டிவிட்டருக்கும் பேஸ்புக்குக்கும் மறைமுக போட்டி!


டிவிட்டர் இண்டெர்நெட்டில் கால் வைத்ததில் இருந்தே பேஸ்புக்கு கொஞ்சம் அதிகமாகவே பாதிக்கப்பட்டுள்ளது. டிவிட்டர் எண்டிரி ஆனவுடன் பலரும் கூறி வந்த கருத்து இனி பேஸ்புக் எல்லாம் வேஸ்ட் தான் என்று ஆனால் இன்று விட்ட இடத்தை சரியான நேரத்தில் பிடித்து கொண்டு வருகிறது.
டிவிட்டர்-ல் இல்லாத பல சேவைகளை பேஸ்புக் சமீபகாலமாக அதிகப்படுத்தியுள்ளது இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் முன்பு எல்லாம் பேஸ்புக் இனையதளத்தை திறந்தால் திறக்க அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் ஆனால் இன்று அதிவேக இண்டெர்நெட் இல்லாத கணினியிலும் வேகமாகவே தெரிகிறது. அதோடு நாம் பேஸ்புக்-ல் பயன்படுத்தும் படத்தின் அளவையும் கூட்டியுள்ளது.

நாம் டிவிட்டரில் ஷாட் யூஆரல் ( சுருக்கப்பட்ட முகவரி) பயன்படுத்துவோம் ஆனால் சில நேரங்களில் இது வைரஸ் அல்லது ஆபாச இணையதளங்களுக்கு செல்கிறது எத்தனை பயர்வால் பயன்படுத்தினாலும் இந்த பிரச்சினை இன்னும் தீரவில்லை அதோடு சமீபத்தில் தான் டிவிட்ட்ரை ஹக்கர் விளையாட்டு பொருளாக்கி டிவிட்டர் பயனாளர்கள் அனைவரையும் அச்சப்படுத்தினர்.

இதிலிருந்து இப்போது தான் மீண்டு வருகிறது இது தான் தனக்கு சாதகமான காலகட்டம் என்று பேஸ்புக் தன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சலுகைகள் என்று அள்ளிவிடுகிறது. பேஸ்புக் பயன்படுத்தி கொண்டிருக்கும் வாடிக்கையாளர்கள் சமீபத்தில் பேஸ்புக்-ல் வரும் மாற்றங்கள் அனைத்தும் புதுமையாகவும் வித்தியாசமாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

டிவிட்டரும் தன்பங்கிற்கு டிவிட் லோக்கேசன் என்பதையும் சேர்த்துள்ளது. டிவிட்டருக்கும் பேஸ்புக்கிற்கும் நடுவில் இப்படி ஒரு மறைமுக யுத்தம் நடைபெற்று வருகிறது இதனால் பயன் அடைவது நாம் என்ற மகிழ்ச்சி தான் இப்போது நமக்கு உள்ளது.

வைரஸ் பரவலை தடுக்க மைக்ரோசாப்ட்டின் 'பாதுகாப்பு கவசம்'

கடந்த வாரம் சீனாவில் கூகுள் நிறுவன செயல்பாடுகளை பெருமளவில் பாதித்த வைரஸைப் போல, தற்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரரை குறி வைத்து பரவி வரும் வைரஸ் தாக்குதலிலிருந்து தனது வாடிக்கையாளர்களைக் காக்க புதிய வகை சாப்ட்வேரை களம் இறக்கியுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

இதுகுறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் கூறுகையில், கூகுள் உள்பட சீனாவில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் குறி வைத்து கடந்த வாரம் வைரஸ் தாக்குதல் நடத்தப்பட்டது.

குறி்ப்பாக இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மூலமாக இந்த வைரஸ் பரப்பப்பட்டது.

இதையடுத்து எக்ஸ்புளோரர் பிரவுசரை பயன்படுத்துவோரைக் காக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் ஒரு புதிய சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. இதை நிறுவிக் கொண்டால் இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க முடியுமாம்.

இதுகுறித்து உலகின் முன்னணி பாதுகாப்பு சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான சிமென்டெக்கின் பாதுகாப்பு ஆய்வாளர் ஜான் ஹாரிசன் கூறுகையில், மைக்ரோசாப்ட்டின் பலவீனமான பிரவுசர்களின் ஓட்டைகளைப் பயன்படுத்தி அவற்றை செயலிழக்க வைக்கக் கூடிய வைரஸ்கள் களம் இறக்கப்பட்டுள்ளன.

இப்போது இந்த வைரஸ், இன்டர்நெட் எக்ஸ்புளோரர்-6ஐ வெகுவாக தாக்குகிறதாம். 7 மற்றும் 8வது வெர்சனை தாக்கக் கூடிய வகையில் அந்த வைரஸ்களை வலுவாக்கும் முயற்சிகளிலும் 'ஹேக்கர்கள்' ஈடுபட்டுள்ளனர்.

கிட்டத்தட்ட 100 முன்னணி இணையத் தளங்களில் இதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இவை மிகவும் அபாயகரமானவை. பிரவுசர் வழியாக நுழைந்தவுடனேயே இது கம்ப்யூட்டரைத் தாக்கி விடும் என்றார்.

தற்போதைய புதிய சாப்ட்வேரால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூலம் வைரஸ் தாக்குவதைத் தடுக்க முடியும் என மைக்ரோசாப்ட் கூறுகிறது.

மேலும், சில வகை வைரஸ்கள் மூலம் நமது கம்ப்யூட்டரில் உள்ள டேட்டாக்கள் உள்ளிட்டவற்றை தொலை தூரத்திலிருந்தபடி உளவு பார்க்கும் வேலைகளையும் சிலர் செய்ய ஆரம்பித்துள்ளனராம் என்கிறார் மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் பாமர்.

சீனாவில் கூகுள் நிறுவனத்திற்கு ஏற்பட்ட பெரும் வைரஸ்-உளவு சாப்ட்வேர் தாக்குதலால், அங்கிருந்து தனது அலுவலகங்களை இடம் மாற்றப் போவதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. அதேசமயம், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன்னிடம் அப்படிப்பட்ட திட்டம் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது.

வைரஸ் தடுப்பு சாப்ட்வேரை நிறுவிக் கொள்ள தனது இணையதளத்திற்குச் செல்லுமாறு வாடிக்கையாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம்.

முதன் முதலாக "டிவி'க்களில் ஸ்கைப்

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம்.

இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.

இனி இந்த வகைத் தொடர்பினை, "டிவி'க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக "டிவி'க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது.

இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த "டி.வி'க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.

இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது.

வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை "டிவி'க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

வீடியோ அழைப்புகளை இந்த "டிவி'க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை "டிவி'க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது.

ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.

இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது.

இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம்.

பதட்டத்தை வெல்லப் பதினொரு வழிகள்

பதட்டம், பல்வேறு நிலைகளில் பல்வேறு விதங்களில் மனிதர்களைப் பாதிக்கிறது. பதட்டம் என்பது ஒரு மனநோயன்று. ஆனால், அதைத் தொடக்கத்திலேயே நாம் கிள்ளியெறிய மறந்தால் அது மனநோய்க்கு வித்தாகிவிடக்கூடும்.
எனவே பதட்டம் எதனால் உண்டாகிறது, அதனை எப்படித் தவிர்க்கலாம் என்று அறிய வேண்டும்.

சிறு குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோமோ, அவர்களுக்கு என்ன கற்றுத்தருகிறோமோ அதுதான் பொதுவாக அவர்களது குண நலங்களுக்கு அடிப்படையாகிறது. எனவே சிறு குழந்தைகளாக இருக்கும்பொழுதே அவர்களைப் பலருடன் பழகவும், பல சூழல்களைக் கையாளவும் கற்றுக்கொடுத்துவிடுவதும், குழந்தைகளை மட்டம் தட்டி, கேலி செய்யாமல் தட்டிக்கொடுத்து வளர்ப்பதும் மிகவும் அவசியம். சிறு குழந்தைகளாக இருக்கையில் பிறருடன் பேச, பழக வெட்கப்படும் குழந்தைகளை அப்படியே விட்டுவிடாமல், மெள்ள மெள்ளப் பலருடன் பழக வாய்ப்பினை உண்டாக்கி, பயிற்சி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், வளர்ந்தபின், பள்ளி அல்லது கல்லூரியில் படிக்கையில், நான்கு பேருடன் பேசவோ, வெளியில் செல்லவோ நேர்கையில் பதட்டத்தால் அவர்கள் ஆக்கிரமிக்கப்பட்டுவிடக்கூடும். இத்தகையவர்கள் தமது ஆசிரியர்களிடன் தமது சந்தேகங்களைக் கேட்கவோ, தமது உடன் படிப்பவர்களுடன் பேசவோ நேரும்பொழுது அதிகக் கூச்சத்தாலும் பயத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுவிடுவர். பொது இடங்களுக்குச் செல்வது, சிறிய குழுவுடன் பேச நேர்வது இவை அவர்களுக்கு அதிகப் பதட்டத்தை உண்டாக்கும்.

அதேபோல், சிறு குழந்தைகளாக இருக்கையில் கேலிக்கு ஆளாகி வளர்ந்தவர்கள், பெற்றோராலும் மற்றவர்களாலும் திட்டி, மட்டம் தட்டி வளர்க்கப்பட்டவர்கள், பெரியவர்களாகியபின் கூட எந்தச் செயலைச் செய்வதானாலும், குழப்பமும் பதட்டமும் அடைவார்கள். பிறருடன் பேசுகையில் கைகால்கள் நடுங்குதல், உடல் வியர்த்தல், புதிய இடங்களுக்குச் செல்லத்தயங்குதல் இவையெல்லாம் பதட்டமான மனநிலைக்கு அறிகுறி. புதிய சூழலுக்கு ஆட்படுகையில் சிலர் பதட்டத்தால் மயக்கமடைவதும் மாரடைப்பு ஏற்படுவதும்கூட நடப்பதுண்டு.

இத்தகைய பதட்டமான மனநிலை உடையவர்கள், தாழ்வு மனப்பான்மைக்குள் விழுந்துவிடுவதும் மனச்சோர்விற்கு ஆளாவதும் அதிகம். பதட்டம் என்ற ஒரு குணம் இவர்களது நேரத்தையும் ஆற்றலையும் விழுங்கி, இவர்களது திறமைகளைப் பிரகாசிக்க விடாமல் வீணடிக்கச் செய்கிறது. எனவே, இவர்கள் தம்மையே சுய பரிசோதனை செய்துகொண்டு, தாம் இந்தப் பதட்டம் என்னும் சிறையில் இருந்து விடுபட நினைத்தால் அதற்கு என்ன வழி?

பதட்டத்தை வெல்ல நினைப்பவர்களுக்கு!

முதலில் வாழ்த்துக்கள். நீங்கள் பதட்டத்தை வெல்ல வேண்டும் என நினைப்பதே ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா?

நமது எண்ணங்களே நாம் வாழ்வின் அடிப்படை. நமது நேர்மறை எண்ணங்கள் நமக்கு நற்பலனையும், எதிர்மறை எண்ணங்கள் தோல்வியையும் உண்டாக்குகின்றன. தவறு செய்துவிடுவோமோ என்ற அச்சத்துடன் செய்யும் வேலைகள் தவறாகவேதான் முடியும். எனவே எதிர்மறையான சிந்தனைகள் (Negetive Thinking) தோன்றும்பொழுது கவனமாக உங்கள் மனத்தை வேறு நேர்மறை எண்ணங்களுக்குத் (Positive Thinking) திருப்புங்கள். ஆரம்பத்தில் கொஞ்சம் கடினமாக இருக்கும் என்றாலும் கொஞ்ச நாளில் உங்கள் மனமானது தானாகவே நேர்மறைக்கு மாறிவிடக் காண்பீர்கள்.

ஒரு தாளைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களிடம் உள்ள குறைபாடுகள் என்னென்ன? எந்தெந்த விஷயங்கள் உங்களுக்குப் பதட்டத்தைத் தூண்டுகின்றன எனப் பட்டியலிடுங்கள். பின் நிதானமாக அக்காகிதத்தைக் கிழித்து குப்பைத்தொட்டியில் எறியுங்கள். இக்குறைபாடுகள் என்னை விட்டு வெகு விரைவில் நீங்கிவிடும் என்றும், இனி இச்சூழல் என்னை அச்சுறுத்தாது. இத்தகைய சூழலை எதிர்கொள்ளும் தெம்பு எனக்கிருக்கிறது என்றும் திடமான குரலில் உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள். சுய அறிவுரை(Autosuggestion) என்ற இந்த முறை ஆழ்மனத்தில் உங்களைப் பற்றி நீங்களே பதித்து வைத்திருக்கும் தவறான பிம்பத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிடும்.

உங்களிடம் உள்ள திறமைகள் மற்றும் உங்கள் நிறைகள் என்னென்ன என்பதைப் பட்டியலிடுங்கள் (குறைந்தபட்சம் பத்து). எனக்கு எந்தத் திறமையுமே இல்லை என்று பதில் சொல்லாதீர்கள். 'எறும்பும் தன் கையால் எட்டுச் சாண்' என்பார் அவ்வைப்பிராட்டி. இனிமையான குரலா, உயரமா, நினைவு வைத்துக்கொள்ளும் திறமா, கணக்கில் புலியா, வேகமாக ஓட வல்லவரா, சமையலில் திறமைசாலியா, பிறருக்கு உதவும் குணமும் மனமும் உள்ளவரா? என்னென்னவெல்லாம் உங்களுடைய நல்ல குணங்கள் அல்லது திறமைகள் என்று கருதுகிறீர்களோ அவை எல்லாவற்றையும் பட்டியலிட்டுப் பாருங்கள். உங்கள் மனம் சோர்வடைகையில் அப்பட்டியலை எடுத்துப் படித்துப் பாருங்கள்.

நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் அல்லது வாழ்வில் உங்கள் இலக்கு என்ன? இதைச் சற்று ஆழ யோசியுங்கள். இந்தப் பதட்டம் அதற்கு எந்த வகையில் தடையாக இருக்கும் என்பதைச் சிந்தித்து, "இதில் இருந்து நான் வெளியில் வந்தே தீருவேன். என் இலக்கை அடைந்தே தீருவேன்" என்று இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் உரக்கச் சொல்லிக்கொள்ளுங்கள்.

காலை எழுந்தவுடன் கண்ணில் படுகின்ற மாதிரியான இடத்தில், நல்ல ஆரோக்கியமான பொன்மொழிகள், உற்சாகமூட்டும் சுவரொட்டிகள் இவை இருக்குமாறு ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். இரவு படுக்கைக்குச் செல்லுமுன், சிறியதோ பெரியதோ, உங்களுக்கு நடந்த நன்மை ஒன்றை நினைவு படுத்திக்கொள்ளுங்கள்.

எப்பொழுதும் ஏதாவது பரபரப்பாகச் செய்துகொண்டு இருங்கள். 'Idle man's brain is devil's workshop' என்பது ஆங்கிலப்பழமொழி. தனியாக இருக்கையிலும், வேலையில்லாமல் இருக்கையிலும் நமது மனக்குரங்கு பல கிளைகளில் தாவித்தாவிச் செல்லும். அவ்வாறு அக்குரங்கு தாவும் பல நினைவுக்கிளைகள் எதிர்மறையானதாக இருக்கும். எனவே மனத்தை அலைபாய விடாமல் ஒரு நிலைப்படுத்தவேண்டுமானால் உடலுக்கும் மனதிற்கும் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது அவசியம்.

தியானம் பதட்டத்திற்கு அருமருந்து. தியானமும், மூச்சுப்பயிற்சியும் பதட்டத்தைப் பெருமளவு கட்டுப்படுத்தக் கூடியவை. முடிந்தால் முறையாக ஒரு குருவை நாடி தியானம், யோகா, பிராணாயாமம் முதலியவற்றைக் கற்றுக்கொள்ளுங்கள். முடியாத பட்சத்தில் மெல்லிய இசையை ஒலிக்க விட்டு (ஓம் என்ற ஒலி மனதை ஒருநிலைப்படுத்துவதற்குப் பெரிதும் உதவுகிறது. இல்லையென்றால் தியானத்திற்கென்றே சீராக ஒலிக்கும் இசைத்தட்டுகள் கிடைக்கின்றன, அவற்றையும் பயன்படுத்தலாம்.) கண்களை மூடி இசையினையும் உங்கள் சுவாசத்தையும் மட்டும் கவனித்தவாறு பத்து நிமிடங்கள் அமர்ந்திருங்கள். உங்கள் மனம் உங்கள் கட்டுப்பாட்டை விட்டு நழுவி வேறு எண்ணங்களுக்குச் செல்லத்தான் செல்லும். ஒவ்வொருமுறையும் அதை ப் பிடித்து இழுத்து வருவது உங்கள் பொறுப்பு. நாள்பட நாள்பட தியானம் செய்வது பழகிவிடும். உங்கள் ஒருமுகப்படுத்தும் திறனும் கூடிவிடும்.

உங்களை உணர்ச்சிவசமாக்கும் செய்திகளை, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இரவில் படுக்கைக்குச் செல்லுமுன் தவிர்த்துவிடுங்கள். உங்கள் நண்பர்களில் கூட எப்பொழுதும் யாரையாவது எதிர்மறையாக விமர்சிக்கும், கேலி செய்யும் நபர்கள் இருந்தால் அவர்களை விட்டு விலகியே இருங்கள். நேர்மறைச்சிந்தனை, உற்சாகம் இவற்றுடன் இருப்பவர்களுடன் உங்கள் நட்பை உருவாக்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களில் யார் உங்கள் நம்பிக்கைக்குரியவரோ அவரிடம் உங்கள் மனத்தில் உள்ள சுமைகளை, சந்தேகங்களை, பயங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள். புதியவர்களுடன் பழக நேர்ந்தால் எப்படிப்பழகுவது, ஒரு குழுவில் பேசுவது எப்படி என்றெல்லாம் அவருடன் சேர்ந்து பயிற்சி செய்து பாருங்கள். நீங்கள் புதிய இடத்தில் பலருடன் கலகலப்பாகப் பழகுவது, பொது இடத்தில் தைரியமாக உரையாடுவது, ஆய்வரங்கில் கலந்து கொள்வது இவை போல நேர்மறையாகக் கற்பனை செய்து பாருங்கள்.

அழகாக, கம்பீரமாக உடையணியுங்கள். நிமிர்ந்து நில்லுங்கள், நடங்கள். உங்களைக் கண்ணாடியில் பார்க்கையில் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊற்றெடுக்க வேண்டும். கண்ணாடி முன் நின்று பேசிப்பழகுங்கள். நிறைய நகைச்சுவைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை அளிக்கும் நூல்கள், பொது அறிவை மேம்படுத்தும் புத்தகங்கள் அல்லது இவை தொடர்பான வலைத்தளங்களைப் படியுங்கள்.

தண்ணீரில் இறங்காமல் கரையில் நிற்கும்வரை நீச்சல் பழகுவது என்பது முடியாது. நீங்களாகவே பேருந்தில் பக்கத்தில் அமர்ந்திருக்கும் உங்கள் சக பயணியிடம் மெல்லப் பொது விஷயங்களைப் பற்றிப் பேச்சுக் கொடுப்பது, உங்கள் நண்பர்கள் மத்தியில் ஒரு புதிய கதை அல்லது நகைச்சுவைத் துணுக்கைப் பகிர்ந்துகொள்வது என்று மெல்ல மெல்லப் பயிற்சி செய்யுங்கள். உங்கள் அலுவலகக் கூட்டங்களில் குறைந்த பட்சம் ஒரு கேள்வி கேட்பது அல்லது ஒரு யோசனை சொல்வது என்று முடிவு செய்து அதைச் செயல் படுத்திப்பாருங்கள்.

கொஞ்ச நாளில் 'பதட்டமா! போயே போச்சே, போயிந்தி, Its gone' என்பீர்கள்

உலகத்தின் அதிவேக ரயில் சீனாவில் இயக்கம்



சீனாவில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன.

ஜப்பான் ரயில் 243 கிலோ மீட்டர் வேகத்திலும், பிரான்ஸ் ரயில் 277 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியையொட்டி சீனாவில் அதிவேக ரயில்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.

சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிருந்து தெற்கு பகுதியில் உள்ள குவாங்சு நகர் வரை இந்த அதிவேக ரயில் சென்று வருகிறது. ஆயிரத்து 68 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன.

வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் தெற்கு பகுதியில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 42 தடங்களில் இந்த அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, இந்த அதிவேக ரயில், 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்!



அவுஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு மின் உபகரணத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த அசாதாரண தொழில் நுட்பக் கருவி 'ப்ரைன்போர்ட் விசன் டிவைஸ் ' ( BrainPort vision device ) என்று அழைக்கப் படுகிறது. இக்கருவி பார்வைக்கு மிகச் சாதாரணமாக , ஒரு சிறிய கையிலடங்கும் கொண்ட்ரோல் கோலையும் ( control unit) ஒரு கறுப்புக் கண்ணாடியையும் ( pair of sunglasses) அதனுடன் இணைக்கப் பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பையும் அதன் முடிவில் அமைந்த ஒரு லொலிப்பொப் ( lollipop) இனிப்பு வடிவில் அமைந்த பிளாஸ்டிக் அமைப்பையும் கொண்டுள்ளது.

சுமார் 2.5 cm விட்டமுள்ள மிகச் சிறிய கேமரா ( digital video camera) கறுப்புக் கண்ணாடியின் மத்தியில் பதிக்கப் பட்டுள்ளது. ஒருவர் இதனை அணியும் போது காட்சிகள் காமெராவினால் பதிவெடுக்கப் பட்டு கையினால் இயக்கப் படும் control கோலுக்கு அனுப்பப் படுகிறது. இது கிட்டத் தட்ட ஒரு கைத் தொலைபேசி யளவில் இருக்கிறது. இங்கே பதிவான காட்சிகள் மின்னதிர்வுகளாக மாற்றப் பட்டு, பிளாஸ்டிக் இணைப்பின் மூலமாகவும், இறுதியில் நாவின் மேல் வைக்கப் படும் லொலிப் பொப் உபகரணம் மூலமாக உணரப் படுகின்றன. இந்த மெல்லிய உணர்வுகள் நரம்பின் மூலம் மூளையைச் சென்றடையும் போது அவர்கள் காட்சிகளைக் காண முடிகிறது.

கிட்டத்தட்ட 20 மணி நேரப் பயிற்சியில் இந்தக் கருவியை ஒருவர் பாவிக்கும் முறையை முற்றாக அறிந்து கொள்ள முடியுமென்று அறிந்துள்ளனர். ஒரு பார்வை அற்றவர் மூலம் இந்தக் கருவியை முதலில் சோதனை செய்தபோது முதல் முதலாக எழுத்துக்களைப் பார்த்து ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். அத்தோடு இந்த கொன்றோல் கோல் காட்சிகளை பெரிதாக்கவும் (zoom) வெளிச்சத்தைக் குறைக்கவும் அதிகரிக்கவும் வசதியளிக்கிறது.

இந்த மகத்தான கண்டு பிடிப்புக்குப் பொறுப்பான ஆய்வினர் , பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறிவதற்கும், மற்றவர் உதவியில்லாமல் நடமாடவும், போகும் திசைகளையும் ஊர்களின் பெயர்களையும் படிப்பதற்கும் உதவியாகயிருக்கும் என்றும் , இந்தக் கருவியை உபயோகித்து புத்தகம் படிப்பது அவசியமில்லை என்று சொல்கிறார்கள்.

அவர்கள் அறிக்கையின் படி இக்கருவி மிக விரைவில் விற்பனைக்கு வருமென்று தெரிகிறது. இக் கருவி கண் பார்வையற்றவர்களின் தன்னம்பிக்கையையும் , தற்பாதுகாப்பையும் அதிகரிக்கும் ஒரு மிகப் பெரிய வரப் பிரசாதம்.

கணினியிலுள்ள தகவல்களை அழிக்கும் வைரஸ்கள்

1. வைரஸ் (Virus)

வைரஸ்கள் பல வகைகளாக உபயோகத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் இதன் பொதுவான குணமானது ஒரு கணினியில் உள்ள EXE எனப்படும் விரிவு கொண்ட புரோகிராம்களுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொள்ளும் திறன் கொண்டது.

இது போன்று சேர்ந்து கொண்ட வைரஸ் புரோகிராமானது அந்த EXE விரிவு கொண்ட புரோகிராமை உபயோகப்படுத்தும் போது நாம் எதிர்பாரா வகையில் அந்த புரோகிராமை இயக்க முடியாத வகையில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். சில வைரஸ்கள் நமது புரோகிராம்களில் உள்ள சில கரக்டர்களை வேறு சில கரக்டர்களாக மாற்றியோ அல்லது நமது புரோகிராம் வ?களை காணாமல் செய்தோ பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுவரை பல்லாயிரக்கணக்கான வைரஸ்கள் உலகில் உபயோகத்தில் இருந்து வந்தாலும் சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த I Love You எனப்படும் வைரஸ் கணினியில் ஏற்படுத்திய பாதிப்பை யாரும் எளிதில் மறந்திருக்க முடியாது.


2. டிராஜன் ஹோர்ஸ் (Trojan Horse)


இது ஒரு புது வகையான வைரஸ் ஆக கருதப்பட்டாலும் இதன் பாதிப்புகள் நாம் எதிர்பாராத வகையில் இருக்கும். ஏனென்றால் இந்த வகை வைரசானது ஒரு கணினி புரோகிராமுடன் தானாகவே சென்று ஒட்டிக் கொண்டாலும் பல நேரங்களில் எதிர்பார்க் காத சில வேலைகளைச் செய்யும்படி அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஒரு யூசர் தனது புரோகிராமை எடுத்து அதில் சிலமாற்றங்களைச் செய்ய முற்படும்போது அந்தப் புரோகிராமை அழித்து விடும் தன்மை கொண்டது தான் இந்த டிராஜன் ஹோர்ஸ் ஆகும். இது போன்று புரோகிராம்களை அழித்து விடுவதால் யூசர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பிப் போகும் நிலை உருவாகிறது.

3. வோம் (Worm)

இந்த வகை வைரஸ் ஆனது சற்று வேடிக்கையானதும் கூட. ஏனென்றால் ஒரு புரோகிராமை நாம் கொப்பி செய்யும் போது அதே போன்று அதே பெயரில் மற்றொரு புரோகிராம் ஒன்றும் உருவாகும். இந்த இரண்டு புரோகிராம்களின் அளவும் ஒரே அளவாகவே காட்டும். ஆகையால் நாம் ஏதாவது ஒன்றை அழிக்க நினைத்து புரோகிராமை அழித்து விடுவோம். அதன் பிறகு நம்மிடம் இருக்கும் அந்த மற்றொரு புரோ கிராமை எடுத்து அதில் உள்ள தகவல்களை பார்த்தோமேயானால் ஒன்றுமே இருக்காது. ஒரு புரோகிராம் வரி கூட இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டிருக்கும்.

பொதுவாக ஓர் அலுவலகத்தில் கணினியை உபயோகிக்கும் ஒருவர் ஒவ்வொரு முறையும் தனது கணினியில் இருந்து Server கணினிக்கு தகவல்களை அனுப்பும் போதும் இது போன்ற வைரஸ்கள் உள்ளதா என்று சோதனையிட வேண்டும்.

அது போன்று சோதனையிடும் போது இது போன்ற அபாயகரமான வைரஸ் புரோகிராம்களை அழித்து விட்டு பிறகு தான் அவற்றைக் கணினியில் பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

2036-ம் ஆண்டு பூமியில் மோதும் ராட்சத விண்கல்

விண்வெளியில் கோடிக்கணக்கான விண்கற்கள் சுற்றி வருகின்றன. அவை எப்போதாவது பூமி ஈர்ப்பு விசைக்குள் வந்து பூமியை நோக்கி வேகமாக வரும். ஆனால் வரும் வேகத்தில் அவற்றில் தீப் பிடித்து நடுவானிலேயே சாம்பலாகி விடும்.

அளவில் சிறிய கற்கள் இப்படி சாம்பலாகி விடுவது உண்டு. பெரிய கற்களாக இருந்தால் எரிந்து சாம்பலாகாமல் அதன் மீது பகுதி பூமியில் விழுவதும் உண்டு. அதுவும் சிறிய அளவே இருப்பதால் பெரிய பாதிப்புகள் எதுவும் சமீப காலங்களில் ஏற்படவில்லை.

இப்போது மிகப் பெரிய ராட்சத கல் ஒன்று பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அது விண்ணில் தீப்பிடித்தாலும் கூட கல் பெரிய அளவில் இருப்பதால் பூமிக்கு பெரும் சேதம் ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கிறார்கள்.

இந்த கல் 350 மீட்டர் குறுக்களவு உள்ளது. அதன் சுற்று வட்ட பாதையில் இருந்து விலகி கொஞ்சம் கொஞ்சமாக பூமி பக்கமாக வந்து கொண்டிருக்கிறது.

2029-ம் ஆண்டு இந்த கல் பூமிக்கு 30 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் வரும். அடுத்த 7 ஆண்டில் மேலும் பூமியை நோக்கி நகர்ந்து 2036-ம் ஆண்டு பூமி சுற்றுப் பாதைக்குள் நுழையும். உடனே புவி ஈர்ப்பால் ஈர்க்கப்பட்டு பூமியில் விழும்.

அப்போது பூமியில் பிரான்சு நாட்டு அளவுக்கு பெரிய பள்ளம் உருவாகும். பல லட்சம் மக்கள் உயிரி ழக்கவும் நேரிடும். பூகம்பம், சுனாமி, போன்ற இயற்கை பேரழிவு நிகழலாம்.

எனவே இதை நடுவானிலேயே அழிக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக ஆய்வில் ரஷிய விஞ்ஞானிகள் ஈடுபடுகிறார்கள். அவர்களுடன் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய விஞ்ஞானிகளும் ஆய்வு செய்கின்றனர்.

இது தொடர்பான விஞ்ஞானிகள் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று ரஷிய விண்வெளி ஆராய்ச்சி மைய தலைவர் அனாடலி பெரிமினோங் தெரிவித்தார்.