அமெரிக்க பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள்

அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு நிறைமாத கர்ப்பிணி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட் டிருந்தார். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

இதனால் ஆஸ்பத்திரிலேயே தங்க வைத்து சிகிச்சை அளித்தனர். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. குழந்தைகள் இயற்கையாக பிரசவமானால் சிக்கல் ஏற்படும் என்று டாக்டர்கள் கருதினார்கள்.இதனால் சிசேரியன் ஆபரேஷன் செய்து குழந்தைகள் வெளியே எடுக்கப்பட்டது. மொத்தம் 8 குழந்தைகள் பிறந்தன. இதில் 6 ஆண் குழந்தைகள், 2 பெண் குழந்தைகள்.

இந்த குழந்தைகள் 820 கிராமில் இருந்து. 1 கிலோ வரை இருந்தன. அனைத்து குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த பெண்ணின் பெயர் மற்றும் விபரங்களை இதுவரை வெளியிட வில்லை.

ஒரே பிரசவத்தில் 8 குழந்தைகள் பிறப்பது இது 2-வது சம்பவம். 1998-ம் ஆண்டு அமெரிக்கா ஹுஸ்டன் நகரில் நிகேன் என்ற பெண்ணுக்கு 8 குழந்தைகள் பிறந்தன. அதில் ஒரு குழந்தை ஒரு வாரம் கழித்து இறந்து விட்டது. மற்ற 7 குழந்தைகளும் சமீபத்தில் தான் தங்கள் பிறந்த நாளை கொண்டாடின.

நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர்


மொழிவல்லுனர் தமிழ் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்கள் இறந்து ஆண்டுகள் 62 ஓடி மறைந்துவிட்டன. 1875ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் திகதி யாழ்ப்பாணத்திலுள்ள மானிப்பாய் என்னும் ஊரில் பிறந்த அவர் 1947ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் திகதி அதே ஊரிலுள்ள மானிப்பாய் மருத்துவ மனையில் மரணமானார். அவரது 60வது வயதில் அவருக்கு ஏற்பட்டிருந்த நோயினால் அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உண்டாகியிருந்ததென்றாலும் அந்த ஆபத்திலிருந்து அவர் தப்பிப்பிழைத்திருந்தார். ஆனால் 1947ம் ஆண்டில் அவருடைய 72ம் வயதில் அவரைப் பீடித்திருந்த நெருப்புக்காய்ச்சல் அவருடைய உயிரை விட்டுவைக்கவில்லை.

தமிழ்த்தொண்டு

இவ்வுலகில் அவர் வாழ்ந்திருந்த 72 ஆண்டுகளில் தமிழுக்கும் தான் சேர்ந்திருந்த சமயத்துக்கும் அவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியன, மகத்தானவை. அவருடைய பெயரும் புகழும் இலங்கையில் மட்டுமல்ல இந்தியா, ஜேர்மனி போன்ற நாடுகளிலும் பரவியிருந்தன. அவருடைய தமிழ்த்தொண்டை பாராட்டித் தமிழ் நாட்டில் அறிவுக்களஞ்சியங்களாக விளங்கிவரும் ஆதீனங்களில் ஒன்றான திருப்பனந்தாள் மடம் அவரை கௌரவித்து சன்மானமும் வழங்கியிருந்தது. அறிவு ஆராய்ச்சி செய்திறன் ஆகியவற்றுக்கு பெயர் எடுத்திருந்த ஜேர்மனி, சுவாமி ஞானப்பிரகாசரின் பெருமையை உணர்ந்து மதித்து 1939ம் ஆண்டில் அவருடைய வாழ்நாளிலேயே அவருடைய உருவத்துடன் ஒரு முத்திரையை வெளியிட்டு அவரை கௌரவித்தது.

இலங்கை அரசாங்கம் 1981ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதி அவருடைய நினைவாக ஒரு முத்திரையை வெளியிட்டிருந்தது. இன்று திராவிட மக்களின் புராதன நாகரிகத்தின் சிறப்பை உலகிற்கு எடுத்துக்காட்டிக் கொண்டிருக்கும் சிந்து நதிப்பள்ளத்தாக்கிலுள்ள் ஹரப்பா , மொஹஞ்சதாரோ நகரங்களின் எழுத்து. ஆராய்ச்சியிலீடுபட்டிருந்த ஹெரஸ் பாதிரியார் என்பவர் தனக்கு ஏற்ப்பட்டிருந்த சில சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு அவரைத் தேடி வந்து ஆலோசனை கேட்குமளவிற்கு அறிவும் ஆராய்ச்சியும் பெருமையும் கொண்டவராகவிருந்தார்.

ஆசிரியரின் மகன்

எட்டாவது பரராசசேகரின் பரம்பரையில் சைவக்குடும்பத்தில் பிறந்தவர் சுவாமி ஞானப்பிரகாசர். அவர் பிறந்த பொழுது பெற்றோர்கள் அவருக்கு இட்டிருந்த பெயர் வைத்திலிங்கம் என்பதாகும். கனகரத்தினம் என்ற செல்லப்பெயரினால் அவர் அழைக்கப்பட்டார். அவருடைய தந்தையார் ஒரு ஆசிரியர். இராசசிங்கம் சுவாமிநாதன்பிள்ளை என்பது அவருடைய பெயர். தாயார் பெயர் தங்கமுத்து ஆகும். இவர் காடினர் சிற்றம்பலம் என்பவரின் மகளாகும்.

ஞானப்பிரகாசருக்கு 5 வயதிருக்கும்போது அவருடைய தந்தையார் இறந்துவிட்டார். அதன் பின்பு அவருடைய தாயார் அச்சுவேலியிலிருந்த தம்பிமுத்து என்ற கத்தோலிக்கரை மறுமணம் செய்து கொள்வதற்காக அம்மதத்திற்கு சேர்ந்த பொழுது அவருடைய மகனும் கத்தோலிக்க மதத்தில் சேர்க்கப்பட்டார். அப்பொழுது அவருக்கு இடப்பட்ட பெயரே ஞானப்பிரகாசம் என்பதாகும். காலப்போக்கில் அவருடைய புகழும் மதிப்பும் வளரத்தொடங்க ஞானப்பிரகாசம் என்ற அவருடைய பெயர் ஞானப்பிரகாசர் என்ற மரியாதையுடன் வழங்கி வரப்படலாயிற்று.

வளர்ப்புத்தந்தை

ஞானப்பிரகாசருடைய வளர்ப்புத்தந்தையார் தம்பிமுத்து அவர்கள் ஒரு நல்ல தமிழ் அறிஞர். அச்சுவேலியில் ஒரு அச்சுக்கூடம் வைத்திருந்து தமிழில் பல கத்தோலிக்க சமய நாடகங்களை வெளியிட்டு வந்தார். சன்மார்க்கப் போதினி என்ற ஒரு சமய சஞ்சிகையையும் வெளியிட்டு வந்தார். இளம் ஞானப்பிரகாசருக்கு அவருடைய அச்சுக்கலையில் பயிற்சி அழித்ததோடல்லாமல் தமிழில் ஆர்வத்தையும் பற்றையும் ஏற்படுத்தி இருந்தார். தமிழ் இலக்கியங்களில் ஆழ்ந்த அறிவையும் புகட்டியிருந்தார் ஞானப்பிரகாசர் சிறுவயதிலேயே இலக்கணப்பிழையின்றி விரைவில் கவிதை இயற்றும் ஆற்றல் உள்ளவராக இருந்தார். வயலின் வாசிப்பதிலும் மத்தளம் அடிப்பதிலும் வல்லவராக இருந்தார். சிறந்த பேச்சாளராகவும் இருந்தார்.

இரண்டாவது உலக மகாயுத்தத்தின் போது லண்டனில் இருந்து வெளிவந்த " POETRY LONDON " என்ற ஆங்கிலக் கவிதைச் சஞ்சிகையின் ஆசிரியராக இருந்து பல ஆங்கிலக்கட்டுரைகளை ஊக்குவித்த கவிஞர் தம்பிமுத்து (MEARY JAMES THURAIRAJAH)என்பவர் ஞானப்பிரகாசரின் தாய் வயிற்றில் தம்பிமுத்துவுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒருவரான ஹென்றி தம்பிமுத்துவின் மகன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் சம்பத்திரிசியார் கல்லூரியில் தனது படிப்பை முடித்துக்கொண்ட ஞானப்பிரகாசர் 1893ம் ஆண்டில் இலங்கையில் நடைபெற்ற ரெயில்வே கிளறிக்கல் பரீட்சையில் மிகத் திறமையாகத் தேர்ச்சியடைந்து கடிகமுவைப் புகைவண்டி நிலையத்தில் பணி புரிந்தார். அங்கு அவர் தன் கடமையில் திறமை காட்டியதன் காரணமாக கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். மோஸ் கோட் மூலம் விரைவாகச் செய்தி அனுப்புவதில் வல்லவராக இருந்தார். அங்கு அவர் தொடர்ந்து பணியாற்றியிருந்தால் அக்காலத்தில் இலங்கையர்களுக்கு அரசாங்கப்பதவிகளில் கிடைத்திருக்கக் கூடிய உயர்ந்த பதவிகளில் ஒன்று அவருக்குக் கிட்டியிருக்கும்.

கத்தோலிக்க குரு

ஆனால் அவர் 1895ம் ஆண்டில், சேவையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள், அச்சேவையிலிருந்து விலகி கத்தோலிக்க குருவானவர் ஆகும் பொருட்டு யாழ்ப்பாணக் குருமடத்தில் சேர்ந்து கொண்டார். 1901ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலாம் திகதி அவர் குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். குருவானவராகத் திருநிலைப்படுத்தப்பட்ட பின்பு அவர் தமது சமயக் கொள்கைகளை மக்களுக்கு விளக்குவதற்கும் பரப்புவதற்கும் பல பிரசுரங்களை வெளியிட்டு வரலானார். தர்க்கப்பிரசங்கம் என்ற விவாதங்களை மக்கள் மத்தியில் நடத்திவந்த தோடல்லாமல் அவ்விவாதங்களை வெளியிட்டு மக்களுக்கு வழங்கியும் வந்தார். கத்தோலிக்க சமய சம்பந்தமான சில புத்தகங்களையும் எழுதி வெளியிட்டார். 1896ம் ஆண்டிலிருந்து 1906ம் ஆண்டுவரை அமலோற்பவ இராக்கினித் தூதன் என்னும் மாத சஞ்சிகையின் ஆசிரியராகவும் இருந்துள்ளார்.

சமயத்தொண்டு

யாழ்ப்பாண மேற்றிராசனத்திலிருந்து இதுவரை வேறு எந்த குருவானவரும் செய்திராத அளவுக்கு அவர் பல கோவில்களைக் கட்டுவித்து மீசாம்களை ஏற்படுத்தியிருந்தார். 1946ம் ஆண்டில் அவர் இறப்பதற்கு சற்று முன்பு, அவர் பிறந்த ஊராகிய மானிப்பாயில் அவர் கட்டுவித்திருந்த கோவில் முப்பத்தேழாவது கோவிலாகும் கோவில்களைக் கட்டுவித்ததோடல்லாமல் அங்குள்ள மக்களின் அறிவை வளர்ப்பதற்காக வாசிகசாலைகளையும் அங்கு ஏற்படுத்தி வந்தார். சமயத் தொண்டில் வேகமாக உழைத்து வந்தபொழுதும் அவருடைய தமிழ் ஆர்வமும் பற்றும் அவரைத் தமிழை ஆழமாகப் படிக்கவைத்ததோடல்லாமல் பிற மொழிகள் பலவற்றையும் படிக்கத்தூண்டின. எழுபத்திரண்டு மொழிகளை அவர் அறிந்திருந்தார். அவற்றுள் பெரும்பாலானவற்றை அவர் தாமாகவே கற்றிருந்தார். பன்னிரண்டு மொழிகளில் அவர் மிக்க பாண்டித்தியம் பெற்றிருந்தார்.
மொழிகளில் மாத்திரமின்றி சரித்திரம், தத்துவம், சமயம் முதலியவற்றிலும் அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. யாழ்ப்பாணச் சரித்திரத்தை விஞ்ஞான முறைப்படி முதல்முதலாக எழுதியவர் ஞானப்பிரகாசரே. சைவ சமயத்தைப்பற்றி "சைவ சித்தாந்தம்" என்ற நூலை எழுதியிருக்கிறார். "செகராசசேகரன்" என்ற ஒரு நாவலையும் கூட எழுதியிருக்கிறார்.

தமிழ்மொழி தொன்மையானது, தனித்துவமானது, பல மொழிகளுக்குத் தாயானது, சில மொழிகளுக்குக் கடன்கொடுத்து உதவியிருக்கிறது என்பதை அவர் துணிந்து எடுத்துரைத்தார். பல அறிஞர்களின் உழைப்புடன் 1913ம் ஆண்டில் தொடங்கப்பட்டு அக்காலத்தில் 410,000 ரூபா செலவில் 1936ம் ஆண்டு முடிக்கப்பட்டிருந்த சென்னைத் தமிழகராதியிலும் அதன் அனுபந்தத்திலும் வடமொழியிலிருந்து பிறந்த சொற்கள் என்று காட்டப்பட்டிருந்த சொற்களில் பல தொன்மொழியிலிருந்து பிறந்தன என்றும் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் எடுத்துரைத்தார். வாதாடினார். கட்டுரைகள் எழுதினார்.

எழுபத்திரண்டு மொழிகளில் அறிவு

எழுபத்திரண்டு மொழிகளில் அவருக்கு இருந்த அறிவும் பலதுறைகளில் இருந்த ஞானமும், அவருடைய மதிநுட்பமும் ஆழ்ந்த அகன்ற ஆராய்ச்சித்திறனும் பல ஆண்டுகள் ஆராய்ந்து செய்தபின்பு எடுத்த முடிவுகளை மறுத்துரைக்க அவருக்குத் துணையாயிருந்தன.

தாய் மொழியின் தொன்மையை, மேன்மையை, தனித்துவத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுவதற்காக ஒப்புயர்வற்ற சொற்பிறப்பு ஒப்பியல் என்னும் அகராதியைத் தன்னந்தனியாகத் தானே தொடங்கி பன்னிரண்டு ஆண்டுகளில் தான் திட்டமிட்டிருந்த இருபது பாகங்களில் ஆறு பாகங்களை வெளியிட்டிருந்தார். எஞ்சிய பாகங்களின் சொற்களில் பெரும்பாலானவற்றை ஆராய்ந்து கையெழுத்துப் பிரதிகளில் வைத்திருந்தார். அவற்றை அவர் வெளியிடுவதற்கு முன்பு காலன் அவரின் உயிரைப்பறித்துச் சென்றது தமிழ் மக்களின் ஈடுசெய்யமுடியாத பேரிழப்பாகும்.

சுவாமி ஞானப்பிரகாசரின் வாழ்க்கையை, அவர் தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் செய்த பணியைத் தமிழ் இளைஞர்கள் ஒரு முன்மாதிரியாக ஒர் இலட்சியமாகக் கொண்டு வாழ வேண்டும். அவரைப்போல் பல மொழிகளிலும் பல துறைகளிலும் வல்லவர்களாக வராவிட்டாலும் ஒரு மொழியிலும் ஒரு துறையிலும் ஆகிலும் வல்லவராக வரமுயல வேண்டும். வரவேண்டும். அப்பொழுது தான் தமிழ் வளமாக வாழும், தமிழ் மக்கள் நலமாக வாழ்வார்கள்.

- தாய் -

காலால் இயக்கப்படும் கணினி மவுஸ்


கம்பியூட்டரை இயக்குவதற்கு `மவுஸ்' என கூறப்படும் கருவி அவசியம். அதை கையால்தான் இயக்கவேண்டும். இப்படி கையால் மவுசை அதிக அளவில் இயக்கும்போது, கைவிரல் நரம்புகளில் காயம் ஏற்படுவது உண்டு. இதற்கு ரெபடேடிவ் ஸ்ட்ரெய்ன் இன்ஜுரி (ஆர்.எஸ்.ஐ.) என்று பெயர். இங்கிலாந்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த காயத்தால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதை தவிர்ப்பதற்கு புதிய வழி கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கைகளால் இயக்கப்படுவதற்கு பதிலாக காலால் இயக்கும் `மவுஸ்' கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கால் மவுசை பயன்படுத்துவதன் மூலம் கைவிரல் மற்றும் மணிக்கட்டில் ஏற்படும் ஸ்ட்ரெசை குறைப்பதற்கு உதவும். இதற்கு என்று தனியாக `ஸ்லிப்பர்' உள்ளது. அதை போட்டுக்கொண்டு தான் இந்த மவுசை இயக்கவேண்டும்.

விண்டோஸ் 7 - கணினி திரையை தொட்டு இயக்கலாம்

மைக்கிரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 7 என்னும் இயங்கு தளத்தை தொடுதிரை வசதியுடன் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் படி கணினி திரையை தொட்டு இயக்கலாம்.

கணினியின் ஒரு பகுதியில் உள்ள தகவலை வேறொரு பகுதிக்கு நகர்த்துவதற்கு எமது கை விரலினால் அவற்றை தொட்டு இலகுவாக நகர்த்தலாம்.

இதற்கு விசைபலகையினதோ அல்லது சுட்டெலியினதோ உதவி தேவையேயில்லை

தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் தொலைபேசிகள்

Samsung நிறுவனம் புதியவகைக் கைத்தொலைபேசிகளைத் தயாரித்துள்ளது.

இத் தொலைபேசிகள் சிறப்பு யாதெனில், இவற்றின் பற்றரிகளைத் தண்ணீரில் புதுப்பித்துக் கொள்ள முடியும். இத்தகைய தொலைபேசிகளை 2010ல் சந்தைப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தண்ணீரில் சார்ஜ் செய்யப்படும் இத்தகைய தொலைபேசிகள் தொடர்ச்சியாகப் பத்துமணிநேரம் வரை பாவிக்க முடியுமென , இதன் தயாரிப்பபாளர்களான சம்சுங் நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். இத்தகைய தொலைபேசிகள் பாவனைக்கு வந்துவிட்டால், தவறித் தண்ணீரில் விழுத்த தொலைபேசியை பதறியடித்துத் தூக்க வேண்டியிராது.

கொழுப்பா? மியூசிக் கேளுங்க...கேட்டுக்கிட்டே இருங்க.


உடலில் உள்ள கொழுப்பைக் கரைக்கவும், இதய பாதுகாப்பிற்கும் இசை கேட்பது நல்ல பலனைத் தரும் என்று தெரிய வந்துள்ளது.இதய நோயாளிகள் தங்களுக்குப் பிடித்தமான இசையை தினமும் சுமார் அரை மணி நேரம் கேட்டால், அவர்களின் மனம் ரிலாக்ஸ் ஆவதுடன் உடல்ரீதியிலான ஆரோக்கியமும் ஏற்படுவதாக லாஸ் ஏஞ்சல்ஸில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இசையை ரசிப்பதால் இரத்த நாளங்கள் விரிவடைவதுடன் சுத்தப்படுத்தப்படுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்பதால், இதய பாதிப்பின்றி இருக்கவும், கொழுப்பின் அளவு குறையவும் வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.

இசை கேட்கும் சிகிச்சை முறையை அமெரிக்காவில் சில நோயாளிகளுக்கு அளித்து பரிசோதித்ததாகவும், இதனை பிரிட்டன் நிபுணர்கள் வரவேற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இசையைக் கேட்டு ரசிப்பதால் மூளை நரம்புகளில் நைட்ரிக் ஆக்ஸைடு வெளிப்படுவதாகவும், இது இரத்தம் உறைவதைத் தடுப்பதுடன் கொழுப்பு சேர்வதையும் கரைப்பதாகத் தெரிய வந்துள்ளது.

மனித உடலில் இசையால் ஏற்படும் விளைவுகள் தொடர்பான ஆராய்ச்சியின் ஒருபகுதியாக இது அமைந்துள்ளது. 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிம்பொனி இசை மனநலத்தை மேம்படுத்தக் கூடியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமெரிக்க விருது


ஆலிவுட்டில் தயாரான ஸ்லம்டாக் மில்லியனர் என்ற படத்துக்கு இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்து இருந்தார். இவருக்கு அமெரிக்காவின் கிரிட்டிக்ஸ் சாய்ஸ் விருது கிடைத்து உள்ளது. இந்த படம் சிறந்த படமாகவும், இதை இயக்கிய டானி பாய்லே சிறந்த டைரக்டராகவும், சைமன் பீயுபாய் சிறந்த திரைக்கதாசிரியராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளனர்.

இதில் நடித்த நடிகர் தேவ் பட்டேல் சிறந்த நடிகராகவும் தேர்ந்து எடுக்கப்பட்டார். இந்த படம், மும்பையில் எடுக்கப்பட்டது. டி.வி. நிகழ்ச்சியில் பரிசு பெற்று கோடீசுவரர் ஆன மும்பை குடிசை வாழ் இளைஞரை பற்றிய படம் இது.

விருது வழங்கும் விழா கலிபோர்னியாவில் நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டு விருது பெற்றார். டி.வி. சேனல்கள், ரேடியோ, இணையதளம் ஆகியவற்றில் சினிமா விமர்சகர்களாக பணிபுரிபவர்களின் சங்கம் தான் இந்த விருதுக்களை வழங்கி வருகிறது.