுக வரு‌ம் வரலா‌ற்று ‌வி‌‌ழி‌ப்புண‌ர்வு ‌பிற த‌மி‌ழ்‌ப் பட‌ங்க‌ளி‌ல் பா‌ர்‌க்க முடியாதது. அதுபோல ஆ‌தி‌க்க சா‌தி‌யின‌ர் ப‌ற்‌றிய ‌விம‌ர்சன‌ம்.

இர‌ண்டு மூ‌ன்று கம‌ல்க‌ள் ஒ‌ன்றாக வரு‌ம் கா‌ட்‌சிக‌ள் ‌நிறைய. சி‌ன்ன உறு‌த்த‌ல்கூட இ‌ன்‌றி அதனை‌ப் படமா‌க்‌கிய கே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ரி‌ன் உழை‌ப்பு ‌பிரேமு‌க்கு ‌பிரே‌ம் ப‌ளி‌ச்‌சிடு‌கிறது.
இ‌வ்வளவு இரு‌ந்து‌ம் அழு‌த்தமான கதையு‌ம் இரு‌ந்‌திரு‌ந்தா‌ல்... எ‌ன்று ‌நினை‌க்க‌த் தோ‌ன்றுவதே பட‌த்‌தி‌ன் ஒரே பல‌வீன‌ம். கம‌ல், கே.எ‌ஸ்.ர‌வி‌க்குமா‌ர், ர‌‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் கூ‌ட்ட‌ணி‌‌யி‌ல் இ‌ப்பட‌ம் ஒரு மெகா கா‌ர்‌னிவா‌ல். அ‌தி‌ல் கரைய முடி‌ந்தவ‌ர்களு‌க்கு கொ‌ண்டா‌ட்ட‌ம் ‌கியார‌ண்டி!

சிங்கம் கிடைக்காததால் வில்லு டைட்டில்..........

சிங்கம் டைட்டில் கிடைக்காததால் வில்லு என்ற பெயரோடுபடப்பிடிப்பையும் துவங்கிவிட்டார் பிரபுதேவா. பொருத்தமாக இருக்கும் என்றுதான் சிங்கத்தை பிடிக்க முயற்சி செய்தார் விஜய். ஆனால், இந்த டைட்டிலை வைத்திருக்கும் இயக்குனர் ஹரி, பிடிவாதமாக இருந்துவிட்டதால், வேறு டைட்டிலுக்கு தாவினார்கள் பிரபுதேவாவும், விஜயும்.

வில்லு என்ற பெயரை அறிவித்தவுடன், வில் என்ற டைட்டில் வைத்திருந்த எஸ்.ஜே.சூர்யா, மகிழ்ச்சியோடு இந்த டைட்டிலை விட்டுக் கொடுத்ததாக செய்திகள் கசிந்தன. அதை நம்புகிற விதமாக அடிக்கடி விஜயை சந்தித்து கதை சொல்ல நேரமும் கேட்டுக் கொண்டிருந்தார் சூர்யா.

டைட்டில் கொடுத்தால், கால்ஷீட் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் விட்டுக் கொடுத்துவிட்டாரோ என்ற எண்ணத்தையும் விதைத்தது இந்த வில்லு மேட்டர். ஆனால் உண்மை அதுவல்லவாம்.

வில் என்ற டைட்டில் சூர்யாவிடம் இருப்பது தெரிந்தே வில்லு என்று வைத்து விட்டார்களாம். சூர்யாவிடம் கேட்டால், கொடுப்பாரோ, மாட்டாரோ என்ற ஐயம் இருந்ததால் இப்படி குறுக்கு வழியை கடை பிடித்ததாக கூறுகிறார்கள்.

சூர்யா தரப்பில் என்ன சொல்லப்படுகிறது? "எந்த டைட்டிலில் நடிக்கலாம் என்று நாள் கணக்கில் யோசிக்கலாம். தவறேயில்லை. ஆனால் எந்த டைட்டிலை அடிக்கலாம் என்று யோசிக்கிறாங்களே... என்ன செய்வது" என்றாராம். அட, சின்னப்புள்ள தனமா இருக்கே!

கார் நம்பர் இப்போது கோடி பெறுமதிக்கு................

துபாயில் கார் நம்பர் ஒன்று ரூ. 5.5 கோடிக்கு ஏலத்தில் விற்பனை ஆனது.

கார் நம்பர்களை ஏலத்தில் விட்டு கார் உரிமையாளர்களுக்கு ஒதுக்குவது துபாயில் வழக்கம். துபாய் போக்குவரத்து ஆணையம் கார் நம்பர் ஏலத்தை நடத்துகிறது.

58 வது கார் நம்பர் ஏலம் நேற்று முன் தினம் துபாயில் நடந்தது.

இரட்டைப் படை எண்ணுள்ள கார் நம்பர்களுக்கு ஏகப்பட்ட கிராக்கி. ஜி 16 என்ற கார் எண் உயர்ந்தபட்ச தொகைக்கு விற்கப்பட்டது. அதன் ஏல விலை 50 லட்சம் திர்ஹாம் (ரூ. 5.5 கோடி).

ஈ 60 என்ற கார் எண் 36 லட்சம் திர்ஹாமுக்கு விற்பனை ஆனது. ஜி 21 என்ற எண்ணுக்கு கிடைத்த விலை 34 லட்சம் திர்ஹாம். இந்த ஏல விற்பனையின் மூலம் போக்குவரத்து ஆணையத்துக்கு கிடைத்த தொகை ரூ. 35 கோடி.

போர் விமானம் மீது பறக்கும் தட்டு மோதியதா?

வானத்தில் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்து ருமேனியா நாட்டு போர் விமானத்தின் மீது மர்ம பொருள் ஒன்று மோதியதில் விமானி காயம் அடைந்தார். அந்த விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதியதா என்று விசாரணை நடைபெறுகிறது.

33 ஆயிரம் அடி உயரத்தில்

விண்வெளியில் இருந்து பறக்கும் தட்டு வருவதாகவும், வேற்று கிரகவாசிகள் பூமிக்கு வந்து விட்டு செல்வதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாவது உண்டு. ஆனால், அந்த தகவல்கள் எதுவும் இதுவரை முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. எனினும் அது தொடர்பான கதைகளும், சினிமா படங்களும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.

இந்த நிலையில் ஐரோப்பாவில் அமைந்துள்ள ருமேனியா நாட்டுக்கு சொந்தமான போர் விமானம் ஒன்று விண்ணில் பறந்தது. ரஷிய தயாரிப்பான `மிக்-21' ரகத்தை சேர்ந்த அந்த விமானம், தான்சில்வேனியா பகுதியில், சுமார் 33 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டு இருந்தது.

விமானி அறை சேதம்

அப்போது அடையாளம் தெரியாத மர்ம பொருள் ஒன்று விமானத்தின் மீது மோதி விட்டு சென்றது. ஒரு வினாடிக்கும் குறைவான நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. மோதிய பொருளின் எடை சுமார் 500 கிலோ இருக்கும். மர்ம பொருள் மோதியதால் போர் விமானத்தில் உள்ள விமானியின் அறையும் முற்றிலுமாக சேதம் அடைந்தது.

விமானிக்கும் லேசான காயம் ஏற்பட்டது. எனினும், சமயோசிதமாக செயல்பட்ட அந்த விமானி, விமானத்தை பத்திரமாக தரை இறக்கினார். விமானம் மீது மோதிய அந்த பொருள், எதிர்பாராத விதமாக மோதியதுபோல தெரியவில்லை. குறி பார்த்து ஏவி விட்டது போல இருந்தது.

பறக்கும் தட்டா?

இந்த விபத்து குறித்து விமானத்தில் இருந்த வீடியோ காமிராவில் பதிவான காட்சிகளில், நீல வண்ணத்திலான பனிக்கட்டி போன்ற பொருள் விமானத்தை குறி பார்த்து தாக்கியது தெரியவந்தது. அது பறக்கும் தட்டு போல காணப்பட்டது. எனவே, விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

போர் விமானத்தின் மீது பறக்கும் தட்டு மோதியது குறித்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ருமேனியா ராணுவ அதிகாரிகள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் இது குறித்து விசாரிக்க ராணுவ தளபதி கிரிகோரி தலைமையில் விசாரணை குழுவை அமைத்துள்ளனர்.

அதிபர் புஷ் விமானமா?

இதற்கிடையே தனது தந்தைக்கு சொந்தமான பகுதிக்கு ரகசிய பயணமாக அமெரிக்க அதிபர் புஷ் சென்றதாகவும், அந்த விமானத்தில் இருந்துதான் மர்ம பொருள் ஏவப்பட்டதாகவும் ருமேனிய அதிகாரிகள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

போர் விமானத்தின் மீது அந்த பொருள் மோதிய உடனேயே புஷ் விமானத்தை ஓட்டிச் சென்ற விமானி, அதிக உயரத்துக்கு விமானத்தை ஓட்டிச் சென்றதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

ருமேனியா எல்லைக்குள் செல்வதற்கான அனுமதி மற்றும் தகவல் இல்லாமல் புஷ் விமானம் சென்றதாக புகார் எழுந்துள்ளதால் ருமேனியா - அமெரிக்கா இடையே தூதரக ரீதியிலான பிரச்சினை எழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வான வெளியில் நிகழ்ந்த அற்புதக் காட்சி

நூறு கோடி சூரிய பிரகாசத் துடன் வெடித்துச் சிதறியது அந்த நட்சத்திரம். வான வெளியில் நிகழ்ந்த இந்த அற்புத காட்சியைக் கண்டு `ஆ... வென' மெய் சிலிர்த்து போயினர் விஞ்ஞானிகள். கோடிக்கணக்கான ஆண்டு ஆயுள் கொண்ட நட்சத்திரங்கள் வெடித்துச் சிதறி அழிவது அரிய பெரிய நிகழ்ச்சியாகும்.

சூரியனைப் போன்று பல மடங்கு பெரியதும் சிறியது மான நட்சத்திரங்கள் ஆயிரக்கணக்கில் வான வெளியில் உள்ளன.நட்சத்திரங்களில் உள்ள எரிவாயு எரிந்து கொண்டிருப்பதால் அவை பிரகாசிக்கின்றன. எரிவாயு எரிந்து காலியாகும் நிலையில் நட்சத்திரம் தனது ஈர்ப்பு சக்தியை இழக்கிறது. இதனால் எடை தாங்காமல் வெடித்து சிதறி விடுகிறது.

இவ்வாறு எரிவாயு காலியாகி கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்து சிதறியது தான் அந்த நட்சத்திரம். இது சூரியனை போன்று 10 மடங்கு அளவில் பெரியது.

வெடித்து சிதறுவதற்கு முன் அந்த நட்சத்திரத்தில் இருந்து புற ஊதாக்கதிர்கள் அலை அலையாக வெளியேறின. அப்போது எரிதுகள்கள் வினாடிக்கு 10 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் தீப் பிழம்பாக வெளியேறியது. அது சூரியனைப் போல் 100 கோடி மடங்கு பிரகாசமாக ஜொலித்தது.

இதனைக் கண்ட விஞ்ஞானிகள் பரவசமடைந் தனர். இதற்கு முன் இது போன்று நட்சத்திரம் வெடித்து சிதறியதை விஞ்ஞானிகள் பார்த்ததில்லை. ஏற்கனவே வெடித்துச் சிதறிய நட்சத்திரங்களைத் தான் இதுவரை கண்டறிந்து உள்ளனர்.

ஒரு நட்சத்திரம் வெடித்துச் சிதறுவதை பார்க்க வேண்டும் என்பது வானியல் விஞ்ஞானிகளின் நீண்டநாள் கனவு. அது இப்போதுதான் நிறைவேறி உள்ளது என்று கூறி உள்ளார் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானி கெவின் ஸ்சாவின்ஸ்கி.

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் கார்

பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரில் ஓடும் காரை ஜப்பான் நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது.

தண்ணீரில் ஓடும் கார்

தாறுமாறாக உயர்ந்து விட்ட பெட்ரோல், டீசல் விலை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. எனவே எதிர்கால தேவையை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக வேறு எரிபொருளை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இந்த நிலையில் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள ஜெனிபாஸ் என்ற நிறுவனம் தண்ணீரில் ஓடும் காரை கண்டுபிடித்து உள்ளது.

1 லிட்டருக்கு 80 கிலோ மீட்டர்

இந்த காரில் உள்ள `டேங்க்'கில் பெட்ரோலுக்கு பதிலாக தண்ணீரை நிரப்பினால் போதும். அந்த தண்ணீரின் மூலம் காரில் உள்ள ஜெனரேட்டர் இயங்கி மின்சாரம் உற்பத்தி ஆகும். அந்த மின்சாரத்தின் மூலம் கார் இயங்கும். ஒரு லிட்டர் தண்ணீருக்கு இந்த கார் 80 கிலோ மீட்டர் தூரம் ஓடும். மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த கார் செல்லும்.

மழை நீர், ஆற்று நீர், குழாய் நீர், கடல் நீர் எதை வேண்டுமானாலும் நிரப்பலாம். தண்ணீரை நிரப்புவதற்கான `டேங்க்' காரின் பின் பகுதியில் இருக்கும்.

சுற்றுச்சூழல்

ஜெனரேட்டர் மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தினால் காரில் உள்ள பேட்டரியும் `சார்ஜ்' ஆகிவிடும்.இது தண்ணீரில் ஓடும் கார் என்பதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்தது ஆகும்.

தண்ணீரில் ஓடும் காரை அறிமுகப்படுத்திய ஜெனிபாஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கியோஷி ஹிரசாவா மேற்கண்ட தகவல்களை தெரிவித்தார்.

இந்த கார் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

சலவை இயந்திரத்துக்கு தண்ணீரே தேவையில்லை

தண்ணீரே தேவைப்படாத வாஷிங் மிஷின்கள், பிரிட்டனில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பிரிட்டன் மக்களிடம் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு அதிகம். தற்போது பிரிட்டன்வாசிகள், சராசரியாக ஒரு நாளுக்கு 21 லிட்டர் தண்ணீரை, துணிகளை சலவை செய்வதற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

வீட்டு உபயோகத்துக்காக, பயன்படுத்தும் தண்ணீரில் 13 சதவீதம் சலவை செய்வதற்காக பயன்படுத்தப்படுகிறது. பிரிட்டனில், வாஷிங் மிஷின்கள் தான் பெரும்பாலும் சலவை செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன. அங்கு ஆண்டுதோறும், 80 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 லட்சத்துக்கு மேற்பட்ட வாஷிங் மிஷின்கள் விற்பனையாகிறது. தற்போது நடைமுறையில் உள்ள வாஷிங் மிஷின்களில், ஒரு முறை, ஒரு கிலோ எடையுள்ள துணியை சலவை செய்ய, 35 கிலோ தண்ணீர் செலவு செய்யப்படுகிறது.

புதிதாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள வாஷிங் மிஷின்களில், இதில் வெறும் 2 சதவீதம் தண்ணீரும், மின்சாரமும் போதுமானது. இந்த வாஷிங் மிஷின்களை, ஜீரோஸ் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ஒரு முறை சலவை செய்ய ஒரு கப் தண்ணீர் போதுமானது. இதில் உள்ள பிளாஸ்டிக் சிப்கள், துணிகளில் உள்ள கறைகள், அழுக்குகளை அகற்றி, உலர்த்திவிடும். தனியாக உலர்த்த வேண்டிய தேவை இல்லாததால், டிரையர் தேவையில்லை. இதனால், டிரையருக்கு தேவைப்படும் மின்சார செலவும் மிச்சமாகிறது.சாதாரண வாஷிங் மிஷின்களுக்கும், புதிய வாஷிங் மிஷினுக்கும் விலையில் பெரியளவில் வித்தியாசம் இல்லை. அடுத்த ஆண்டு முதல் வர்த்தக ரீதியாக பிரிட்டன் முழுவதும், புதிய வாஷிங் மிஷின்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

தசாவதாரம்' படம் பார்த்துவிட்டுகமலஹாசனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு

தசாவதாரம்' படம் பார்த்துவிட்டு, கமலஹாசனுக்கு ரஜினிகாந்த் பாராட்டு. மனோரமா கதறி அழுதார்

கமலஹாசன் 10 வேடங்களில் நடித்த `தசாவதாரம்' படத்தை, ரஜினிகாந்த் பார்த்து பாராட்டினார். நடிகை மனோரமா கமலஹாசனை கட்டிப்பிடித்து, உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

`தசாவதாரம்' படத்தை ரூ.60 கோடி செலவில், ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார். இந்த படத்தை கே.எஸ்.ரவிகுமார் டைரக்டு செய்துள்ளார். இதில், கமலஹாசன் 10 வேடங்களில் நடித்து இருக்கிறார்.

மிக பிரமாண்டமான முறையில் தயாராகி உள்ள இந்த படம், இன்று (வெள்ளிக்கிழமை) திரைக்கு வருகிறது.

முன்னதாக, `தசாவதாரம்' படம் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்டது. படத்தை பார்த்துவிட்டு முதல்-அமைச்சர் கருணாநிதி, கமலஹாசனின் நடிப்பை பாராட்டினார்.

முதல்-அமைச்சரை தொடர்ந்து நடிகர்-நடிகைகளுக்கு `தசாவதாரம்' படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் ப்ரேம் தியேட்டரில் நடந்த சிறப்பு காட்சிக்கு, ரஜினிகாந்த் வந்தார்.

அவரை, கமலஹாசன் வரவேற்று அழைத்து சென்று உட்கார வைத்தார்.

நடிகர் சங்க தலைவர் சரத்குமார், அவருடைய மனைவி ராதிகா சரத்குமார், நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, அவருடைய மனைவி ஜோதிகா, பரத், சரத்பாபு, நாகேஷ், நடிகை மனோரமா, டைரக்டர்கள் கே.பாலசந்தர், தரணி, விஷ்ணுவர்தன் ஆகியோரும் `தசாவதாரம்' படம் பார்த்தார்கள்.

படம் பார்த்துவிட்டு வெளியே வந்ததும் ரஜினிகாந்த், கமலஹாசனை கட்டிப்பிடித்து பாராட்டினார். படத்தில் அவர் ரசித்த காட்சிகளை விளக்கினார். சில காட்சிகள் எப்படி படமாக்கப்பட்டன? என்று கமலஹாசனிடம் கேட்டார்.

இதேபோல் படம் பார்த்த அனைத்து நடிகர்-நடிககைளும் கமலஹாசனுடன் கை குலுக்கி பாராட்டினார்கள். நடிகை மனோரமா கமலஹாசனின் நெஞ்சில் முகம் புதைத்து, உணர்ச்சிமிகுதியால் அழ ஆரம்பித்தார். அவரை, கமலஹாசன் தேற்றினார். ``நிஜமாகவே நீ உலகநாயகன்தான்'' என்று கமலஹாசனை, மனோரமா தழுதழுத்த குரலில் பாராட்டினார்.

மக்கள் வாழ்வதற்குரிய சிறந்த இடம் - கோபன்கேஹன் (டென்மார்க்) உலகில் சிறந்த நகரம் கோபன்கேஹன் (டென்மார்க்)

மக்கள் வாழ்வதற்குரிய சிறந்த இடமாக டென்மார்க் தலைநகர் கோபன்கேஹன் விளங்குவதாக ஆய்வொன்று தெரிவிக்கின்றது.
நியூயோர்க், லண்டன் போன்ற நகரங்களே சிறந்த இடம் என்று நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருப்பதைப் பொய்யாக்கி விட்டது சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு.

மக்கள் வாழ்வதற்கு, உலகில் சிறந்த இடம் கோபன்கேஹன் நகரம் என்பது அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வடக்கு ஜரோப்பாவில் உள்ள டென்மார்க் நாட்டின் தலைநகரான கோபன்கேஹனில் தான் மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கான அனைத்து சூழ்நிலைகளும் உள்ளன.

அதிகம் மாசுபடாத சுற்றுப்புறச் சூழல், சிறந்த போக்குவரத்து வசதி, வாழ்க்கைத் தரம், சிறந்த நகரக் கட்டமைப்பு உள்ளிட்ட காரணங்களால் சிறந்த நகரமாக கோபன்கேஹன் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த 20 நகரங்கள் பட்டியலில் கூட லண்டன், நியூயோர்க் நகரங்களால் இடம்பெற முடியவில்லை.

முனிச் நகரம் இரண்டாம் இடம்பிடித்துள்ளது. டோக்கியோ, சூரிச், ஹெல்சிங்கி ஆகிய நகரங்கள் முதல் 5 இடங்களுக்குள் வந்துள்ளன.

46 வருட கால கணிப்பீடு ஒரு நாளில் நிறைவேற்றம்

அமெரிக்காவானது அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்ளும் முகமாக உலகிலேயே அதிவேகமாக இயங்கும் கணினியொன்றை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க சக்திவள திணைக்களம் அறிவித்துள்ளது.

இக் கணினியானது ஒரு செக்கனுக்கு 1000 திரில்லியன் கணிப்பீடுகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது. நியூமெக்ஸிக்கோவிலுள்ள லொஸ் அலமொஸ் தேசிய ஆய்வு கூடத்திலுள்ள இக்கணினியானது அமெரிக்க அணு ஆயுத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு மட்டுமல்லாது, உலகளாவிய சக்திச் சவால்களுக்கு தீர்ப்பனவாகவும் அமைவதாக கூறப்படுகிறது.

உலகிலுள்ள 6 பில்லியன் மக்கள் சாதாரண கணிப்பானைப் பயன்படுத்தி வருடத்திலுள்ள அனைத்து நாட்களிலும் 24 மணி நேரம் உழைத்து 46 வருடங்களில் மேற்கொள்ளும் கணிப்பீட்டை இந்த "ரோட்ரன்னர்' கணினி ஒரு நாளில் நிறைவேற்றும் வல்லமையைக் கொண்டு விளங்குகிறது

நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வம் தெரிவு

நேபாளத்தின் புதிய உயிர் வாழும் பெண் தெய்வமாக ஷரீயா பஜ்ராசார்யா என்ற 6 வயது சிறுமி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் உயிர் வாழும் பெண் தெய்வம் என்ற நிலையிலிருந்து ஓய்வு பெற்ற முன்னாள் பெண் தெய்வத்தின் நிலைக்கு இச்சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

நேபாளத்தின் மன்னராட்சி முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின், உயிர் வாழும் பெண் தெய்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சிறுமி என்ற பெருமையை ஷரீயா பெறுகிறார்.

நேபாள பாரம்பரிய வழக்கங்களின் பிரகாரம், பல்வேறு பௌதீக பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தலைநகர் காத்மண்டுவிற்கு அருகிலுள்ள பக்தாபூரில் வசிக்கும் மேற்படி சிறுமி உயிர் வாழும் பெண் தெய்வமாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை காலமும் மன்னருக்கான மதகுருவே உயிர்வாழும் பெண் தெய்வத்திற்கான நியமனத்தை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது.

தற்போது மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், புதிய உயிர்வாழும் பெண் தெய்வம் தொடர்பான அங்கீகாரத்தை யார் வழங்குவது என்பதை மேற்படி விவகாரம் சம்பந்தமான நம்பிக்கை சபையின் தலைவர் விரைவில் தீர்மானிப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது

உடையும் நிலையில் இருந்த சீன ஏரியில் பூமி அதிர்ச்சி

சீனாவில் நில நடுக்கம் ஏற்பட்டு உடையும் நிலை யில் இருந்த ஏரியில் திடீர் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இதனால் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

சீனாவில் கடந்த மாதம் ஏற்பட்ட பூகம்பத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நில நடுக்கத் தினால் பல அணைகள், ஏரிகள் உடையும் நிலையில் இருந்தன.

இதில் சுலோசன் என்ற இடத்தில் உள்ள தன்கி ஜாஷான் ஏரியும் ஒன்று. இந்த ஏரி உடைந்து விடக் கூடாது என்பதற்காக பல்வேறு பாது காப்பு பணிகள் மேற் கொள் ளப்பட்டன.

இந்த நிலையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏரி அமைந்துள்ள பகுதியில் நில அதிர்ச்சி ஏற்பட்டது. இது ரிக்டர் ஸ்கேல் அளவுக்கு 4.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. அந்த பகுதியில் நிலச்சரிவும், நிகழ்ந்தது.

இதனால் ஏரி உடையும் அபாயம் ஏற்பட்டது. ஏரிக்கு கீழ் பகுதியில் உள்ள ஊர்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

ஏரி உடைந்தால் பெரும் அபாயம் ஏற்படும் நிலை உருவானது. இதனால் அந்த பகுதியில் இருந்து 2 லட்சம் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். மற்றவர்களையும் வெளி யேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

ஏரி உடைய போகிறது என்று தகவல் பரவியதும் மக்கள் அலறியடித்துக் கொண்டு மேடான இடங் களை நோக்கி ஓடினார்கள். இதனால் எங்கு பார்த்தாலும் பீதி நிலவுகிறது.

ஏரி உடைந்து விட்டால் மீட்பு பணிகளில் ஈடுபட ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டது. மீட்பு படகு களும் தயார் நிலையில் உள்ளன.

உலகிலேயே விலை அதிகம் 2.5 லட்சத்துக்கு கறுப்பு தர்பூசணி ஏலம்

ஒரே ஒரு தர்பூசணி பழத்தை எவ்வளவு விலை கொடுத்து வாங்குவீர்கள்? ம்...ம்.. அதிகபட்சமாக 50 ரூபாய். ஆனால் ஜப்பானில் ஒரே ஒரு தர்பூசணி ரூ.2.5 லட்சத்துக்கு ஏலம் போய் உள்ளது.

டென்சுகே என்ற கறுப்பு நிற தர்பூசணி ஜப்பானின் வடக்கு பகுதியில் உள்ள ஹொக்கைடோ தீவில் மட்டும்தான் விளைகிறது. அதற்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. ஜப்பானில் பரிசுப் பொருட்களாக கூட தர்பூசணி தரப்படுகிறது.

இந்நிலையில் இந்த ஆண்டில் முதல் முறையாக 65 கறுப்பு நிற தர்பூசணி விற்பனைக்கு வந்துள்ளது. அதில் ஒன்றுதான் இது. முதல் முறையாக விற்பனைக்கு வருவதை ஏலம் விடுவது ஜப்பானில் வழக்கம். அதை ஏலம் எடுப்பது மிகவும் பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது.

இந்தாண்டு ஏலம் இரண்டு நாட்களுக்கு முன்பு நடத்தப்பட்டது. அதில் ஒரு கறுப்பு டென்சுகே தர்பூசணி ரூ.2.5 லட்சத்துக்கு ஏலம் போய் சாதனை படைத்துள்ளது. இதுவரை நடந்த கறுப்பு தர்பூசணி ஏலங்களில் இதுதான் அதிகபட்சம். மேலும் ஒரே ஒரு கறுப்பு தர்பூசணி இந்த அளவு விலை போயுள்ளது உலகில் வேறெங்கும் இல்லை எனவும் கருதப்படுகிறது.

கடல் உணவுகளை வியாபாரம் செய்யும் ஒருவர் இந்த விலை கொடுத்து தர்பூசணியை வாங்கியுள்ளார். இதற்கு காரணம் தர்பூசணி மீது உள்ள காதல் அல்ல. உள்ளூர் விவசாயிகளுக்கு கைகொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான்.

இந்த தர்பூசணி 7.7 கிலோ எடை உள்ளது. ஏப்ரல், மே மாத காலநிலை காரணமாக இதில் இனிப்பு அதிகமாக இருக்கிறதாம்.

பிற வகை தர்பூசணிகள் விலை இன்னும் அதிகமாக இருக்கிறது. கடந்த மாதத்தில் யுபாரி வகையை சேர்ந்த இரண்டு தர்பூசணிகள் ரூ.96 லட்சத்துக்கு ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமே...!

ஒரு வகுப்பில் ஆசிரியை ஆண்பால், பெண்பால் இவற்றைப் பற்றி கற்பித்துக் கொண்டிருந்தாள்.. மனித இனத்துக்கு அப்பால் ஆங்கில மொழியில் எவை எவைக்கு பாலின பாகுபாடு கொடுக்கப்பட்டுள்ளது என்று தெளிவாக விளக்கிக் கொண்டிருந்தாள்.. (உங்க கலவரம் எனக்கு புரியுது மக்கா.. இதிலே அசைவமும் இல்லே... அந்தப் பய சின்னாவும் இல்லே.. நிம்மதியா தொடருங்கப்பு.. ) சூறாவளிகள், நீர் ஊர்திகள் இவற்றிற்கும் பெண்பாலிட்டு குறிப்பிடப்படுவது ஏன் என்று பாடம் சென்று கொண்டிருந்தபோது, ஒரு மாணவன் ஒரு சந்தேகத்தை எழுப்பினான்..

" கணினி " - ஆணா... பெண்ணா..?

ஆசிரியைக்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை.. எனவே மாணவர்கள் தனியாகவும், மாணவிகள் தனியாகவும் கூடிப்பேசி இதற்கு முடிவு காணுமாறு அறிவுறுத்தினாள்..

மாணவிகள் கணினி ஆண்பால்தான் என்ற முடிவுக்கு வந்தார்கள்... அதற்கு அவர்கள் சொன்ன காரணங்கள் இதோ...

1) அதுக்கு எதையும் சுலபமா புரிய வைக்க முடியாது..

2) உருவாக்கினவனைத் தவிர வேறே யாருக்கும் அதோட நடைமுறையை புரிஞ்சிக்க முடியாது..

3) நாம ஏதாவது தப்பு பண்ணா மனசுலேயே வச்சிருந்து நேரம் பார்த்து மானத்தை வாங்கும்..

4) எந்த நேரத்துல புகையும்... எந்த நேரத்துல மயங்கும்ன்னு சொல்லவே முடியாது..

5) நம்ம கிட்ட இருக்கறதைவிட அடுத்தவங்க வச்சிருக்கறது நல்லா வேலை செய்யறது மாதிரி தோணும்...!



மாணவர்களோ கணிணி பெண்பால்தான்னு சாதிச்சாங்க.. அதுக்கு ஆதாரமா அவங்க சொன்னது இதோ...

1) எப்பவுமே அடுத்த கணிணியோட ஒத்துப் போகவே போகாது..

2) எட்ட இருந்து பார்க்க கவர்ச்சிகரமா இருக்கும்.. ஆனா கிட்டபோனாதான் அதோட வண்டவாளம் தெரியும்..

3) நிறைய ஸ்டோர் பண்ணி வச்சிருக்கும்.. ஆனா எப்படி பயன்படுத்தணும்ன்னு அதுக்கு தெரியாது..

4) பிரச்சினையை குறைக்கறத்துக்காக கண்டுபிடிக்கப்பட்டவை.. ஆனா பெரும்பாலான சமயங்கள்ல அதுகளேதான் பிரச்சினையே..

5) அதை சொந்தமாக்கிக்கிட்ட பிறகுதான் நமக்கு புரியும்.. அடடா இன்னும் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா இதைவிட அருமையான மாடல் கிடைச்சிருக்குமேன்னு...!



நன்றி : மின்னஞ்சல் நண்பர் - நர்மதன்

இலங்கையில் இப்படி ஓர் அதிசய இடமா?



இலங்கையில் இப்படி அதிசய இடமா? என்று கேட்குமளவிற்கு கிழக்கில் அதுவும் அம்பாறை மாவட்டத்தில் இவ்விடம் அமைந்துள்ளது. ஆம் பொத்துவில் நகரின் கடலருகே இவ்வதிசய இடம் உள்ளது. இதனை மண்மேடு என மக்கள் அழைக்கின்றனர்.ஆனால் உண்மையில் இதனை மண்மேடு என்று சொல்வதை விட மண்மலை என்றே கூறமுடியும். இரண்டு தென்னை மர உயரம் அளவிற்கு மணல் குவிந்து காணப்படுகிறது.

ஆனால் யாரும் குவிக்கவில்லை. அது இறைவனின் சிருஷ்டிப்பில் இயற்கையாக ஏற்பட்டுள்ளது.இம் மண்மலையால்தான் சுனாமி அனர்த்தத்தின்போது பொத்துவில் நகரம் பாதுகாக்கப்பட்டது என்பதனையும் இவ்வண் குறிப்பிடலாம்.

கடலருகே மண்மேடு அதுவும் மலை போலக் காணப்பட்டால் உல்லாசப்பயணிகளுக்கு கேட்கவும் வேண்டுமா? இதமான காற்று. கடற்காட்சி ரம்மியமான சூழல் என்றால் மக்களுக்குச் சொல்லவும் வேண்டுமா?

தினமும் பல நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு விஜயம் செய்து மண்மலையில் ஏறிச் சறுக்கி விளையாடி மகிழ்ந்து வருகிறார்கள்.











ஆ‌க் ஷ‌னி‌ல் ம‌ட்டுமே ராஜா‌ங்க‌ம் நட‌த்‌தி‌யிரு‌க்‌கிறது ‌விஜயகா‌ந்‌தி‌ன் அரசா‌ங்க‌ம்

ப‌ஞ்‌ச் வசன‌ம் இ‌ல்லை, அர‌சிய‌ல் ‌சிலேடைக‌ள் இ‌ல்லை. அட, விஜயகா‌ந்‌த் ‌திரு‌ந்‌தி‌வி‌ட்டாரா எ‌ன்று பா‌ர்‌த்தா‌ல், அதே பழைய கோ‌ட், து‌ப்பா‌க்‌கியுட‌ன் த‌னியாளாக ‌வி‌ல்ல‌ன்களை ப‌ந்தாடு‌கிறா‌ர்.

அய‌ல்நா‌ட்டு ‌வி‌ல்ல‌ன்க‌ள் உ‌ள்நா‌ட்டு ‌வி‌ல்ல‌னி‌ன் துணையுட‌ன் இ‌ந்‌திய ‌திருநா‌ட்டை நாச‌ம் செ‌ய்ய முய‌ல்‌கிறா‌ர்க‌ள். வழ‌க்க‌ம்போ‌ல ‌விஜயகா‌ந்‌த் ச‌ம்ம‌ர் சா‌ல்‌ட் அடி‌த்து நா‌ட்டை கா‌ப்பா‌ற்று‌கிறா‌ர்.

பழ‌கிய கதை‌யி‌ல் மாதே‌ஷி‌ன் ‌திடு‌க் ‌திரு‌ப்ப ‌திரை‌க்கதை சுவார‌ஸிய மே‌ற்படு‌த்து‌கிறது. ப‌ட்டை போ‌ட்ட க‌ல்லூ‌ரி மாணவனு‌ம், க‌ல்லூ‌ரி மாண‌வியு‌ம் கொலை செ‌ய்யு‌ம் போது கொ‌ஞ்ச‌ம் பத‌றி‌த்தா‌ன் போ‌கிறோ‌ம். ‌வி‌ஞ்ஞா‌‌னிகளையு‌ம், சா‌ப்‌ட்வே‌ர் தொ‌‌‌ழில‌திப‌ர்களையு‌ம் யா‌ர் கொலை செ‌ய்‌கிறா‌ர்க‌ள் என க‌ண்ட‌றிய வரு‌ம் அ‌திகா‌ரி ‌பிஜுமேம‌ன் காணாம‌ல் போ‌கிறா‌ர்.

போ‌‌‌லீ‌ஸ் அ‌திகா‌ரி ‌பி‌ஜுமேம‌ன் தா‌ன் ச‌திகார கூ‌ட்ட‌த்‌தி‌ன் தலைவ‌ன் எ‌ன தெ‌ரியவரு‌ம்போது ஷா‌க். போ‌‌‌லீ‌ஸ் அ‌திகா‌ரி ‌பி‌ஜுமேம‌ன் வேறு, ச‌திகார‌ன் வேறு என தெ‌ரிய வரு‌ம்போது டபு‌ள் ஷா‌க். ஆ‌‌க் ஷ‌ன் கதை‌யி‌ல் காத‌ல் கா‌ட்‌சிக‌ள் சொத‌ப்பலாக இரு‌க்கு‌ம். அரசா‌ங்க‌ம் ஆறுத‌ல். காது கேளாத ந‌வ்‌தீ‌ப் கவுரு‌ம் அவரது உ‌யி‌ர் ‌தியாகமு‌ம் ர‌‌சி‌க்க வை‌க்‌கிற த‌னி எ‌பிசோ‌ட்.

கனடாவு‌க்கு பட‌ம் நகரு‌ம்போது பெ‌ரிதாக எ‌தி‌ர்பா‌ர்‌‌க்‌கிறோ‌ம். எ‌தி‌ர்‌ப்பை மாதே‌ஷ் ‌நிறைவே‌ற்ற‌வி‌ல்லை. கனடா ‌விமான ‌நிலைய‌த்த‌ி‌லிரு‌ந்து ‌விஜயகா‌ந்‌த் த‌ப்‌பி‌ப்பது‌ம், அ‌ந்த பாதாள ப‌ன்‌றிகளு‌ம் ‌தி‌க்... தி‌‌க்...

விஜயகா‌ந்‌தி‌ன் ‌ரி‌ட்டைய‌ர்‌ட்மெ‌ண்‌ட் வயதை அவரது தொ‌ங்கு‌ம் சதைக‌ள் கா‌ட்டி‌க் கொடு‌க்‌கி‌ன்றன. ஆ‌க் ஷ‌ன் கா‌ட்‌சிகளா‌ல் அமு‌ங்‌கி‌ப் போ‌கிறது, ஸ்ரீகா‌ந்‌த் தேவா‌‌வி‌ன் இசை. ஒ‌ளி‌ப்ப‌திவாள‌ர் ஏ.வெ‌ங்‌கடே‌ஷூ‌க்கு பா‌ஸ் மா‌ர்‌க் தரலா‌ம்.

ஷெ‌ரி‌ல் ‌பி‌ரி‌ண்டோவு‌ம், ஸ்ரீமனுடனான ச‌ண்டை‌க்கா‌ட்‌சியு‌ம் வலு‌க்க‌ட்டாயமான ‌தி‌ணி‌ப்பு.