செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்கான நீர்வளம் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிப்பு

செவ்வாய்க் கிரகத்தில் உயிர் வாழ்வதற்குரிய நீர்வளம் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க் கிரகத்தை ஆய்வு செய்யும் நாஸாவின் குழுவொன்று இங்கு அமிலங்களை உப்பாக மாற்றும் கார்பனேட் செறிந்திருப்பதைக் கண்டுபிடித்துள்ளதாக சான் பிரான்ஸிக்கோவில் நடைபெற்ற அமெரிக்க பூகோள, காலநிலை ஒன்றியத்தின் கூட்டத்தில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது மிகவும் அதிசயமானதெனத் தெரிவித்துள்ள ரோட் ஐலண்ட் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானி ஜோன் நீரும் கார்பன் ட்யொக்சைட்டும் கல்சியம், இரும்பு அல்லது மக்னீசியத்துடன் கலக்கும் போது கார்பனேட் உருவாவதாகவும் இது அமிலத்தை மிக விரைவில் கரையச் செய்யுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் செவ்வாய்க் கிரகத்தில் இருந்த நீர் அனைத்தும் ஒரு காலத்தில் அமிலமாக இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

பிறிதொரு விஞ்ஞானி தெரிவிக்கையில் உயிரினங்கள் வாழ்வதற்கு சாதகமான சூழலொன்று செவ்வாயில் காணப்படுவதாகவும் குறிப்பிட்டதொரு வகை உயிரினம் இங்கு வாழ்ந்தமைக்கான பதிவுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், 3.6 பில்லியன் வருடங்கள் பழைமை வாய்ந்த கார்பனேட் பாறையொன்று இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் செவ்வாயை ஆராயும் விண்கலத்தினால் எடுக்கப்பட்ட படங்களில் ஒரு கால்பந்தாட்ட மைதான அளவுக்கு கார்பனேட் படிவுகள் இருப்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்டவெளியின் மத்தியில் இராட்சத கருந்துவாரம்

எமது அண்டவெளியின் மையத்தில் இராட்சத கருந்துவாரம் ஒன்று இருப்பதைக் கண்டறிந்துள்ளதாக ஜேர்மனிய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். பால்வெளியின் மையத்தில் 28 நட்சத்திரங்களால் சூழப்பட்ட பகுதியில் மேற்படி கருந்துவாரத்தை அவதானித்ததாக இந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிலியிலுள்ள ஐரோப்பிய தெற்கு விண்வெளி அவதான நிலையத்திலுள்ள விண்வெளி தொலைக்காட்சியைப் பயன்படுத்தி கண்டறியப்பட்ட இந்தக் கருந்துவாரம் தொடர்பான தகவல்கள், "த அஸ்ரோபிஸிகல்" விண்வெளி விஞ்ஞான வெளியீட்டில் பிரசுரமாகியுள்ளன.

கருந்துவாரமானது எமது சூரியனைவிட 4 மில்லியன் மடங்கு பருமனானது என மதிப்பிடப்பட்டுள்ளது. அதீத ஈர்ப்புத்தன்மை சக்தியைக் கொண்ட வஸ்துக்களை உள்ளடக்கிய இந்த கருந்துவாரமானது தன்னைச் சுற்றியுள்ளவற்றை உள்ளீர்க்கும் வலிமை கொண்டுள்ளது என்பதால் அபாயகரம் மிக்கதாக விஞ்ஞானிகளால் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

கருந்துவாரமானது தன்னை அண்மித்துள்ளவற்றை உள்ளீர்ப்பதன் மூலம் போதிய அடர்த்தியைப் பெறுகையில், பெரும் சக்தி வெளிப்பாட்டு தாக்கங்கள் இடம்பெற்று நட்சத்திரமாக உருமாற்றம் அடைவதாக மேற்படி ஆய்வை மேற்கொண்ட ஜேர்மனிய மக்ஸ் பிளான்க் விண்வெளி ஆய்வுகூட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த கருந்துவாரம் பூமியிலிருந்து 27,000 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 16 வருட ஆய்வையடுத்தே இந்த கருந்துவாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளின் வளிமண்டலத்தில் நீராவி

நாசா விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்பு பூமியிலிருந்து 63 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கோளொன்றின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பதற்கான சான்று தமக்குக் கிடைத்துள்ளதாக நாசா விண்வெளி முகவர் நிலைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த ஆய்வின் முடிவுகள் "நேச்சர்" விஞ்ஞான சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளன. "சூடான வியாழன்" என்றழைக்கப்படும் மேற்படி கோளின் மேற்பரப்பின் வெப்பநிலை 900 பாகை செல்சியஸாகும். மேலும் நாசா விண்வெளி முகவர் நிலைய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்ட பிறிதொரு ஆய்வின் பிரகாரம், இந்தக் கோளின் மேற்பரப்பில் காபனீரொட்சைட் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

"சூடான வியாழன்" என செல்லமாக அழைக்கப்படும் "எச்.டி 189733 பி' என்ற இக்கிரகமானது எமது சூரியமண்டலத்திலுள்ள வியாழக் கிரகத்தின் வளிமண்டலத்தை ஒத்த தன்மையைக் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

"சூடான வியாழன்" கிரகத்தின் வெப்பமான மேற்பரப்பிலிருந்து வெளிப்பட்ட வெப்பக் கதிர்ப்பு காரணமாக, அக்கிரகத்தின் வளிமண்டலத்தில் கனமான காற்றோட்டம் நிலவுவதாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த கோளானது அதி நவீன "ஹபின்" விண்வெளி தொலைகாட்டியைப் பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்தக் கண்டுபிடிப்பானது மனித வாழ்க்கைக்கு பொருத்தமான கோள்கள் அண்டவெளியில் இருக்கக் கூடும் என்ற நம்பிக்கையை உறுதிப்படுத்தியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கோல்டன் குளோப் விருதுக்கு ஏ.ஆர்.ரகுமான் பெயர் சிபாரிசு



உலக அளவில் சிறந்த சினிமா கலைஞர்களுக்கான கோல்டன் குளோப் விருது ஆலிவுட்டில் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு 66-வது கோல்டன் குளோப் விருது பெற தகுதியானவர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் இங்கிலாந்து டைரக்டர் டேனி பாயல் இயக்கிய `சிலம்டாக் மில்லியனர்' என்ற படம் 4 விருதுகளுக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் இசையமைத்தற்காக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் பெயரும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

சிலம்டாக் மில்லியனர், சிறந்த படம், சிறந்த டைரக்டர் (டேனி பாயல்), சிறந்த திரைக்கதை (சிமோன் பிïபோ) ஆகியவற்றுக்கும் கோல்டன் குளோப் விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக வெற்றி பெற்றவர்கள் விவரம் அடுத்த மாதம் (ஜனவரி) 11-ந் தேதி அறிவிக்கப்படுகிறது.

மன இருள் அகற்றும் திருக்கார்த்திகைத் தீபத்திருநாள்

முருகப் பெருமானுக்குரிய சிறப்பு மிக்க தினங்கள் பல இந்துக்களால் கைக்கொள்ளப்படுகின்றன. அவற்றில் மூன்று வகை விரதநாட்களும் அடங்குகின்றன. அவை வார விரதநாட்கள், மாத விரத நாட்கள், ஆண்டு விரத நாட்கள் என அமைகின்றன. சுக்கிர வார விரதம் வார விரதமாகவும், கார்த்திகை விரதம் மாத விரதமாகவும், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை என்பன ஆண்டு விரதங்களாகவும் கைக்கொள்ளப்படுகின்றன.

மாதந்தோறும் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை விரதம் கைக்கொள்ளப்படுகின்றது. திருக்கார்த்திகை விரதமானது ஆண்டு தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரம் அமையும் நாளில் மேற்கொள்ளப்படுகின்ற விரதமாகும். ஏனைய மாதங்களில் வரும் கார்த்திகை நட்சத்திரத்தினங்களைவிடக் கூடிய மேன்மை கொண்டதாகக் கார்த்திகை மாதத்துக் கார்த்திகை நட்சத்திரம் அமையும் நாள் கொள்ளப்படுவதால் திருக்கார்த்திகை எனக் குறிப்பிடப்படுகின்றது. திரு என்றால் உயர்ந்த, உத்தம என்று அமைகின்றது. அதனால், கார்த்திகை மாத விரதம் திருக்கார்த்திகை எனப் பெயர் பெறுகின்றது.

திருக்கார்த்திகைத் திருநாளைத் தீபத்திருநாள் என்றும் விளக்கீடு என்றும் கூறுகின்றோம். உலக உய்வின் பொருட்டு முருகப் பெருமான் தோன்றிய தினமாக இந்நாள் கொண்டாடப்படுகின்றது. சிவபிரானின் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்கினிப் பிழம்புகள் சரவணப் பொய்கையில் சென்று விழுந்தபோது அவை குளிர்ச்சி பெற்று ஆறு குழந்தைகளாகத் தோற்றம் பெற்றதாகவும், அந்த ஆறு குழந்தைகளையும் உமாதேவியார் கட்டியணைத்தபோது ஆறு திருமுகங்களும் பன்னிருகைகளும் கொண்ட முருகப் பெருமான் தோற்றம் பெற்றதாகவும் புராணங்கள் பகர்கின்றன.

"அருவும், உருவுமாகி, அனாதியாய்ப் பலவாறொன்றாய் பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனியாக கருணை கூர்முகங்களாறும், கரங்கள் பன்னிரண்டும் கொண்டு ஒரு திரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகமுய்ய' என்ற பாடல் முருகப் பெருமானின் தோற்றத்தை வெளிப்படுத்துகின்றது.

உலக நன்மைக்காக முருகப் பெருமான் தோன்றிய திருநாளாகக் கொள்ளப் படும் இந்நன்னாளை ஆலயங்களிலும், இல்லங்களிலும் தீப ஒளியேற்றிக் கொண்டாடுவது நெடுங்காலமாக இந்துக்கள் கைக்கொள்ளும் வழிபாடாகவும் அமைகின்றது. அத்துடன், ஆசாரத்துடன் விரதமும் இருந்து வழிபாடு செய்யப்படுகின்றது.

சர்வாலய தீபம், குமராலயதீபம் என்று இரண்டாக இத்தீபத்திருநாள் வகுக்கப்பட்டுள்ளது. சர்வாலய தீபம் என்னும் போது இந்துக்கள் தமது இல்லங்கள் தோறும் தீபமேற்றுவதாக அமைகின்றது.

சர்வாலய தீபதினத்தன்று இல்லங்கள் தோறும் தீபமேற்றி, ஒளிபரப்பி வழிபாடு செய்வதானது ஒவ்வொரு இல்லமும் இறைவன் உறையும் ஆலயமாக விளங்க வேண்டும். தீமை தரும் நோக்கங்களோ, சிந்தனைகளோ, செயற்பாடுகளோ அற்ற புனிதம் ததும்பும் இல்லங்களாக இறைவன் குடியிருக்கும் கோயிலைப் போன்று சிறப்புடன் விளங்கவேண்டும் என்ற உயரிய தத்துவத்தை உணர்த்துவதாகச் சர்வாலய தீபம் விளங்குகின்றது.

இறைவன் உறையும் ஆலயங்கள் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் குடியிருக்கும் வீடுகளும் புனிதமாக இருக்க வேண்டும். அப்போது தான் பண்பின்பாற்பட்ட உயர்ந்த வாழ்வை அமைத்துக் கொள்ள முடியும் என்பதுடன் தீயபகை, கொடுமைகளிலிருந்து தற்காத்துக் கொள்ளவும் குடும்ப, சமூக உறவுகளை மேம்படுத்திக் கொள்ளவும் வழியேற்படும்.

அத்துடன் பக்தியுடன் கூடிய பண்பு மிகும் நெறியில் வாழ்வின் பாதையை ஒழுங்கமைத்துக் கொள்ளும் போது அஞ்சேல் என்று அபயமளிக்கும் முருகப் பெருமானின் கருணைமிகுகாவலும் கிட்டிவிடும் என்ற நம்பிக்கை ஏற்படுவதால் தன்னம்பிக்கையும் தானேவந்து சேர்ந்து வாழ்வை எழுச்சியுறச் செய்யும்.

முருகனைச் சரணடைந்தால் பெறும் பாக்கியம் எதுவென்று பாரதியார் இவ்வாறு கூறியுள்ளார். "வேலைப்பணிந்தால் விடுதலையாம்! வேல் முருகன் காலைப்பணிந்தால் கவலைபோம்' என்கிறார் அவர். மனக்கவலை மாற்றும் மாமருந்து திருமுருகன் திருவடியே என்பதைப் பாரதியார் எடுத்துக்கூறியுள்ளார்.

இல்லங்களில் தீப ஒளியேற்றுவது போன்று ஆலயங்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்யப்படுகின்றது. ஆலயங்களில் தீப மேற்றி விசேடவழிபாடுகள் செய்யும் நாள் குமராலய தீபத்திருநாளாகின்றது. முருகன் ஆலயங்களில் மட்டுமல்ல, சகல இந்து ஆலயங்களிலும் இத்தீபத்திருநாள் கொண்டாடப்பட்டுவருகின்றது. மன இருள் அகற்ற இறையருள் எங்கும் பிரகாசிக்க வேண்டி நடைபெறும் வழிபாடாக குமாராலயதீபம் ஏற்றப்படுகின்றது. அதேபோன்று கார்த்திகை நட்சத்திரத்தினத்திற்கு அடுத்து வரும் ரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாள் திருமாலுக்குரிய சிறப்பு தினமாக அமைகின்றது. அன்றைய தினத்தை விஷ்ணு ஆலயதீபத்திருநாளாகக் கொண்டாடுவது இந்துக்களின் மரபு. காக்கும் தெய்வமான திருமாலின் கருணை மிக்க காப்பு வேண்டி அன்றைய தினம் வழிபாடு இடம் பெறுகின்றது.

இந்துக்கள் இயற்கைக்குத் தெய்வநிலைதந்து போற்றுகின்றனர். அதற்கான திருத்தலங்களாகக் கொள்ளப்படும் ஐந்து புண்ணிய தலங்கள் அதாவது பஞ்சபூதத்திருத்தலங்களாக தமிழ் நாட்டிலேயுள்ள ஐந்து பெருமையும், மேன்மையும் பெற்ற தலங்கள் உள்ளன.

முறையே நிலம் அதாவது பூமிக்குக் காஞ்சிபுரமும் நீருக்கு திருவானைக்காவும், நெருப்புக்கு திருவண்ணாமலையும், காற்றுக்குத் திருக்காளத்தியும், ஆகாயத்திற்குச் சிதம்பரமுமாக அமைந்து அருளுகின்றன.

தீப ஒளியேற்றி வழிபடும் திருக்கார்த்திகை தினத்திலே அக்கினி பகவானுக்குரியதாகக் கொள்ளப்படும் திருவண்ணாமலைத் திருத்தலத்திலே தீபமேற்றி சிறப்பான வழிபாட்டுடன் கொண்டாடப் படுகின்றது. இந்துக்களின் இயற்கையின், பஞ்சபூதவழிபாட்டின் சான்றாக இது அமைகின்றது.

கொலை வெறியும், கொடுபகையும் வாட்டிவதைக்கும் இக்கால கட்டத்திலேயே சூரனை அடக்கி உலகில் நிம்மதி நிலவச் செய்யத் தோன்றிய முருகப் பெருமானின் அருள் நாடி விரதமிருந்து அபயம் கேட்போம். "யாமிருக்கப் பயமேன்". 'அஞ்சேல்' என்று அபயம் தந்து ஆறுதல் தரும் முருகப் பெருமானை அச்சமில்லா பெருவாழ்வை அடைய இருண்ட, கொடிய குணங்கள் யாவும் நீங்கி அருளொளி எங்கும் பரவிப் பிரகாசிக்க அருளுமாறு தீபமேற்றி வழிபடுவோம்.

- நன்றி தினக்குரல் -

சந்திரயான் விண்கலனில் வெப்ப உயர்வு


நிலவை ஆராய இந்தியா அனுப்பிய முதல் ஆளில்லா விண்கலமான சந்திரயான் 1 கலத்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால் பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. கலனுக்குள் அதிகரிக்கும் வெப்பநிலையைக் குறைக்க விண்வெளி விஞ்ஞானிகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நிலவை ஆராய கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி இந்தியா சந்திரயான் 1 விண்கலனை ஏவியது. இந்தக் கலன் திட்டமிட்டபடி நிலவு வட்டப் பாதையை இம்மாத துவக்கத்தில் அடைந்தது. பிறகு நிலவின் தரைப் பகுதி மீது சில உபகரணங்கள் அடங்கிய துணைக் கலனையும் வெற்றிகரமாக செலுத்தியது. மேலும் நிலவின் மேல் பரப்பையும், பூமியையும் படம் பிடித்து அனுப்பியுள்ளது.

ஆனால் திடிரென, சந்திரயான் கலனின் உள்ளே வெப்பநிலை வேகமாக உயர்ந்தது கண்டறியப்பட்டது. கலனுக்குள் வெப்பநிலை 50 டிகிரியைத் தொட்டதன் காரணமாக, செயற்கைக் கோளில் உள்ள கணினிகள் உள்ளிட்ட முக்கிய சாதனங்கள் தற்காலிகமாக செயல் நிறுத்தம் செய்யப்பட்டதாக திட்ட இயக்குனர் அண்ணாதுரை தமிழோசையிடம் தெரிவித்தார். இதன் காரணமாக கலனில் நிலவும் வெப்ப நிலை தற்போது 40 டிகிரி அளவுக்கு குறைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

சந்திரனில் தற்போது கோடைக் காலம் என்பதால், சந்திரயான் விண்கலம், சந்திரன் மற்றும் சூரியன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பதால் கலனின் வெளிப்புறத்தில் கடும் வெப்பம் ஏற்படுவதாகவும் அண்ணாதுரை தெரிவித்தார்.

கலனுக்குள்ளே வெப்பத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, சந்திரயான் விண்கலன் சந்திரனில் இருந்து 20 டிகிரி அளவுக்கு விலகி சாய்ந்து செல்லுமாறு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வெப்ப நிலை குறையாத பட்சத்தில், சந்திரயான் கலத்தின் வட்டப் பாதையை உயர்த்துவது குறித்தும் முடிவு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்

சந்திராயன் விண்கலத்தின் அடுத்த சாதனை: நிலாவில் தேசிய கொடி தடம் பதித்தது

சந்திராயன் விண்கலத்தில் அனுப்பப்பட்ட ஆய்வுக்கலம், தேசிய கொடியுடன் நிலாவில் இறங்கியது.

ஆய்வுக்கலம்

நிலாவை பற்றி ஆராய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திராயன் விண்கலம், இறுதியாக நேற்றுமுன்தினம் அதன் இறுதி சுற்று வட்டப்பாதையை அடைந்தது. அதாவது, தற்போது நிலாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் சந்திராயன் சுற்றிக் கொண்டிருக்கிறது.

நிலாவை பற்றி ஆய்வு செய்வதற்காக, சந்திராயனில் 11 விஞ்ஞான ஆய்வு கருவிகள் பொருத்தி அனுப்பப்பட்டுள்ளன. அவற்றில் `மூன் இம்பாக்ட் புரோப்' (எம்.ஐ.பி.) எனப்படும் ஆய்வுக்கலமும் அடங்கும். 35 கிலோ எடை கொண்ட இது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டது.

நிலாவில் குறிப்பிட்ட இடத்தில் ஆய்வுக்கலத்தை இறக்க என்ன தொழில்நுட்பம் தேவைப்படும் என்பதை கண்டறிய இந்த ஆய்வுக்கலம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், நிலாவை அருகில் இருந்து படம் பிடித்து ஆய்வு செய்வதற்காகவும் இது பயன்படுத்தப்பட உள்ளது. இதில் வீடியோ கேமரா, சி-பாண்ட் ராடார், ஸ்பெக்ட்ரோ மீட்டர் ஆகிய கருவிகள் உள்ளன.

தேசிய கொடி

இந்த ஆய்வுக்கலத்தின் நான்கு பக்கங்களிலும் இந்திய தேசிய கொடி வரையப்பட்டுள்ளது. ஆராய்ச்சிக்காக இந்த ஆய்வுக்கலம், நிலாவில் கால் பதிக்கும்போது, அதனுடன் தேசிய கொடியும் நிலாவில் கால் பதிக்க வேண்டும் என்பதே இதற்கான நோக்கம்.

அதன்படி, நேற்று இரவு 8 மணிக்கு மேல், சந்திராயன் விண்கலத்தில் இருந்து எம்.ஐ.பி. ஆய்வுக்கலம் விடுவிக்கப்பட்டது. அது 25 நிமிட நேரம் பயணம் செய்து இரவு 8.31 மணிக்கு நிலாவை அடைந்தது. நிலாவின் நிலப்பரப்பில் தடம் பதித்தது. அதன்மூலம் முதன்முறையாக இந்திய தேசிய கொடியும் நிலாவில் தடம் பதித்துள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய ïனியன் ஆகிய நாடுகள், ஏற்கனவே தங்களது தேசிய கொடியை நிலாவில் இடம்பெறச் செய்துள்ளன. அதைத்தொடர்ந்து நிலாவில் தேசிய கொடியை தடம் பதித்த பெருமையை இந்தியா பெற்றுள்ளது.

சந்திராயனில் அனுப்பி வைக்கப்பட்டுள்ள மற்ற 10 விஞ்ஞான ஆய்வுக்கருவிகளும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சந்திராயன் விண்கலம், 2 ஆண்டுகள் தங்கி இருந்து ஆய்வு செய்யும்.

விஞ்ஞானிகள் மகிழ்ச்சி

நிலாவில் தேசிய கொடி தடம் பதித்த நிகழ்ச்சியை பெங்களூரில் உள்ள தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன தலைவர் மாதவன் நாயர் உள்ளிட்ட விஞ்ஞானிகளும், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமும் பார்த்துக் கொண்டிருந்தனர். தேசிய கொடி கால் பதித்தவுடன் அவர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். இச்சம்பவம் நிலாவில் இந்தியா நுழைந்து விட்டதை குறிப்பதாக ஒரு விஞ்ஞானி கூறினார்.

திட்டமிட்டபடி, சந்திராயன், ஆய்வுக்கலத்தை விடுவித்ததாகவும், நிலாவின் தென்துருவத்தில் ஆய்வுக்கலம் இறங்கி இருப்பதாகவும் மாதவன் நாயர் நிருபர்களிடம் தெரிவித்தார். தாங்கள் இந்தியாவுக்கு நிலாவையே கொடுத்து இருப்பதாகவும் அவர் கூறினார். அப்போது அப்துல் கலாம் உடனிருந்தார்.

நிலாவை நோக்கி சென்று கொண்டிருந்தபோதே, எம்.ஐ.பி. ஆய்வுக்கலம் நிலாவை படம் பிடித்து தரை கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைத்தது. இப்படங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படுகின்றன.

சோனியா வாழ்த்து

இச்சாதனைக்காக விஞ்ஞானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் மனிஷ் திவாரி கூறியதாவது:-

இந்தியாவின் விண்வெளி திட்டத்தை 61 ஆண்டுகளுக்கு முன்பு நேரு தொடங்கி வைத்தார். தொழில்நுட்பத்தில் முன்னேறிய இந்தியாவை காண வேண்டும் என்று அவர் கனவு கண்டார். நிலாவில் தேசிய கொடியை தடம் பதித்ததன் மூலம் நேருவின் பிறந்த நாளில் அவரது கனவு நனவாகி விட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

சாதனைப் பயணம் சந்திக்கவுள்ள சவால்கள்.....

புதியதோர் அரசியலுக்கான பக்கமொன்றைப் புரட்டுவோம் என்ற அறைகூவலுடன் ஆரம்பமான இலட்சியப் பயணம் இன்று அமெரிக்காவின் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தையே ஆரம்பித்துள்ளது.

"மாற்றம்?" என்ற தொனிப் பொருளுடன் ஆரம்பிக்கப்பட்ட பிரசாரங்கள் இன, மத,நிற பேதமின்றி அனைவரையும் ஒரே திசையில் சிந்திக்க வைக்கும் அளவுக்கு அமெரிக்க மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 44ஆவது ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமா நாட்டின் முதலாவது கறுப்பின ஜனாதிபதியென்ற வரலாற்றுப் பெருமையை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு 45 வருடங்களின் பின்னர் நனவாகியுள்ளது. அத்துடன் 1950களில் நிலவிய இன ஒதுக்கல் சர்ச்சைக்குப் பின்னர் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கின்ற முழுமையான மாற்றத்தை பிரதிபலித்துள்ளது.

நாட்டின் சனத்தொகையில் 13 வீதத்தை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இனத்தவரை அமெரிக்கர்கள் தமது தலைவராகத் தெரிவு செய்திருப்பதன் மூலம் பல ஆயிரம் ஆண்டுகள் வரலாற்றினைக் கொண்டவை என மார்தட்டும் நாடுகள் செய்ய முடியாததை வெறும் 200 ஆண்டுகளுக்கு முன்னர் மலர்ந்த ஐக்கிய அமெரிக்க குடியரசு சாதித்திருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்கா அழைத்துவரப்பட்டவர்களே, கறுப்பினத்தவர்கள்.

கூட்டம் கூட்டமாக விற்பனை செய்யப்பட்டு கூனிக் குறுகிக் கிடந்த இந்த இனத்திற்கு புதியதொரு உயிரோட்டத்தை ஏற்படுத்தியவர் அமெரிக்காவின் 16ஆவது ஜனாதிபதி ஏபிரஹாம் லிங்கன். இவர் ஜனாதிபதியாக இருந்தபோதே அடிமை வியாபாரத்திற்கு தடைவிதித்தார். எனினும், இன ஒதுக்கலுக்கெதிரான எபிரஹாம் லிங்கனின் போராட்டங்கள் கறுப்பினத்தவர்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தவில்லை.

இதன் பின்னர் கறுப்பின உரிமைகளுக்காக போராடிய மார்ட்டின் லூதர் கிங்கின் உயிர் இனவெறியர்களாலேயே பறிக்கப்பட்டது. இந்நிலையில் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இன ஒருதுக்கலுக்கு எதிராக போராடிய ஒரு இனத்தைச் சேர்ந்தவர் இன்று ஏகோபித்த ஆதரவுடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

?பராக்? என்பதற்கு ஆபிரிக்க மொழியில் ?ஆசிர்வதிக்கப்பட்டவர்? என்ற அர்த்தமாம். இந்த மொழியின் அர்த்தத்திற்கு வரலாற்று சாதனை மூலம் வலு சேர்த்திருக்கிறார் ஒபாமா. எனினும், ஒபாமா கடந்துவந்த பாதை மலர் தூவப்பட்டதல்ல.

காதலால் ஒன்றிணைந்த ஆபிரிக்க கறுப்பினத்தவரான பராக் ஹுசைன் ஒபாமாவுக்கும் அமெரிக்க வெள்ளையினப் பெண்மணியான ஆன் டன்ஹம்முக்கும் மகனாகப் பிறந்த ஒபாமாவுக்கு மிகக் குறைந்த காலமே பெற்றோரின் அரவணைப்புக் கிடைத்தது. ஒபாமாவுக்கு இரண்டு வயதாக இருக்கும்போதே அவரது பெற்றோர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இதன் பின்னர் சொந்த நாடான கென்யாவில் வாழ்ந்து வந்த தந்தையை 1982இல் அவர் வாகன விபத்தொன்றில் கொல்லப்படுவதற்கு முன்னர் தனது 10ஆவது வயதில் ஒரு தடவை மட்டுமே ஒபாமா சந்தித்துள்ளார்.

இதற்கிடையில் ஒபாமாவின் ஆறாவது வயதில் தாயார் ஆன் டன்ஹம் இந்தோனேசியர் ஒருவரை மறுமணம் செய்தமையால் ஜகார்த்தாவுக்கு குடிபெயர்ந்த ஒபாமா 10 வயது வரை அங்கு கல்வி கற்றார்.

எனினும், 10ஆவது வயதில் மீண்டும் ஹவாயிலுள்ள ஹொசொலுலுள்ள தாய்வழிப் பாட்டியுடன் வாழும் நிலைக்கே ஆளான ஒபாமா பாட்டியின் உதவியுடனேயே உயர் கல்வியைத் தொடர்ந்தார்.

தனது இளமைக் காலம் பற்றி அவர் எழுதிய முதல் புத்தகமான ?ட்ரீம்ஸ் ஃப்றம் மை ஃபாதர்? என்ற புத்தகத்தில் அவர் குறிப்பிடுகையில், தனது இளமைக்கால வாழ்க்கை மிகவும் குழப்பகரமானதாக இருந்ததாகவும் இரு இன பாரம்பரிய உணர்வை உருவாக்க தான் கடுமையாக போராடியதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், கறுப்பு மற்றும் வெள்ளையின கலாசாரங்கள் இயல்பாகவே ஒபாமாவின் இரத்தத்தில் கலந்திருந்தமையால் இரண்டு சமூகங்களினதும் கோணங்களை புரிந்து கொள்ள முடிந்ததுடன் பின்னர் அரசியலில் விரிவான இலக்கொன்றை நிர்ணயிக்க உதவியதாக ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர இளைஞரான ஒபாமா உயர்கல்வி கற்கும் காலத்தில் மரிஜுவானா, கொக்கெயன் மற்றும் மதுபானம் என்பவற்றிற்கு சிலகாலம் அடிமையாகியிருந்தமையை இவ்வருட ஆரம்பத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டங்களில் ஒபாமா ஒப்புக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயர்கல்வியைத் தொடர்ந்து அரசியல் விஞ்ஞானம், சர்வதேச உறவுகள் மற்றும் சட்டத்துறை என்பவற்றில் முக்கிய பட்டங்களைப் பெற்ற ஒபாமா பின்னர் சமூக சேவையின் பால் தனது கவனத்தை திசை திருப்பினார்.

சட்ட மன்றங்களின் ஆலோசகர், பணிப்பாளர் மற்றும் சட்ட விரிவுரையாளர் என பல பதவிகளை வகித்த ஒபாமா 1996இல் இலினொய்ஸ் மாநில செனட்டராக தெரிவானார். இதன் பின்னர் பல அதிரடி பொருளாதார நடவடிக்கைகளை எடுத்து மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்கியதுடன் தமது வரிப்பணத்தின் ஒவ்வொரு டொலரும் எந்தத் திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் வீட்டிலிருந்தவாறே இணையத்தளங்களின் மூலம் அறிந்துகொள்ளும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அரசியலின் பக்கம் தீவிர கவனத்தைச் செலுத்திய ஒபாமா 2007 பெப்ரவரியில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசாரத் திட்டம் குறித்து அறிவித்ததுடன் நீண்டகால மற்றும் கடுமையான போராட்டங்களுக்கு மத்தியில் இன்று வெற்றிக் கம்பத்தில் ஏறியுள்ளார்.

அடிமைத்தனத்திற்கு எதிரான போராட்டங்களை ஆரம்பிப்பதற்கு முன்னர் 1858இல் ஏபிரஹாம் லிங்கன் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்திய இலினொயிஸ் மாநிலத் தலைநகரிலுள்ள சட்டப் பேரவைக் கட்டடத்திற்கு வெளியே இருந்துதான் புதியதோர் அரசியலுக்கான பக்கமொன்றைப் புரட்டுவோம் என்ற அறைகூவலுடன் ஒபாமா வேட்பாளர் நியமனத்திற்கான பிரசாரத்தை ஆரம்பித்தார்.

இதன்போது கறுப்பினத்தவர் ஒருவர் அமெரிக்காவின் முக்கிய கட்சியொன்றின் வேட்பாளராக முடியுமா என்ற கேள்வி உலகெங்கும் எதிரொலித்தது.

ஏனெனில், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தைப் பெறுவதற்கு முன்னரும் சில ஆபிரிக்க அமெரிக்க அரசியல்வாதிகள் முயற்சித்த போதும் இது அவர்களுக்கு வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மிகப் பிரபலமான முன்னாள் முதல் பெண்மணியை தோற்கடித்து ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் நியமனத்தை ஒபாமா பெற்றபோது ஒபாமாவின் பக்கம் முழுக் கவனத்தையும் திருப்பிய உலகம் அமெரிக்க அரசியலில் ஏற்பட்டிருக்கும் இந்த முன்னேற்றம் முதல் கறுப்பின ஜனாதிபதி என்ற பெருமையை ஒபாமா பெறும் அளவிற்கு விரிவடையுமா என்பதை ஆர்வத்துடன் அவதானித்தது. இந்நிலையில் அமெரிக்காவில் எதுவும் சாத்தியம் என்பதை உலகிற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார் ஒபாமா.

அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் (ஜுனியர்) 45 வருடங்களுக்கு முன்னர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த உரையை நிகழ்த்திய ஆகஸ்ட் 28இல் ஜனநாயக வேட்பாளருக்கான நியமனத்தைப் பெற்றுக்கொண்டு உரையாற்றிய ஒபாமா ?எனக்கு ஒரு கனவு இருக்கிறது? என மார்ட்டின் லூதர் கிங் அன்று கண்ட கனவை நினைவுகூர்ந்தார். கறுப்பின சிறுவர்களும் வெள்ளையின சிறுவர்களும் சகோதரர்களாக என்றாவது ஒருநாள் கைகோர்த்து நிற்க வேண்டுமென்பதே மார்ட்டின் லூதர் கிங் 45 வருடங்களுக்கு முன்னர் கண்ட கனவாகும்.

கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஒபாமாவின் பிள்ளைகளும் துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோபைடனின் பிள்ளைகளும் ஒன்றாக மேடையேறியதன் மூலம் மார்ட்டின் லூதர் கிங்கின் கனவு நனவாகியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் நியமனத்திற்கான ஆரம்ப பிரசாரங்களிலிருந்தே கடும் போட்டியை எதிர்கொண்ட ஒபாமா ஜனாதிபதித் தேர்தலுக்கான இறுதிநாள் வரை எவ்வித தொய்வுமின்றி பிரசாரத்தை கடுமையாக முன்னெடுத்தார்.

ஒபாமாவின் கவர்ச்சிகரமான பேச்சு, விமர்சனங்களை எதிர்கொள்ளும் நிதானம் விவாதத்திற்கான விடயங்களை எவ்வித தடுமாற்றமுமின்றி தெளிவாக விளக்கும் திறன் மற்றும் இளமைத் துடிப்பு அதிர்ஷ்டம் என்பவற்றுக்கு முன்னால் அவருக்கெதிராக முன்வைக்கப்பட்ட அவர் ஒரு முஸ்லிம், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்புடையவர், போதிய அனுபவமற்றவர் போன்ற குற்றச்சாட்டுகள் காற்றில் அகப்பட்ட துரும்புகளாக அடிபட்டுப் போயின. கடும் போராட்டங்களுக்கு மத்தியில் அவர் வரலாற்றை மாற்றியமைத்துள்ள போதும் அவர் மீதான எதிர்பார்ப்புகளும், எதிர்கொள்ளவேண்டிய சவால்களும் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதிகரித்தவண்ணமே உள்ளன.

வெற்றியின் பின்னர் ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய ஒபாமா:-

எமக்கு முன்னாலுள்ள பாதை மிக நீண்டது. மிகவும் உயரமான இடத்தை நாம் அடைய வேண்டியுள்ளது. ஒரு வருடத்தில் அல்லது ஒரு தவணைக் காலத்தில் நாம் அதனை எட்ட முடியாமல் போகலாம். ஆனால், நாம் அந்த இடத்தை எட்டுவோம் என்றும் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. மக்களாகிய நாம் அந்த இலக்கை எட்டுவோமென நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் எனத் தெரிவித்தார்.

ஒபாமாவின் வெற்றி உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் நம்பிக்கையை அளிப்பதற்கான சமிக்ஞை என தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ள இனவெறி ஆட்சிக்கெதிரான முன்னாள் போராளி நெல்சன் மண்டேலா உன்னத இடத்திற்கு உலகை மாற்ற வேண்டுமென்ற கனவைக் காண்பதற்கான துணிச்சல் உலகிலுள்ள ஒவ்வொருவருக்கும் இருக்கவேண்டுமென்பதை ஒபாமாவின் வெற்றி நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பெரும்பாலான உலகத் தலைவர்கள் ஒபாமாவின் வெற்றியை புதியதொரு சகாப்தத்தின் ஆரம்பமென வர்ணித்துள்ளனர்.

எனவே ஒட்டுமொத்த உலகினதும் எதிர்பார்ப்புடன் பதவியேற்கப் போகும் ஒபாமாவுக்கு ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

ஒபாமாவின் வெற்றியுடன் அமெரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்து விட்டதாக கருதமுடியாதென தெரிவிக்கும் அரசியல் அவதானிகள் அவர் ஒரு மாற்றத்திற்கான முகவராக மட்டுமே வரலாற்றில் நினைவு கூரப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளனர். பிரசாரத்தின் ஆரம்ப கட்டத்திலிருந்தே ஒபாமாவைக் கொலை செய்ய முயன்ற மேலாதிக்கவாதிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கான உயிர் அச்சுறுத்தல்களும் தொடர்ந்து கொண்டிருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ள அதேவேளை மாற்றத்திற்கான அடையாளமாக தன்னை நிலைநாட்டுவது ஒபாமாவுக்கு இலகுவான விடயமாக இருக்கப் போவதில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் கொள்கைகள் மீதான வெறுப்பே குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோன் மக்கெய்ன் தோற்கடிக்கப்பட்டதற்கான பிரதான காரணமாக விளங்குகிறது. மாற்றம் என்ற சுலோகத்தின் மூலம் இளம் தலைமுறையினரின் ஆதரவை வென்றெடுத்துள்ள ஒபாமா நாடு எதிர்நோக்கியுள்ள முக்கிய பிரச்சினைகளான பொருளாதார வீழ்ச்சி, மற்றும் இரு நாடுகள் மீதான படையெடுப்பால் சர்வதேச ரீதியில் ஏற்பட்டுள்ள அபகீர்த்தி என்பவற்றை ஒபாமா எவ்வாறு கையாளப் போகிறார் என்பதற்கான பதிலை முழு உலகமுமே ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது.

தேர்தல் காலத்தில் ஒபாமாவினால் அளிக்கப்பட்ட உறுதி மொழிகளான வரி அறவீடுகளை குறைத்தல், சுகாதார நலத் திட்டங்களை ஊக்குவித்தல், மற்றும் சம்பளக் கொடுப்பனவை அதிகரித்தல் போன்ற திட்டங்கள் பல மில்லியன் டொலர்கள் பெறுமதிவாய்ந்தவை. ஒபாமாவின் உறுதிமொழிகளில் 200,000 டொலர்களை விட குறைந்த வருட வருமானத்தைப் பெறுபவர்களுக்கான வரி அறவீட்டைக் குறைத்தல், 250,000 டொலருக்கும் அதிகமான வருமானத்திற்கான வரிவீதத்தை அதிகரித்தல், வருடத்திற்கு 65 பில்லியன் டொலர்கள் பெறுமதியான சுகாதார நலத் திட்டம் 18 பில்லியன் டொலர்கள் மதிப்பிலான கல்வி முறைமைத் திட்டம் என்பன முக்கியமானவை. இவை தவிர அடுத்த தசாப்த காலத்தில் சக்தி வளத்தை அபிவிருத்தி செய்வதற்கான 150 பில்லியன் டொலர்கள் திட்டமும் முக்கியம் பெறுகிறது.

இதன் பிரகாரம் எண்ணெய்த் தேவைக்காக மத்திய கிழக்கில் தங்கியிருக்கும் நிலையை அடுத்த 10 வருடத்திற்குள் முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்திருந்த ஒபாமா அடுத்த 42 வருடங்களில் பசுமைக் குடில் வாயு வெளியேற்றத்தை 80 வீதமாக குறைப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆனால் அமெரிக்கப் பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் கைத்தொழில் வலயங்களுக்கான வரியை அதிகரித்தலோ, கூடிய வருமானம் பெறும் மக்களின் மீதான வரிச்சுமையை அதிகரித்தலோ மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.
மறுபுறத்தில் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலர்கள் வரவு - செலவுத் திட்ட பற்றாக்குறையையும் 11 ட்ரில்லியன் டொலர்கள் தேசிய கடன்களையும் கொண்டுள்ள அமெரிக்காவில் ஒபாமா தனது திட்டங்களை அமுலாக்குவது இலகுவாக இருக்கப் போவதில்லையென பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தனது உறுதி மொழிகளை ஒபாமாவினால் நிறைவேற்ற முடியுமா இல்லையா என்பதற்கப்பால் மக்களுடனான தொடர்புகளைப் பேணுவதில் அவர் கொண்டுள்ள அதி சக்தி வாய்ந்த ஆற்றலின் மூலம் அவரது பதவிக்காலத்தில் முக்கியமான மாற்றமொன்றை ஒபாமாவினால் ஏற்படுத்த முடியுமெனக் கருதப்படுகிறது.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை கையாள்வது தொடர்பில் கதைப்பது எளிது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவது கடினமென ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். 16 மாதங்களுக்குள் ஈராக்கிலுள்ள படைகளை வாபஸ் பெற்று ஆப்கான் போரை முன்னிலைப்படுத்தப் போவதாக ஒபாமா உறுதியளித்துள்ளார்.

ஆனால் ஈராக் படைகளை திருப்பியழைப்பதற்கு நாட்டின் உயர்மட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் ஒபாமா இதனை எவ்வாறு கையாளப் போகிறார் என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இதனைவிட ஈரானின் அணு விவகாரம், ஆப்கான் - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினைகளை ஒபாமா எவ்வாறு கையாளப் போகிறார் என்பதைக் காண முழு உலகமுமே காத்திருக்கிறது. ஆனால் இவ்வாறான சர்ச்சைக்குரிய விடயங்களுக்கு அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதும் மக்கள் மனதில் பதிவாகியுள்ள ஒபாமாவின் விம்பத்தில் பாதிப்பை ஏற்படுத்தாததுமான தீர்மானமொன்றை எடுப்பதற்கு ஒபாமாவுக்கு மேலும் பல தரப்பினதும் ஆதரவும் அதிர்ஷ்டமும் தேவையென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

மறுபுறத்தில் சிறுபான்மையினத் தலைவரொருவரின் ஆளுமைத் திறனை உலக அரங்கில் பேசவைக்க வேண்டிய பாரிய பொறுப்பும் ஒபாமாவுக்கு உண்டு. ஒபாமாவின் ஒவ்வொரு செயலும் கறுப்பின மக்களின் செயல்திறனோடு ஒப்பு நோக்கப்படும். இன வேறுபாடுகளை கடந்து அனைவருக்கும் சமமான வாய்ப்பு என்பதை அமெரிக்கர்கள் நிரூபித்துள்ளனர். அதேபோன்று தலைமைத்துவ திறனில் சிறுபான்மையினரும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிப்பதற்கு ஒபாமாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு உயர் பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு சிறுபான்மையினத்தவரின் செயல் திறனும் ஒபாமாவின் நடவடிக்கைகளுடன் ஒப்பிடப்படும். எனவே சிறுபான்மையினத்தவரின் தலைமைத்துவ வாய்புக்களை பிரகாசப்படுத்துவதற்கு ஆக்கபூர்வமானதும் செயல்திறன் மிக்கதுமான நடவடிக்கைகளை ஒபாமா மேற்கொள்ள வேண்டியது அவசியம். அபரிமிதமான வெற்றியின் மூலம் சரித்திரம் படைத்த ஒபாமா அந்த வெற்றியை தனது செயல்திறனால் தக்க வைத்துக் கொள்வதிலும் சரித்திரம் படைக்க வேண்டும். கவர்ச்சிமிக்கவர்களையே அமெரிக்கர் விரும்புவார்களென அங்கு நிலவிய எழுதப்படாத விதியையும் உடைத்தெறிந்துள்ள ஒபாமா வெள்ளை மாளிகைக்கு தெரிவான இளம் வயதானவர்களில் ஐந்தாவது ஜனாதிபதியாவார்.

அத்துடன் ஒபாமாவின் இளைய மகளான சாஷா (வயது 7) மிக இள வயதில் வெள்ளை மாளிகையில் குடியேறிய பெருமையை பெறுகிறார். எனினும் ஒபாமாவின் வெற்றி உலக அரங்கில் அவரது இரு மகள்மார் மீதும் சாதகமான தாக்கமொன்றை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

அமெரிக்காவின் பரம எதிரிகளான கியூபா மற்றும் ஈரான் கூட ஒபாமாவின் வெற்றியை வரவேற்றுள்ளன. எனவே ஒபாமா மீது அமெரிக்கர்கள் மட்டுமல்ல முழு உலகுமே பெரும் எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கிறது. சிறுபான்மையின சமூகத்திலிருந்து தெரிவான ஒரு தலைவரென்ற ரீதியில் ஏனைய ஜனாதிபதிகளை விட ஒபாமா உலக நாடுகளை புரிந்துகொண்டு செயற்படுவாரென அனைத்து நாடுகளும் நம்பிக்கை கொண்டிருக்கின்றன. ஆனால் மேலாதிக்க நோக்கங்களுக்கு இசைவாக செயற்பட இணங்காத ஒரு ஜனாதிபதியின் பதவிக்காலம் நீடிக்குமா என்ற சந்தேகமும் எழுப்பப்பட்டுள்ளது.

எது எப்படியிருப்பினும் ஒபாமாவின் வெற்றி கர்வம் குறைந்த அமெரிக்காவுக்கான எதிர்பார்ப்பை உலகளாவிய ரீதியில் அதிகப்படுத்தியுள்ளது.

எனவே ?மாற்றம்? என்ற கோஷம் வெறுமனே வெற்றிக்காக பயன்படுத்தப்பட்ட அஸ்திரமாக இல்லாமல் மக்கள் விரும்பும் உண்மையான மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென்பதே ஒபாமாவின் வெற்றியை முழு மனதோடு வரவேற்ற உலக மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

- நன்றி தினக்குரல் -

"ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல்" வான மண்டலத்தில் விழுந்த பெரிய "ஓட்டை";பூமிக்கு ஆபத்தா?

அமெரிக்காவில் உள்ள "நாசா" விண்வெளி ஆய்வு மையம் வான மண்டலத்தில் ஏற்பட்டுள்ள "ஓட்டை" குறித்து ஆய்வு செய்து வருகிறது.

"நாசா”வை சேர்ந்த விஞ்ஞானி பால் நியூமன் தலைமையிலான குழுவினரின் ஆராய்ச்சியில்,கடந்த ஆண்டு 97லட்சம் சதுர மைல் அளவுக்கு வானவெளியில் ஓட்டை ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது. இது பரப்பளவில் வடக்கு அமெரிக்காவுக்கு இணையானது ஆகும்.

இந்த வான மண்டல ஓட்டை மென் மேலும் அதிகரித்துக்கொண்டே வருவதாகவும் விஞ்ஞானிகளின் ஆய்வு கூறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்த ஓட்டை ஒரு கோடியே 5லட்சம் சதுர மைல் அளவுக்கு பெரிதாகி உள்ளதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

வான மண்டல ஓட்டையின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே செல்வதால் "அல்ட்ரா" கதிர்கள் பூமியை தாக்கும் அபாயம் இருக்கிறதா? என்பது குறித்து நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.

நிலாவை நெருங்கியது சந்திராயன் விண்கலம்

அடுத்த வாரம் நிலாவில் மோதி சோதனை


நிலாவை ஆராய்ச்சி செய் வதற்காக கடந்த மாதம் 22-ந்தேதி சந்திராயன்-1 என்ற செயற்கை கோளை இந்தியா விண்ணில் ஏவியது.பூமியில் இருந்து நிலா சுமார் 3லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

முதலில் பூமியின் நீள் வட்ட சுற்றுப்பாதையில் சந்திராயன் சுற்றி வந்தது. அதன் பிறகு சந்திராயனை கொஞ்சம், கொஞ்சமாக விண்ணில் இந்திய விஞ்ஞானிகள் உயர்த் தினார்கள். பெங்களூர் அருகே பையாலு என்னும் ஊரில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவின்படி சந்திராயன் இயங்கி வருகிறது.

இது வரை 5 தடவை சந்திராயனை விண்ணில் தூரத்தை அதிகப்படுத்தி நிலா அருகில் நெருங்கச் செய்துள்ளனர். இன்று மதியம் வரை நிலாவில் இருந்து 500 கி.மீ. மற்றும் 7500 கி.மீ. தொலைவிலான நீள்வட்ட சுற்றுப்பாதையில் சந்திராயன் சுற்றி வந்தது. அதை நிலா அருகில் கொண்டு செல்லும் பணிகள் நேற்றிரவு தொடங்கியது.

இன்று மாலை சந்தி ராயன் செயற்கைகோள் நிலா அருகில் 100 கி.மீ தொலைவுக்குள் கொண்டு செல்லப்படும். இன்று மாலை 5.30 மணி முதல் 6மணிக்குள் இந்த பணி நடைபெறும். இது வரை சந்திராயன் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நீள்வட்ட பாதையில் சுழன்று கொண்டிருந்தது.

இன்று மாலை சந்திராயன் செயற்கை கோளின் ஓட்ட வேகத்தை விஞ்ஞானிகள் சற்று கட்டுப்படுத்துவார்கள். அதன் பிறகு அதை லாவகமாக நிலாவின் மிகநெருக்கமான சுற்றுப்பாதைக்கு கொண்டு செல்வார்கள்.அந்த சமயத்தில் நிலா விண் ஈர்ப்பு விசை சக்திக்கு ஏற்ப சந்திராயனை சுற்றவிட வேண்டும். இதற் கான பணியை இன்று மாலை குறிப்பிட்ட சில நிமிடங்களுக்குள் செய்து முடிக்க வேண்டும்.

இதில் நூறில் ஒரு புள்ளி தவறு ஏற்பட்டாலும் சந்திராயன் ஆராய்ச்சி பணிகளில் பிரச்சினை ஏற்பட்டு விடும். எனவே இன்று மாலை நிலா அருகில் சந்திராயனை கொண்டு செல்லும் பணி மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நிலாவின் ஈர்ப்பு விசைக்கு ஏற்ப சந்திரா யனை குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிறுத்த விஞ்ஞானிகள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ள காரணத்தால் பையாலுவில் உள்ள விண்வெளி கட்டுப்பாட்டு அறை பரபரப்புடன் காணப் படுகிறது. 6 மணிக்குள் சந்திராயனை இடம் மாற்றும் பணி முழுமையாக முடிந்து விடும். அதன்பிறகு சுமார் 1மணி நேரம் கழித்தே சந்திராயன் எப்படி இயங்குகிறது என்பது தெரிய வரும்.

இந்த பணிகள் வெற்றிகரமாக முடிந்த தும் சந்திராயன் செயற்கை கோளில் உள்ள தகடுகள் தானாக சூரியனை நோக்கி விரியும். சூரிய ஒளி மூலம் அந்த தகடு தானாக மின்சாரத்தை தயாரித்து செயற்கை கோள் தங்கு தடையின்றி பணியாற்ற உதவி புரியும். இதையடுத்து சந்திராயனில் உள்ள 11 கருவிகளும் ஒன்றன்பின் ஒன்றாக செயல்பட தொடங்கும்.

அடுத்த தடவை நிலாவில் மனிதனை இறக்கி ஆய்வு நடத்த இந்தியா தீர்மானித்துள்ளது. அதற்கு முன்னோட்டமாக எம்.ஐ.பி. னும் ஒரு சிறிய எந்திர கருவியை நிலாமீது மோத செய்ய உள்ளனர். அடுத்த வாரம் சனிக்கிழமை இந்த பணி நடைபெறும்.

சந்திராயனுக்குள் வைக் கப்பட்டுள்ள இந்த கருவி தானாக பிரிந்து சென்று நிலாவில் மோதி தரை இறங்கும். அப்போது எத்தகைய விளைவுகள் ஏற் படுகிறது என்பதை இந்திய விஞ்ஞானிகள் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே ஆய்வு செய்வார்கள்.அதன் பிறகு நிலாவில் தண்ணீர் உள்ளதாப ஹிலீயம்-3 உள்ளிட்ட கனிம வளங்கள் நிலாவில் எந்தெந்த பகுதிகளில் எவ்வளவு உள் ளது என்பதை சந்திராயன் கண்டு பிடிக்கும்.

பொருளாதார நெருக்கடியை ஒருங்கிணைந்து சமாளிப்போம் அதிபராக தேர்வான ஒபாமா பேச்சு


பொருளாதார நெருக்கடியை ஒருங்கிணைந்து சமாளிப்போம் என்று அமெரிக்க அதிபராக தேர்வான பராக் ஒபாமா கூறினார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பராக் ஒபாமா, சிகாகோ நகரின் கிராண்ட் பார்க்கில் லட்சக் கணக்கில் திரண்ட தனது ஆதரவாளர்களிடையே பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாற்றம் வந்திருக்கிறது

அமெரிக்காவில் மாற்றம் வந்திருக்கிறது. அதற்காக அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாற்றம் நீண்ட போராட்டத்திற்குப் பின் வந்திருக்கிறது. தேர்தலில் நாம் மேற்கொண்ட கடும் உழைப்பு, முயற்சிகள் காரணமாக இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

தேர்தல் பிரசாரத்தின்போது எதிர் அணி வேட்பாளர் மெக்கைனும் மிகவும் பாடுபட்டார். நாட்டின் மீது அவர் கொண்டிருந்த அளவு கடந்த அன்பினால் கடுமையாக உழைத்தார். வியட்நாம் போரில் அமெரிக்காவுக்காக அவர் செய்த தியாகத்தை நாம் மறந்து விடக்கூடாது. அவர் துணிச்சலுடனும், சுயநலமின்றியும் தனது சேவையை நாட்டுக்காக ஆற்றியிருக்கிறார். அவரது தியாகத்தை நாம் போற்றவேண்டும்.

என்னை இந்த அளவிற்கு வளர்த்து ஆளாக்கிய எனது பாட்டி உயிருடன் இல்லை என்பதை அறிவேன். எனினும், அவரும் எனது குடும்பத்தினருடன் இருந்து இதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றே எண்ணுகிறேன். அவரை இன்று இழந்து நிற்கிறேன். அவருக்கு நான் பட்டிருக்கும் கடன்கள் அளவிட முடியாதவை.

உயரத்தை அடைவோம்

தற்போது, நமக்கு எதிராக உள்ள பாதை மிகவும் நீளமானது. நாம் ஏறவேண்டிய உயரமோ மிகவும் செங்குத்தானது. அந்த உயரத்தை நம்மால் ஒரு வருடத்திலோ அல்லது இன்னும் சில காலங்களிலேயோ அடைந்து விட முடியாது.

ஆனாலும், அமெரிக்காவும், நானும் அந்த இடத்தை அடைந்து விடுவோம் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாம் நிச்சயம் அந்த இடத்தை அடைவோம் என்று உங்களிடம் உறுதி கூறிக் கொள்கிறேன்.

ஒருங்கிணைந்து உழைப்போம்

நமக்கு முன்னதாக உள்ள பொருளாதார நெருக்கடிகளும், இழப்புகளும், நாம் அனைவரும் ஒரே மக்களாக எழுவோம் அல்லது வீழ்வோம் என்பதையே உணர்த்தியிருக்கிறது.

தற்போது, நமக்கு தேச பக்தி மீதான சேவையில் புதிய உத்வேகமும், பொறுப்பும் அதிகமாக இருக்கிறது. அதை நம் ஒருவருக்கானது என்று மட்டுமே கருதாமல் அனைவருக்கும் பொதுவானது என்று நினைத்து அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து கடுமையாக உழைப்போம்.

உலக மக்கள் கண்ணீரையும், ஏழ்மையையும் அமெரிக்கா தோற்கடிக்கும். அமைதியையும், பாதுகாப்பையும், விரும்புவோருக்கு என்றும் நாம் ஆதரவாக இருப்போம்.

மேற்கண்டவாறு பராக் ஒபாமா பேசினார்.

நெகிழ்ச்சி

ஒபாமா கூட்டத்தில் பேசியபோது அதை, ஜனநாயக கட்சியின் சார்பாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு 2 தடவை வாய்ப்பு கிடைக்காத கறுப்பரும், சிவில் உரிமைகள் அமைப்பின் தலைவருமான ஜெஸ்சி ஜாக்சனும் ஆர்வமுடன் கேட்டார்.அப்போது, ஜெஸ்சியின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது நெகிழ்ச்சியான காட்சியாக இருந்தது.

" வெள்ளை மாளிகையில் கறுப்பு நிலா "


"நமக்கு தேவை மாற்றம்" என்ற ஒற்றை கோஷத்தினால் அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார், பராக் ஒபாமா.

பராக் என்ற அரேபிய வார்த்தைக்கு `ஆசிர்வதிக்கப் பட்டவர்' என்று அர்த்தம். ஆப்பிரிக்க கறுப்பரான ஒபாமா, வெள்ளையர் நாடான அமெரிக்காவில் அதிபராகி அந்த அர்த்தத்துக்கு வலு சேர்த்து இருக்கிறார்.

அடிமை வியாபாரம்

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்காவில் இருந்து அமெரிக்காவுக்கு அடிமைகளாக அழைத்து வரப்பட்டவர்கள்தான், கறுப்பர் இனத்தவர். ஆடு, மாடுகளை போல கூட்டம் கூட்டமாக விற்பனை செய்யப்பட்டு தலைமுறை, தலைமுறையாக கூனிக் குறுகி கிடந்த அந்த இனத்துக்கு சுவாசக் காற்றாய் அமைந்தவர் ஆபிரகாம்
லிங்கன்.

அவர் அதிபராக இருந்தபோதுதான் அடிமை வியாபாரத்துக்கு தடை விதித்தார். ஆனாலும் கூட இனவெறியின் கொடுவாள் மழுங்கவில்லை. அடிமை வியாபாரத்தை ஒழித்து பல ஆண்டுகள் கழித்து, கறுப்பர் இன உரிமைகளுக்காக மார்ட்டின் லூதர் கிங் போராடினார். ஆனால், இனவெறி என்னும் கொடுவாள் அவரை வீழ்த்தியது.

ஆபிரிக்க தந்தை

அவர் விதைத்த விதை, 50 ஆண்டுகள் கழித்து கற்பக விருட்சமாக வளர்ந்து நிற்கிறது. எந்த அமெரிக்காவில் சம உரிமைக்காக கறுப்பர்கள் போராடினார்களோ அதே அமெரிக்காவின் முதல் குடிமகனாக கறுப்பர் இனத்தை சேர்ந்த பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்.

ஒபாமாவின் தந்தை ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கென்யா நாட்டின் கறுப்பர் இனத்தை சேர்ந்தவர். ஹவாய் தீவுக்கு படிக்க வந்தபோது அமெரிக்காவை சேர்ந்த ஆன் துன்ஹம் என்ற வெள்ளை இன பெண்ணை காதலித்து மணமுடித்தார். அவர்களுடைய மணவாழ்க்கையின் அன்பு பரிசாக, 1961ம் ஆண்டு ஒபாமா பிறந்தார்.

இரண்டு ஆண்டுகளில் தாய்-தந்தை இருவரும் விவாகரத்து செய்து விட்டனர். தந்தை கென்யா சென்று விட்டார். அதே நேரத்தில், இந்தோனேசியாவை சேர்ந்த லோலோ செயடோரா என்ற முஸ்லிம் ஒருவரை ஒபாமாவின் தாய் மறுமணம் செய்தார். அமெரிக்காவில் இருந்து இந்தோனேசியாவுக்கு குடியேறிய ஆன்-லோலோ தம்பதி, சிறுவன் ஒபாமாவையும் தங்களுடன் அழைத்துச் சென்றனர்.

காதல் திருமணம்

12 வயதுக்கு பின் அமெரிக்கா திரும்பிய ஒபாமா, தாய்வழிப் பாட்டியின் அரவணைப்பிலேயே வளர்ந்தார். 1983ம் ஆண்டு கல்லூரி படிப்பை முடித்தார். நிïயார்க் மற்றும் சிகாகோவில் சில வேலைகளை செய்து வந்த அவர், 1988ம் ஆண்டு ஹார்வர்டு சட்டக் கல்லூரியில் சேர்ந்தார்.

அங்குதான் தன்னுடைய வாழ்க்கையின் வசந்தத்தை சந்தித்தார். ஒபாமாவின் விழியில் நுழைந்து இதயத்தில் இடம் பிடித்தார், மிச்செலி என்னும் மாணவி. இரண்டு இதயங்களும் ஒன்றிணைந்து திருமணத்தில் முடிந்தது. அவர்களுடைய காதல் மண வாழ்க்கையை அங்கீகரிக்கும் விதமாக மாலியா (10), ஷாஷா (7) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

சட்டம் முடித்த பிறகு வக்கீலாகவும் சிகாகோ பல்கலைக்கழக பேராசிரியராகவும் ஒபாமா பணியாற்றினார். கல்லூரி நாட்களிலேயே பல்வேறு அமைப்புகளின் தலைவராகவும், மாணவ பத்திரிகை ஆசிரியராகவும் தலைமைப் பண்பை வளர்த்துக் கொண்டவர் என்பதால் அரசியல் ஆர்வம் இயற்கையாகவே ஒட்டிக் கொண்டது.

அதன் விளைவாக, ஜனநாயக கட்சி சார்பில் இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து செனட் சபைக்கு 1996ம் ஆண்டும், 2004ம் ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதும் செனட் உறுப்பினராக இருக்கிறார்.

அதிபர் தேர்தலில் போட்டி

இளமை பருவம் முதல் எதிர்ப்புகளையே ஏணியாக கொண்டு முன்னேறிய ஒபாமாவுக்கு அதிபர் பதவியும் சாமானியமாக கிடைக்கவில்லை. ஜனநாயக கட்சியின் வேட்பாளராக களம் இறங்கவே மூச்சு முட்டிப் போனது. ஹிலாரி, அவருக்கு கடும் சவாலாக இருந்தார்.

பிரசாரத்தின்போது, குடியரசு கட்சியில் இருந்து சரமாரியான விமர்சனக் கணைகள் துளைத்து எடுத்தன. முஸ்லிம், கறுப்பு இனத்தவர் என என்னவெல்லாமோ விமர்சனங்கள். ஆனால், `நமக்கு தேவை, மாற்றம்` என்ற ஒபாமாவின் கவச(கோஷ)த்தால் அந்த கணைகள் அனைத்தும் முனை முறிந்து போயின.

இந்தியாவுக்கு ஆதரவு

எதிர்க்கட்சி வேட்பாளர் மெக்கைனுடன் நடந்த நேருக்கு நேர் விவாதத்தின்போது ஆணித்தரமான கருத்துகளை முன்வைத்து மக்களை கவர்ந்தார். வேட்பாளர் நிதி திரட்டுவதிலும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து ரூ.3384 கோடி (564 மில்லியன் டாலர்) திரட்டினார். ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டு கிடக்கும் கறுப்பர் இனத்தில் இருந்து உலகின் மிகப்பெரிய வல்லரசு நாட்டின் தலைவராக ஒபாமா உயர்ந்து விட்டார்.

அணுசக்தி ஒப்பந்தம் போன்ற முக்கியமான விஷயங்களில் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பாராளுமன்ற வாக்கெடுப்பின்போது இந்தியாவுக்கு ஆதரவாகவே ஒபாமா வாக்களித்தார். அது மட்டுமல்ல தீவிரவாதம், அணு ஆயுத பரவல், வறுமை, இனப்படுகொலை போன்றவற்றை எதிர் கொள்ள புதிய கூட்டாளி நாடுகளை உருவாக்கவும் ஒபாமா சூளுரைத்து இருக்கிறார்.

இந்திய-அமெரிக்க உறவு என்னும் மேல் வானத்தில் ஒரு கறுப்பு ஒளி மின்னுவது அனைவருடைய கண்களுக்கும் தெரிகிறது.

அமெரிக்காவின் அடுத்த அதிபர் ஒபாமா! : அமோக வெற்றி பெற்று சாதனை : புஷ் கட்சிக்கு பெருத்த அடி

வாஷிங்டன் : அமெரிக்காவின் 44வது அதிபராக, ஆப்ரிக்க வமிசாவளியைச் சேர்ந்த 47 வயது பராக் ஒபாமா அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ஜான் மெக்கைன் தோல்வி அடைந்தார். அதிபர் புஷ் பின்பற்றிய தவறான கொள்கைகளுக்கு அடியாக இம்முடிவு அமைந்தது. அமெரிக்க நடைமுறைகளின்படி, 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்கிறார்.

அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜார்ஜ் வாக்கர் புஷ் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரியுடன் முடிகிறது. இதையடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்தத் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும்(47), குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக்கைனும்(72) போட்டியிட்டனர். இவர்களைத் தவிர சிறிய கட்சிகளின் சார்பில் சக்பால்ட்வின், சிந்தியா மெக்கினி, சுயேச்சை வேட்பாளர் ரால்ப் நடார் ஆகியோரும் களத்தில் இருந்தனர். இருப்பினும், பராக் ஒபாமா மற்றும் ஜான் மெக்கைன் இடையே தான் கடும் போட்டி நிலவியது. அமெரிக்க அதிபரை மக்கள் நேரடியாக ஓட்டளித்து தேர்ந்தெடுப்பதில்லை. ஒவ்வொரு மாகாணத்திலும் மாநில மக்கள்தொகை அடிப்படையில், தேர்தல் சபை உறுப்பினர்கள் உண்டு. அந்த உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 538. இவற்றில், 270 உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுபவரே அமெரிக்க அதிபராவார். ஆனால், பராக் ஒபாமா எதிர்பார்த்ததை விட அதிகமாக, 338 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைன், 159 உறுப்பினர்களின் ஆதரவை மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். இதன்மூலம், அமெரிக்காவின் 44வது அதிபராகிறார் ஒபாமா. அத்துடன், அமெரிக்காவின் 232 ஆண்டுகால வரலாற்றில் முதல் கருப்பின அதிபர் என்ற பெருமையை பெறுகிறார். இதன்மூலம் புதிய வரலாறு படைத்துள்ளார்.

கென்யாவைச் சேர்ந்த தந்தைக்கும், அமெரிக்க தாய்க்கும் பிறந்த பராக் ஒபாமாவுக்கு மிச்சேல் என்ற மனைவியும், மாலியா, சாஷா என்ற மகள்களும் உள்ளனர். தற்போது இல்லினாய்ஸ் மாகாண கவர்னராக இருக்கும் ஒபாமா, சட்டம் படித்தவர். அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அமெரிக்க வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மிக நீண்ட நாட்கள் மற்றும் அதிக செலவில் நடந்த தேர்தல் பிரசாரம் முடிவுக்கு வந்துள்ளது. பராக் ஒபாமா அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு அதிபர் பதவியில் இருப்பார். "புதிய மாறுதல்' என்று அமெரிக்கர்களுக்கு அழைப்பு விடுத்து வெற்றி பெற்ற இவருக்கு, துணை அதிபராக உதவப் போகும் ஜோ பிடன் வெளிவிவகாரக் கொள்கைகளில் நிபுணர். கடந்த 2004ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஒகியோ, புளோரிடா, வெர்ஜினியா, ஐயோவா, நியூ மெக்சிகோ, நிவேடா மற்றும் கொலராடோ ஆகிய மாகாணங்களில் அதிபர் புஷ் வெற்றி பெற்றிருந்தார். அவர் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். ஆனால், இம்முறை அந்த மாகாணங்களில் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமாவுக்கு ஆதரவாக ஓட்டுக்கள் விழுந்துள்ளன. அத்துடன் ஜனநாயக கட்சியினரின் ஆதிக்கம் குறைந்த மாகாணம் என நம்பப்படும் பென்சில்வேனியாவிலும் ஜான் மெக்கைனுக்கு குறைவான ஓட்டுக்களே விழுந்தன.

ஜான் மெக்கைன் ஆட்சிக்கு வந்தால், அதிபர் புஷ் ஆட்சியே மூன்றாவது முறை தொடர்வதாக கருதலாம். அவரின் கொள்கைகளையே ஜான் மெக்கைன் பின்பற்றுவார் என, ஒபாமா பிரசாரம் செய்தார். அந்தப் பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. தற்போதைய அதிபர் புஷ்ஷின் பதவி, 2009ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதியுடன் முடிவடைகிறது. அன்றைய தினம் ஒபாமா அதிபராக பதவியேற்பார். அமெரிக்காவில் இன ரீதியாக சமத்துவம் உருவாக வேண்டும் என, சிவில் உரிமைகளுக்காகப் போராடிய மார்ட்டின் லூதர்சிங் விரும்பினார். அவரின் விருப்பம், ஒபாமாவின் வெற்றி மூலம் நிறைவேறியுள்ளது.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் சிகாகோவில் தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய பராக் ஒபாமா கூறியதாவது: அமெரிக்காவில் எல்லாம் நடக்குமா, ஜனநாயகத்தின் கனவுகள் அங்கே இனி நனவாகுமா என்ற சந்தேகம் கொண்டவர்களுக்கு இந்த வெற்றி நல்ல பதிலை தந்துள்ளது. நமது ஜனநாயகத்தின் அதிகாரம் பற்றி கேள்வி எழுப்பியவர்களுக்கு எல்லாம் இந்த இரவில் பதில் கிடைத்துள்ளது. இவ்வாறு ஒபாமா கூறினார். ஒபாமா தன் ஆதரவாளர்கள் மத்தியில் பேசுவதற்கு முன், அவருக்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வி அடைந்த ஜான் மெக்கைன் வாழ்த்து தெரிவித்தார். ஒபாமா வெற்றி பெற்றதை அறிந்தவுடன் வெள்ளை மாளிகை முன் குவிந்த கருப்பினத்தவரும், வெள்ளையர்களும் வெற்றியை கொண்டாடினர். டிரைவர்கள் ஆங்காங்கே தெருக்களில் வாகனங்களை நிறுத்தி ஒலி எழுப்பினர். அத்துடன் வாழ்த்தும் தெரிவித்தனர். அமெரிக்காவின் பல பகுதிகளில் உள்ள நகரங்களிலும் இதேபோன்ற கொண்டாட்டங்கள் நிகழ்ந்தன. இதேபோல், பிரதமர் மன்மோகன் சிங் உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள தலைவர்களும் ஒபாமாவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஆதரவாக 52 சதவீத ஓட்டு: செனட்டிலும் அபாரம் : அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலில், பராக் ஒபாமா 52 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைன் 47 சதவீத ஓட்டுக்களைப் பெற்றுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் புஷ் 50.7 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார். மொத்த தேர்வுக் குழு உறுப்பினர்களில் 286 பேரின் ஆதரவைப் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான்கெரி 48.3 சதவீத ஓட்டுக்களைப் பெற்றார். அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 435. இவற்றில் பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியினர் 251 இடங்களைப் பிடித்துள்ளனர். குடியரசு கட்சியினர் 171 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதேபோல், செனட் சபை மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 100. இதில், ஜனநாயக கட்சிக்கு 56 இடங்களும், குடியரசு கட்சிக்கு 40 இடங்களும் கிடைத்துள்ளன.

தலைவர்கள் வாழ்த்து

அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ் : "நாட்டின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள். நீங்கள் வாழ்வில் மிக முக்கியமான பயணத்தை மேற் கொள்ள உள்ளீர்கள். சந்தோஷம் அடையுங்கள்'.

குடியரசு கட்சி வேட்பாளர் மெக்கைன் : கருத்து வேறுபாடுகளை மறந்து, அனைத்து அமெரிக்கர்களும் பராக் ஒபாமாவுக்கு ஆதரவு தர வேண்டும். இக்கட்டான நிலைமையில் இருந்து நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவ வேண்டும்.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங்: உங்கள் வெற்றி அமெரிக்க மக்களை மட்டுமல்ல, உலக மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளது. வெள்ளை மாளிகைக்கு செல்லும் உங்களது வியத்தகு பயணம் இந்திய - அமெரிக்க உறவை வலுப்படுத்தும்.

தமிழக முதல்வர் கருணாநிதி: தங்களை தேர்வு செய்ததன் மூலம் அமெரிக்க மக்கள் மாற்றத்தை விரும்பி ஒளிமயமான எதிர்காலத்தை தேர்வு செய்துள்ளனர். அமெரிக்காவின் அதிபராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் சாதித்த சாதனையாளர்கள்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அடுத்த அதிபராக ஒபாமாவை அடையாளம் காட்டியுள்ளன. இந்நிலையில் 2008க்கு முன் நடந்த தேர்தலில் சாதித்த சாதனையாளர்கள் பற்றிய விபரம் இதோ: 2004 ம்ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் ஜார்ஜ் புஷ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் ஜான் எப். கெரியை 286- 251 என்ற எலக்டோரல் ஓட்டுகள் கணக்கில் வென்றார். 2000ம் தேர்தலில் ஜார்ஜ் புஷ்271-266 என்ற ஓட்டுகள் கணக்கில் ஜனநாயக கட்சியின் ஆல்பர்ட் அல்கோரை வெற்றி கண்டார். 1996 ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் வில்லியம் கிளிண்டன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராபர்ட் ஜெ. டோலை 379-159 என்ற ஓட்டுகள் கணக்கில் வென்றார். இதே போல் 1992ம் நடந்த தேர்தலிலும் கிளிண்டன் 370-168 என்ற ஓட்டுகள் கணக்கில் தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்சின் தந்தை ஜார்ஜ் எச். புஷ்சை வென்றார். 1988 நடந்த தேர்தலில் குடியரசு கட்சியின் ஜார்ஜ் எச். புஷ் 426-111 என்ற ஓட்டகள் கணக்கில் ஜனநாயக கட்சியின் மைக்கேல் டுகாகிஸ்சையும், 1984 தேர்தலில் குடியரசு கட்சியின் ரொனால்டு ரீகன் 525-013 என்ற கணக்கில் வால்டர் எப். மாண்டேல் லையும்வெற்றி கண்டனர். 1980 தேர்தலிலும் ரொனால்டு ரீகனே வெற்றி வாகை சூடினார். இம்முறை ஜனநாயக கட்சியின் ஜிம்மி கார்டரை 489-049 என்ற ஓட்டுகள் கணக்கில் அவர் வீழ்த்தினார். 1976 தேர்தல் ஜிம்மி கார்டரின் முறை. இம்முறை ஜனநாயக கட்சியின் ஜிம்மி கார்டர் 297-240 என்ற கணக்கில் ஜெரால்டு போர்டை வென்றார்.1972 தேர்தலில் குடியரசு கட்சியின் ரிச்சர்டு நிக்சன் 520-017 என்ற ஓட்டுகள் கணக்கில் ஜார்ஜ் மெக்கவர்னை பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் வென்று சாதனை புரிந்தார்.1960ல் நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் ஜான் எப். கென்னடி303-219 என்ற ஓட்டுகள் கணக்கில் ரிச்சர்டு நிக்சனை வென்றார். அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரையில் 4 அதிபராகிய சாதனை ஜனநாயக கட்சியின் பிராங்ளின் ரூஸ்வெல்டிடம் உள்ளது. இவர் 1932, 1936, 1940, 1944 முறையே 472, 523, 449, 432 ஆகிய எலக்டோரல் ஓட்டுகளைப் பெற்று அசைக்க முடியாத அதிபராக விளங்கினார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பராக் ஒபாமா வெற்றி

அமெரிக்காவின் புதிய அதிபராக ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன்மூலம் அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

அமெரிக்காவின் 44}வது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இத்தேர்தலில் குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கைனும், ஜனநாயகக் கட்சியின் பராக் ஒபாமாவும் போட்டியிட்டனர். இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே ஒபாமா முன்னிலை வகித்தார்.

அமெரிக்கத் தேர்தல் முறைப்படி மொத்தமுள்ள 538 வாக்குகளில் வெற்றிபெற 270 வாக்குகளைப் பெற வேண்டும். ஒபாமாவுக்கு இதுவரை 338 வாக்குகள் கிடைத்துள்ளன. எனவே அவர் அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபர் பதவியை குடியரசுக் கட்சியிடமிருந்து ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.

"மாற்றம் தேவை" என்ற கோஷத்துடன் தேர்தலைச் சந்தித்த ஒபாமா வெற்றிபெற்றவுடன் மாற்றம் வந்துவிட்டதாகத் தெரிவித்தார்.வெற்றிபெற்ற ஒபாமாவுக்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜான் மெக்கைனும், தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷும் வாழ்த்துத் தெரிவித்தனர்.


வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு பல்வேறு இந்திய அரசியல் கட்சிகளும் வாழ்த்து தெரிவித்துள்ளன.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் புதுமையும் நுணுக்கமும்

அமெரிக்காவில் நாளை 4ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தல் முடிவுகள் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி ஆகிய இரு கட்சிகளைப் பொறுத்துதான் அமெரிக்க அரசியல் நடைபெறுகிறது. தேர்தல் போட்டிகளும், வெற்றி, தோல்விகளும் இந்த இரு கட்சி அரசியல் வட்டத்திற்குள் அடங்கி இருக்கின்றன.

அமெரிக்க அதிபர் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. அமெரிக்க செனட் சபையின் ஒவ்வோர் உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் என இருந்தாலும், மூன்றில் ஒரு பகுதியினரின் தேர்தல் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். மக்கள் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களின் பதவிக்காலம் இரண்டாண்டுகள் மட்டுமே. அமெரிக்கக் கூட்டாட்சியின் மத்திய அமைப்புகளைத் தவிர மாநிலங்கள்தோறும் உள்ள ஆளுநர், மாநிலத்துக்கான செனட் பிரதிநிதி உறுப்பனர்களுக்கும் குறிப்பிட்ட பதவிக் காலத்திற்குப் பிறகு நடைபெறும் தேர்தல்கள், அமெரிக்க அதிபர், செனட் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்களுக்கான தேர்தல்களுடன் இணைத்து ஒரே சமயத்தில் நடத்தப்படுகின்றன.

எல்லோருக்கும் சமமான மனித உரிமைகளை உள்ளடக்கியதாக அமெரிக்க அரசமைப்புச் சட்டம் 1788ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றாலும் அமெரிக்காவில் குடியேற்றப்பட்டு பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்த கறுப்பு இனத்தவர்களுக்குக் குடிமக்கள் உரிமையும், வாக்களிக்கும் உரிமையும் நீண்ட காலமாகத் தரப்படாமல் இருந்தது. கறுப்பர்களின் சமஉரிமைக்காகப் போராடிய ஆபிரகாம் லிங்கன் உள்நாட்டுப் போரில் வெற்றி பெற்றுக் கறுப்பர்களின் அடிமைத்தனத்தைச் சட்டப்படி நீக்கினாலும், நடைமுறையில் பலகாலம் கறுப்பர்களுக்குச் சமஉரிமை வழங்கப்படவில்லை. அவருக்குப் பிறகு நீக்ரோ இனத்தவர்களுக்கு உரிமைகள் தருவதற்காக நான்கு முறைகள் அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. இருப்பினும் வாக்களிக்கும் உரிமையைத் தடுக்கும் வகையில் பல தடைகளைத் தென் மாநிலங்கள் போட்டிருந்தன.

1964ல் வந்த 24வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்தான் தடைகளை நீக்கி நீக்ரோ மக்களுக்கும் வாக்குரிமையை உறுதிபடத் தந்தது.

தேர்தலில் நின்று அமெரிக்க செனட் சபைக்கு இதுவரை பின்வரும் மூன்று கறுப்பு இனத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்: 1. எட்வர்ட் புரூக் (1967 79, மாசசூஸெட்ஸ்), 2. கரோல் மோஸ்லீ பிரௌன் (முதல் கறுப்பு இனப் பெண்மணி, 199298, இல்லினாய்ஸ்), 3. பராக் ஒபாமா (2004 முதல் இல்லினாய்ஸ்). ஆயினும் முதன்முறையாக அமெரிக்க கருப்பர் இனத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபருக்கான தொடக்கத் தேர்தலில் வெற்றி பெற்று இதுவரை வந்துள்ள கணிப்புகளில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகி இருக்கிறது.

இதற்கு மேலாக, அமெரிக்கத் தேர்தலில் சில புதுமைகளும், தேர்தல் நுணுக்கங்களும் வெளிப்படுகின்றன. ஜனநாயககுடியரசு ஆகிய இரு முக்கியக் கட்சிகளைத் தவிர, அமெரிக்க மாநிலங்களில் உள்ள விதிமுறைகளின்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. அவற்றின் சார்பாக அதிபர் பதவிக்குப் போட்டியிடுபவர்களின் பெயர்களும் ஆங்காங்கு தமக்கு ஆதரவான மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் அதிகாரபூர்வமாக வாக்குச் சீட்டுகளில் இடம்பெற்றிருக்கின்றன.

அமெரிக்காவின் அதிபர், துணை அதிபர் பதவிகளுக்கு 11 கட்சிகள் போட்டியிடுகின்றன. பின்வரும் நான்கு கட்சிகள் அதிகாரபூர்வமாகப் பல மாநிலங்களில் தேர்தலைச் சந்திக்கின்றன. 1. அரசமைப்புச் சட்டக் கட்சி, 36 மாநிலங்களில் 2. விடுதலையாளர் கட்சி, 44 மாநிலங்களில் 3. பசுமைக் கட்சி, 31 மாநிலங்களில் 4. சுயேச்சை இதர கட்சிகளின் அணி 45 மாநிலங்களில்.

11 கட்சிகள் சில மாநிலங்களில் அதிபர் துணை அதிபர் பதவிகளுக்குப் போட்டியிடுகின்றன. மற்றும் 6 கட்சிகள் அதிபர் பதவிக்கு மட்டும் போட்டியிடுகின்றன. ஆக, அதிபர் தேர்தலில் ஜனநாயக குடியரசுக் கட்சிகளைத் தவிர்த்து, 17 கட்சிகள் போட்டியிடுகின்றன.

இருப்பினும், சில மாநிலங்களில் இத்தகைய போட்டிக் கட்சிகள் வாக்குகளைப் பிரித்துக்கொள்ளும்போது, பெரிய இரண்டு கட்சிகளின் வெற்றி வாய்ப்புகள் மாறக்கூடும். எடுத்துக்காட்டாக, ரால்ப் நேடர் அமெரிக்க அதிபர் தேர்தலில் 1992ல் இருந்து தொடர்ந்து போட்டியிட்டு வருகி?ர். 2000ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் புளோரிடா மாநிலத்தில் குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் பெற்ற வாக்குகள் 29,10,299; ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,09,911; அந்தச் சமயத்தில் பசுமைக் கட்சி சார்பில் போட்டியிட்ட ரால்ப் நேடர் பெற்ற வாக்குகள் 96,839. அல்கோருக்கு வரவிருந்த வாக்குகளை நேடர் பிரித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டு அப்பொழுது வந்தது. புளோரிடா வாக்குகளில் பெரும்பான்மையைப் பெற முடியாத காரணத்தால் அல்கோர் அதிபர் தேர்தலில் தோல்வியுற்றார். ஆக, பல கட்சிகள் போட்டியிடுவது முக்கியமான இரு கட்சிகளின் தேர்தல் முடிவுகளை மாற்றக்கூடும்.

அமெரிக்கத் தேர்தலில் எழுதி வாக்களித்தல் எனும் முறை இருக்கிறது. அதாவது, அங்கீகாரம் பெறாத ஒரு வேட்பாளரின் பெயர் வாக்குச்சீட்டில் இடம்பெறாது. இருப்பினும், அமெரிக்கத் தேர்தல் முறையில் வாக்குச்சீட்டில் ஒரு வெற்றிடம் தரப்பட்டு அதில் வாக்காளர்கள் விரும்பனால் அங்கீகாரம் பெறாத வேட்பாளரின் பெயரை எழுதி ஆதரவு அளிக்கலாம். இவ்வாறு எழுதி வாக்களிக்கும் முறையால் அமெரிக்கத் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும் உண்டு. 1954ல் ஜேம்ஸ் ஸ்ட்ரோம் தர்மண்ட் என்பவர் அமெரிக்க செனட் சபைக்கு "எழுதி வாக்களித்தல்' முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த 2008ம் ஆண்டு அமெரிக்கத் தேர்தலில் 65 வேட்பாளர்கள் "எழுதி வாக்களித்தல்' முறையில் போட்டியிடுகின்றனர்.

அமெரிக்கத் தேர்தல் 2008ம் ஆண்டு நவம்பர் 4ல் நடைபெறும் என்று இருந்தபோதிலும் அதற்கு முன்னதாகவே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் 31 மாநிலங்களில் தேர்தல் தேதிக்கு முன்னதாக வாக்களிப்பதற்குச் சட்டபூர்வமான வாய்ப்பு தரப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் அக்டோபர் 13ம் திகதி தொடங்கி அக்டோபர் 30 வரை குறிப்பிட்ட சில இடங்களில் வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிப்பதற்கான வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.

2000ம் ஆண்டு தேர்தலில் 16 சதவிகித வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் முறையைப் பயன்படுத்தினர். 2004 தேர்தலில் 22 சதவிகித வாக்காளர்கள் முன்னதாக வாக்களித்தனர். தற்போதைய 2008 தேர்தலில் 30 சதவிகித அளவுக்கு முன்கூட்டி வாக்களிப்பவர்கள் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக வாக்களிப்பவரின் பெயரும், வரிசை எண்ணும், ஒளிப்படமும் தேர்தல் சாவடியில் பதிவு செய்யப்பட்டு விடுகின்றன. முன்னதாக வாக்களிக்கும் முறையால் ஒரு வாக்காளர் பலமுறை வாக்களிக்கும் மோசடி இதுவரை எதுவும் நடைபெறவில்லை என்று தேர்தல் குழு தெரிவிக்கிறது. உடல்நலம் குன்றிய ஒரு வாக்காளர் வாக்குச்சாவடிக்குக் காரில் அழைத்துவரப்பட்டால், வாக்குச்சீட்டைத் தேர்தல் அதிகாரி எடுத்துச்சென்று ரகசியமாக அவருடைய வாக்கைப் பதிவு செய்ய வசதி செய்யப்படுகிறது. இவ்வாறு முன்கூட்டி நடைபெறும் வாக்குப் பதிவுகளை முறையாகப் பாதுகாத்து, நவம்பர் 4ம் திகதி போடப்படும் வாக்குகளுடன் சேர்த்து ஒரே நாளில் எண்ணப்படும்.

அமெரிக்க அதிபரைத் தேர்ந்தெடுக்கும் ஆண்டில் வாக்காளர்கள் அதிகமாக 60 சதவிகிதத்திற்குக் குறையாமல் வாக்களிக்க முன்வருகின்றனர். அதிபருக்கான வேட்பாளருக்கு நேரடியாக வாக்காளர்கள் தம்முடைய வாக்குகளைத் தந்தாலும், கடைசியில் 540 பேர்களைக் கொண்ட தேர்தல் குழுவினர் தரும் ஆதரவை வைத்துத்தான் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அதிபருக்கான தேர்தல் குழு என்பது அமெரிக்காவில் ஒரு வினோதமான அமைப்பு. மக்கள்தொகைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேர்தல் குழு உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்படுகிறார்கள். இதன்படி கலிபோர்னியா 54, டெக்ஸாஸ் 34, இல்லினாய்ஸ் 32, நியூயோர்க் 31, புளோரிடா 26 எனத் தொடங்கி அலாஸ்கா, டென்வர் போன்ற சிறிய மாநிலங்களுக்குக் குறைந்தபட்சமாக 3 உறுப்பனர்கள் தரப்படுகிறார்கள். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் கலிபோர்னியா மாநிலத்தில் விழும் வாக்குகளில் 50.01 சதவிகிதம் கிடைத்த வேட்பாளருக்கு அந்த மாநிலத்திற்கான 54 அதிபர் தேர்தல் குழு உறுப்பினர்களும் முழுமையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் முறை இருக்கிறது. இதனால் வாக்களித்தவர்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற அதிபருக்கான வேட்பாளர் தோற்றுவிடும் நிலை ஏற்படலாம்.

எடுத்துக்காட்டாக, 2000ம் ஆண்டு அதிபர் தேர்தல் அமெரிக்கா முழுவதிலும் ஜனநாயக வேட்பாளர் அல்கோர் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 5 கோடி 10 லட்சத்துக்கு மேல். குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜோர்ஜ் புஷ் பெற்ற மொத்த வாக்குகள் 5 கோடி 5 லட்சத்துக்கும் குறைவானது. இருப்பினும், தேர்தல் குழு கணக்குப்படி புஷ் 271 பேர்களின் ஆதரவையும், அல்கோர் 266 பேர்களின் ஆதரவையும் பெற்றதால் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. புளோரிடா மாநிலத்தில் அல்கோர் பெற்ற வாக்குகள் 29,12,253; புஷ் பெற்ற வாக்குகள் 29,12,790. இதன் விளைவாக, 543 வாக்குகள் அதிகம் பெற்ற புஷ் புளோரிடா மாநிலத்தின் 26 தேர்தல் குழுவினரின் ஒட்டுமொத்தமான எண்ணிக்கையை கூடுதலாகப் பெற்று அதிபர் ஆகிவிட்டார். இதைக் கவனிக்கும்பொழுது, அமெரிக்கா முழுவதிலும் 5 லட்சத்திற்கு அதிகமான வாக்குளை அல்கோர் பெற்றிருந்தாலும், புளோரிடா மாநிலத்தில் 543 வாக்குகள் குறைந்ததால், அவருக்கு அதிபர் பதவி கிடைக்கவில்லை.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட வினோதமான அதிபர் தேர்தல் குழு மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து பலராலும் கூறப்பட்டு வருகிறது. தற்பொழுது அமெரிக்காவில் பேராதரவு உள்ளவராகத் திகழும் பாரக் ஒபாமா சில மாநிலங்களில் ஏற்படும் தடுமாற்றங்களை மீறி, அவரே அதிகமான ஆதரவுடன், வாக்குகளுடன் அதிபராக வெளிப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

- நன்றி தினமணி -

தமிழன் கண்ட முருகன்


ஏதுக்களால், எடுத்துரைக்க முடியாதவன் இறைவன்

ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்கு சோதித்தாலும் எளிதில் அகப்படாதவன் ஆண்டவன். அவனை இன்ன தன்மையன், இந்நிறத்தவன், இவ்வண்ணத்தன் என்று எழுதிக்காட்ட முடியாது. இத்தகைய இறைவனுக்கு ஒரு நாமமோ ஒரு உருவமோ இல்லை. எனினும் வாழையடி வாழையாக வந்த அடியார் திருக்கூட்டம் அவனுக்குப் பல பெயர் சூட்டியும் பல வடிவம் அமைத்துமே அமைதியும் உள்ள நிறைவும் பெற்றுள்ளனர். இப்பேருண்மையைத் தான் தேன் கலந்த வாசகம் தந்த வான் கலந்த மணிவாசகர்.

"ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ' என்று பாடி இன்பம் காண்கிறார். ஆயிரம் திருநாமம் பாடி அமைதி காண்போம்.

ஒரு உருவமோ ஒரு வடிவமோ ஒரு பெயரோ அற்ற இதே இறைவன் தான் வேண்டுவார் வேண்டுவதை ஈயும் நோக்குடன் அடியவர்கள் வேண்டும் வடிவிற் சூட்டும் பெயரில், காட்சியளித்து அருள்புரிகிறான். இதை "நானாவித உருவாய் நமையாள்வான்', "பல பல வேடம் ஆகும் பரதன் தாரிபாகன்' என்று தேவாரப்பாடல்கள் தெரிவிக்கின்றன.

முருகு உணர்த்தும் பொருள்

எம் ஆண்டவன் பூண்ட வடிவங்களுள் முருகன் வடிவமும் ஒன்றாகும். இந்த வடிவம் தனிச்சிறப்பு வாய்ந்தது. தமிழரின் தனியுடைமையாக அன்று தொட்டு இன்றுவரை நிலவுகிறது.

தாயுமானாரும் வள்ளலாரும் வாழ்த்திய முருகன்

மற்றும் "கந்தரனுபூதியேற்றுக் கந்தரனுபூதி சொற்ற எந்தையருள் நாடி இருக்கும் நாள் எந்நாளோ' என்று அருணகிரி புகழ்பாடிய தாயுமானவரும், திருத்தணிகை முருகன் மீதும் சென்னை கந்தகோட்டக்குமரன் மீதும் உள்ளம் உருகும் பாடல்கள் பாடிய வடலூர் வள்ளலாரும் எம் நினைவில் என்றும் இருக்கத்தக்கவர்கள்.

அறிஞர் வாழ்த்திய முருகன்

அத்துடன் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றி இருபதாம் நூற்றாண்டிலும் வாழ்ந்து மறைந்த "முருகன் அந்தாதி' பாடிய ஞானியார் அடிகளையும் "திருவொற்றி முருகன் மும்மணிக்கோவை' பாடிய மறைமலையடிகளாரையும் "முருகன் அருள் வேட்டல்', "முருகன் அல்லது அழகு' என்ற பாடல் உரை? நூல்களைத் தந்த தமிழ்த்தென்றல் திரு.வி.க.வையும் யாம் மறக்க முடியாது. இவர்கள் போன்றே "அறிவாகிய கோயிலிலே அருளாகிய தாய்மடிமேல் பொறிவேலுடனே வளர்வாய் அடியார் புதுவாழ்வுறவே புவிமீதருள்வாய் முருகா, முருகா, முருகா' என்று பாடிய பாட்டிற்கொரு புலவன் பாரதியையும் "சுப்பிரமணிய அமுது' பாடிய அவன் தாசன் பாரதிதாசனையும் யாம் என்றும் நினைவிற் கொள்ளல் ஏற்புடையது.

ஈழத்துப் புலவர்கள் பாடிய முருகன்

ஈழத்தைப் பொறுத்தவரை தமிழ் வளர்த்த தங்கத்தாத்தா சோமசுந்தரப் புலவர் கதிர்காமக்கந்தன் மீதும், கொழும்புத் துறை யோகர்சுவாமிகள் நல்லூர்க் கந்தன் மீதும், வித்துவான் வேந்தனார். அதே தெய்வம் மீதும் பாடிய பாடல்கள் நம் நினைவலைகளில் மோதத்தான் செய்கின்றன. மற்றும், ஈழத்துத் தமிழர் வாழ்வில் தனக்கெனத் தனியிடம் பெற்றுள்ள கவிஞர் காசி ஆனந்தன் பாடியுள்ள முருகன் அருள் வேண்டும் பாடல்கள் ஈழத்தமிழ் இலக்கிய உலகில் தனியிடம் பெறுபவையாகும்.

நக்கீரரின் முதன்மை இடம்

முருகன் புகழ்பாடியோரின் பெரும் பட்டியல் மேலே தரப்பட்டிருப்பினும் "முருக இலக்கியத்தை' முதலிற் படைத்த தனிச்சிறப்பை "பொய்யற்ற கீரன்' என்று கச்சியப்ப சிவாச்சாரியாரால் புகழ்ந்து பாடப்படும் திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர் பெறுகிறார். ஏனைய பிற தெய்வங்கள் எழுந்தருளியிருக்கும் இடங்களுக்கெல்லாம் தலங்கள், சேத்திரங்கள் என்ற பெயர் பெற முருகன் எழுந்தருளும் இடங்களுக்கு மட்டும் "படைவீடுகள்' என்று பெயர் பெற்றதற்குக் காரணம் முருகன் வீரர்களுக்கெல்லாம் ஒரு பெருவீரனாக விளங்குவதனாலேயாகும். இத்தகைய மாட்சிமை மிக்க நிலையை முதன் முதலில் முருகனுக்கு ஏற்படுத்திய பெருமை நல்லிசைப் புலவர் நக்கீரருக்கே உரியது.

குமரகுருபரர் கண்ட குமரன்

அருணகிரிநாதரையடுத்து முருகன் புகழ் பாடியதனாற் தமிழ் இலக்கிய உலகிற் தனியிடம் பெற்று விளங்குபவர் குமரகுருபர அடிகளாகும். பதினேழாம் நூற்றாண்டிற்குரிய இவர் பல அரிய படைப்புகளைத் தமிழ் இலக்கிய உலகிற்கு உவந்து அளித்துள்ளார். அவற்றுள் முருகன் புகழ்பாடுபவையாகத் "திருச்செந்தூர்க்கந்தர் கலிவெண்பா', "வைத்தீசுவரன் கோவில்', "முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ்' ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

தமிழனாய்ப் பிறந்த முருகன்

சிவன் சவுந்தர பாண்டியனாகவும் உமை தடாதகா தேவியாகவும் முருகன் உக்கிர குமரனாகவும் முறையே மதுரையிற் பிறந்தது தமிழின் மீது அவர்களுக்கு இருந்த எல்லையற்ற காதலே காரணம் என்று பொருள் குறிக்கும் முறையிற்

"தமரநீர்ப் புவனம் முழுதும் ஒருங்கு ஈன்றாள் தடாதகா தேவி என்று ஒரு பேர் தரிக்கவந்ததுவும் தனிமுதல் ஒருநீ சவுந்தர மாறன் ஆனதுவும் குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர் கொண்டதும் தண்தமிழ் மதுரம் கூட்டுண எழுந்தவேட்கையால் எனில் இக் கொழிதமிழ்ப் பெருமையார் அறிவார் பமரம் யாழ்மிற்ற நறவு கொப்பளிக்கும் பனிமலர்க் குழலியர், பளிக்குப் பால்நிலா முன்றில் நூநிலா முத்தின் பந்தரிற் கண்இமை ஆடாது அமரர் நாடியரோடு அம்மனை ஆட ஐயம்நுண் நுசுப்பு அள வல என்று அமரரும் மருளும் தெளிதமிழ்க்கூடல் அடல்அரா அலங்கல் வேணியனே!' என்று மதுரைக் கலம்பகத்தில் வரும் பாடல் குமரகுருபரனின் எல்லையற்ற தமிழ்ப் பற்றிற்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டாய் மிளிர்கிறது.

அருணகிரி கண்ட முருகன்

இறுதியிற் தமிழுக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பை எடுத்து இயம்பி இக்கட்டுரையை முடிப்பது ஏற்புடையது என்று கருதுகிறேன். தமிழுக்கும் முருகனுக்குமுள்ள தொடர்பை முருக அடியார் இயம்பிய கருத்துகள் அனைத்தையும் ஈண்டு எடுத்துப் பெய்தல் இயலாத செயலாகும். எனவே வண்டமிழால் வைதாரையும் வாழ வைப்பவன் முருகன் என்று, உறுதியோடு அறுதியிட்டுக் கூறிய அருணகிரிநாதர் கண்ட அருந்தமிழ் முருகனின் சில இயல்புகளை மட்டும் இங்கு எடுத்தாள விரும்புகிறேன்.

அகத்தியருக்கு அருந்தமிழ் அறிவுறுத்தியவர்

தமிழுக்கு இலக்கணம் தந்து தமிழை வளம்படுத்தியவர் அகத்திய முனிவர் என்பது மரபு வழியாக எம்மவர் ஏற்றுள்ள செய்தியாகும். இம்மரபு வழிச் செய்தி "தமிழ் எனும் அளப்பரும் சலதி தந்தவன்' அகத்தியன் என்று கம்பர் வாழ்த்தும் வாழ்த்துரையால் மேலும் வலிவு பெறுகிறது. இத்தகைய அரும்புலமை வாய்ந்த அகத்தியருக்கும் அருந்தமிழை ஊட்டியவர் முருகன் என்கிறார் அருணகிரிநாதர்.

இத்தகைய அகத்தியர் சிவனோடு ஒப்பவைத்து எண்ணத்தக்க பெருமை மிக்கவர். அவரின் அகம் மகிழவும் இரு செவிகள் குளிரவும் தமிழ் அறிவை முருகன் அவருக்கு ஊட்டினார் என்பதை,

"சிவனைநிகர் பொதியவரை முனிவர் அகம்மகிழ இரு செவிகுளிர இனிய தமிழ் பகர்வோனே' என்று அருணகிரிநாதர் அகம் குழைந்து பாடுகையில் எம் உள்ளம் உறும் உவகைக்கு எல்லைதான் உண்டோ? சிவனுக்குச் செந்தமிழ் செப்பியவர்

வள்ளி மணவாளனாகிய நம் குமரன் குடமுனிவன் செவியில் செந்தமிழ் ஓதியதோடு நிறைவு பெறாத நினையிற் கொன்றை மலர்மாலையணிந்த முழுமுதற் பொருளாகிய சிவபெருமானுக்கே தன்னைப் பெற்ற அப்பனுக்கே கொஞ்சிப்பேசித் தமிழின் தகமையை அறிவித்தார் என்பதைக்,

"கொன்றைச் சடையர்க்கு ஒன்றைத் தெரியக் கொஞ்சித் தமிழைப் பகர்வோனே'

என்று மேலும் ஒருபடி சென்று அருணகிரிநாதர் அறையும் கருத்து எம் நெஞ்சையள்ளும் கருத்தாக ஒளிவிடுகிறது.

இறையனார் அகப்பொருளின் ஆழம் கண்டவர்

அருந்தமிழ் முனி அகத்தியர்க்கும், எம்மையாளும் ஆண்டவனுக்கும் அருந்தமிழின் ஆற்றலை அழகுற எடுத்துக் கூறிய நம் முருகன், பாண்டியன் வளர்த்த பைந்தமிழில் தோன்றிய "இறையனார் அகப்பொருள்' எனும் நூலுக்குப் புலவர் பலர் உரை புகன்ற நிலையிலும் உருத்திர சன்மர் என்ற பெயருடன் தோன்றிய முருகன் இவை அனைத்தையும் தனித்தனியே ஆராய்ந்து இறையானார் அகப்பொருக்கு நக்கீரர் நவின்ற உரையே நல்லுரையென முடிந்த முடியை வழங்கினார் என்பதை

"வழுதியர் தமிழின் ஒருபொருள் அதனை வழிபட மொழியும் முருகேசர்' என்று அருணகிரிநாதர் நமக்கு வழங்கும் செய்தி சிந்தை நிறையோடு ஏற்கத்தக்க சிறப்புமிக்க செய்தியாக ஏற்றம் பெற்று விளங்குகிறது. தமிழில் உயர் சமர்த்தர்

நம் முருகன் அருந்தமிழ்ப் பற்றினால் ஆட்கொள்ளப்பட்டவனாய் விளங்கியதோடு, அருந்தமிழ் ஆய்விலும் உயர்ந்து விளங்குகிறான் என்பதை "அலகில் தமிழால் உயர் சமர்த்தனே போற்றி' என்று வெற்றிப் புன்னகையுடன் அருணகிரிநாதர் பாடுவதில் இருந்து அறிகிறோம்.

புலமையும் ஆய்வும் பெற்று ஞானம் ஊறும் செங்கனிவாயுடை முருகனே! நான் நாள்தோறும் செந்தமிழ் நூல்களை ஓதி உய்ய அருள்புரிய வேண்டும் என்பதை

"செந்தமிழ் நாளும் ஓதி உய்ந்திட ஞானம் ஊறும் செங்கனி வாயில் ஒருசொல் அருள்வாயே'

என்று அருணகிரிநாதர் 15 ஆம் நூற்றாண்டில் விடுத்த வேண்டுகோள் தன் வாழ்வு வளம் பெறமட்டும் விடுத்த வேண்டுகோள் அல்ல, மாறாகத் தமிழராகிய எம் சார்பிலும் விடுத்த வேண்டுகோள் என்பதை உய்த்து உயர்வோமாக.

தமிழை விரும்பும் முருகன்

ஓசையொளியெல்லாம் நிறைந்த உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவனாய் விளங்குபவன் ஆண்டவன். ஆகவே அவனுக்கு உலகமொழிகள் அனைத்தும் தெரியும். அந்த மொழிகளுள் ஒன்றாகிய தமிழும் அவனுக்குத் தெரியும் என்பது உட்பொருள் தெளிவு. இறைவனுக்குத் தமிழ் தெரியும் என்பதற்கு மேலாக, தமிழிலே அவனுக்குத் தனியீடுபாடு ஏன் தீராத காதல் என்று கூடக் கூற முடியும். பழமறைகள் அவனைத்தேடி பின் தொடர்கையில் அவன் தமிழைத்தேடி அலைந்தான். ஆராய்ந்தான் என்று தமிழ் அடியார்கள் அறைகின்றனர். அருள் ஊறும் திருமந்திரம் தந்த திருமூலர் "என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே' என்று தான் மொழிந்துள்ளார். "நம்மை மண்மேற் சொற்றமிழ் பாடுக' என்று தான் அன்று இறைவன் நம்பியாரூரருக்குக் கட்டளையிட்டார் என்று சேக்கிழார் தன் செந்தமிழ்க் காப்பியத்திற் செப்புகிறார். இறைவன் எட்டாம் நூற்றாண்டிற் சுந்தருக்கு இட்ட கட்டளையைக் காலம் கடந்த நிலையில் 20 ஆம் நூற்றாண்டிலாவது நிறைவேற்ற நாம் தயங்கலாமா?

செவ்வேளைச் செந்தமிழில் வழுத்திடுக

நம் அருணகிரி அவர்கள் கூட முருகன் வடிவு தாங்கிய இறைவனை

"அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்தி உனை அன்பொடு துதிக்க அருள்வாயே'

என்று தான், உள்ளம் குழைந்து வேண்டுகிறார். இப்பாடலில் வளர் செந்தமிழால் முருகனை வழுத்த அவர் விரும்பினாரேயன்றி வடமொழியால் வழுத்த விரும்பவில்லை என்பது தெற்றெனத் தெரிகிறது. ஆகவே இந்நிலையிலும் எம் அறிவை அடகு வைத்துக் கடவுளுக்குத் தமிழ் தெரியுமா?' என்ற பொருள் அற்ற வீண் கேள்வியைக் கேட்காது நம் தம்பிரான் விரும்புவது நம் தமிழ் முருகன் விரும்புவது உள்ளம் உருக்கும் தமிழ் வழிபாடே என்பதை உய்த்துணர்ந்து இன்பத் தமிழால் இறைவனைப்பாடி அன்பைப் பெருக்க முயற்சி எடுப்போமாக.

தமிழன் தன்னை உணரவேண்டும்.

தமிழுக்காக உருகும் ஆண்டவனை அருந்தமிழ் முருகனை தமிழில் வழிபட்டு உள்ளம் உருகி உய்யும் வழிகாணத் தெரியாத தமிழன் அரசியல் வானில் அருந்தமிழ் அப்புறப்படுத்துப்பட்டதையிட்டு அங்கலாய்ப்பதில், ஆறாது அழுவதில் என்ன பொருள் உண்டு. தமிழன் தன்னை உணராத போது தமிழனுக்கு வாழ்வில்லை. இது பொய்யா மொழி என்பதை மெய்யடியார்கள் உணர்வார்களாக.

வீரர் வேண்டின் வேலனை வழிபடுக

சுருங்கக் கூறின் வீழ்ச்சியுற்ற தமிழன் எழுச்சியுற விசை ஒடிந்த தேகத்தில் வன்மை பெறக் கீழ்ச்செயல்கள் முற்றாக நீங்கிய நிலையில் மேன்மை எண்ணங்களால் எம் வாழ்வை மேம்படுத்த வெற்றி வேலும், ஆறுபடைவீடும் தாங்கிய முருகவேளுக்கு முடிதாழ்த்தி முத்தமிழால் அவனை வழுத்தி முடிவிலா இன்பம் காண்போமாக.

விலங்கு இழையங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட உலகின் முதலாவது முழுமையான செயற்கை இருதயம்

மனிதனின் சொந்த இருதயத்தையொத்த செயற்பாடுகளைக் கொண்ட செயற்கை இருதயமொன்றை பிரான்ஸ் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இருதய இயக்கம் பாதிக்கப்பட்ட, இருதய மாற்று சிகிச்சையொன்று சாத்தியமற்ற நோயாளிகளுக்கு இந்த செயற்கை இருதயமானது வரப்பிரசாதமாக அமையும் என மேற்படி ஆய்வுக்குத் தலைமை தாங்கிய பிரான்ஸின் பிரபல இருதய சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவ கலாநிதி அலெய்ன் கார்பென்ரியர் தெரிவித்தார்.

கடந்த 15 வருடகால ஆராய்ச்சியின் பயனாக உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கை இருதயம் தொடர்பாக விளக்கமளிக்கும் பத்திரிகையாளர் மாநாடு பாரிஸில் இடம்பெற்றது. ""உயிரியல் இரசாயன இழையங்களைப் பயன்படுத்தி முழுமையான செயற்கை இருதயம் உருவாக்கப்படுவது உலகில் இதுவே முதற்றடவையாகும்'' என மேற்படி இருதயத்தை உருவாக்கியுள்ள உயிரியல் மருத்துவக் கம்பனியான "கார்மட்' இன் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் பற்றிக் கொலம்பியர் தெரிவித்தார்.

""இந்த உயிரியல் இரசாயன இழையங்களானது விலங்குகளின் இழையங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டமையால் அவற்றை மனித உடல் நிராகரிப்பதற்கான வாய்ப்பு குறைவாகவுள்ளது'' என அவர் கூறினார். கார்மட் நிறுவனமானது, பொது மற்றும் இராணுவ பாவனைக்கான விமானங்கள், எறிகணைகள், விண்கலங்கள் என்பனவற்றை உருவாக்கி சந்தைப்படுத்தி வரும் விண்வெளி மற்றும் விமானப் பாதுகாப்பு கம்பனியால் ஸ்தாபிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேலும் 15 புதிய செயற்கை இருதயங்களை உருவாக்க கம்பனி திட்டமிட்டுள்ளது. இந்த இருதயங்களை எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று வருடங்களில் மனிதர்களுக்கு பொருத்தும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1980 களிலிருந்து செயற்கை இருதயங்களை உருவாக்குவதற்கான அநேக ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அவற்றில் அநேகமானவை இருதய மாற்று அறுவைச் சிகிச்சை வரை நோயாளியின் உயிரை தக்க வைப்பதற்கு உபயோகிக்கப்பட்டன.

எனினும், அவை எதுவுமே நீண்டகால அடிப்படையில் மாற்று இருதயமாக இயங்கும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை. அந்த செயற்கை இருதயங்களைப் பொருத்துவதால் ஏற்படும் ஒவ்வாமை எதிர் விளைவுகள் மற்றும் குருதி உறைதல் போன்ற பிரச்சினைகள் காரணமாகவே அவற்றினை நோயாளிக்கு நிரந்தரமாக உபயோகிப்பது சாத்தியமற்று இருந்தது. ஆனால், இப்புதிய மிருக இழையங்களால் உருவாக்கப்பட்ட செயற்கை இருதயமானது குருதி உறையும் அபாயம் குறைந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

அரிய பறவையின டைனோஸரின் எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிப்பு

பிஸாரி என்றழைக்கப்படும் பறவையின டைனோஸரின் எச்சங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி டைனோஸரானது தற்போதைய பறவைகள் தோன்றுவதற்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்தவையாகும். 4 நாடா உருவுடைய வால் பகுதி இறக்கையுடன் பறவையையொத்ததாக காணப்படும் இந்த டைனோஸர்களிடம்,

ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பறக்கும் டைனோஸர்களில் காணப்படுவது போன்ற பறப்பதற்கான எதுவித அம்சங்களும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

"எபிடெஸிப்ரெரிக்ஸ்" என்ற விஞ்ஞானப் பெயருடைய மேற்படி டைனோஸர், தொடர்பான விபரங்கள் "நேச்சர்" விஞ்ஞான இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கண்டுபிடிப்பானது தற்போதைய பறவைகள் தோற்றம் பெற்றதற்கு முன்னரான கூர்ப்பு மாற்றங்கள் குறித்து மதிப்பீடு செய்ய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி ஆய்வானது சீன விஞ்ஞான அக்கடமியைச் சேர்ந்த புசெங் ஷாங் மற்றும் ஸிங்ஸு ஆகிய துறைசார் நிபுணர்கள் தலைமையில் நடத்தப்பட்டது. சீனாவில் லெய் யொனிங் மாகாணத்தில் மேற்படி புதிய பறவையின டைனோஸர் அகழ்ந்தெடுக்கப்பட்ட இடத்திலிருந்து உலகிலேயே மிகப் பழைமையான "ஆர்செயியோப்தெரிக்ஸ்' என்ற பறக்கும் ஆற்றலுள்ள பறவையின டைனோஸரின் எச்சங்கள், ஏற்கனவே அகழ்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்த டைனோஸர் 125 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பிஸாரி எனப் பெயரிடப்பட்டுள்ள பறக்கும் ஆற்றலற்ற இந்த புதிய வகை டைனோஸரானது, மேற்படி "ஆர்செயியோப்தெரிக்ஸ்' டைனோஸர் வாழ்ந்த காலத்தை விட முற்பட்ட காலத்தில் வாழ்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த டைனோஸரின் எச்சங்களில் 152 மில்லியன் முதல் 168 மில்லியன் வரையான ஆண்டுகளுக்கு முற்பட்ட ரேடியோ காபன் கூறுகள் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

சூரியத் தொகுதி எல்லை ஆய்வுக்கான முதலாவது விண்கலம் வெற்றிகரமாக பயணம்


நாசாவின் "ஐ.பி.ஈ.எக்ஸ்' விண்கலமானது பசுபிக் சமுத்திரத்திலுள்ள கவாஜலெயின் அதேரஓல் எனும் இடத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டு நேரப்படி பிற்பகல் 1.47 மணிக்கு வெற்றிகரமாக ஏவப்பட்டது. மேற்படி விண்கலமானது சூரியத் தொகுதியின் எல்லைக்கு அப்பால் என்ன நடைபெறுகிறது என்பது தொடர்பான தரவுகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்பவுள்ளது. இத்தகைய ஆய்வு முயற்சிக்காக விண்கலமொன்று ஏவப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

"ஐ.பி.ஈ.எக்ஸ்' என்பது, நட்சத்திரங்களுக்கிடையிலான எல்லை ஆய்வு சாதனம் என்பதன் சுருக்கப் பெயராகும். நட்சத்திரங்களுக்கிடையிலான எல்லையில் நிலவும் குளிர்மையான வாயுக்கள் தொடர்பில் இந்த சாதனம் ஆய்வு செய்யவுள்ளது. மேற்படி விண்கலமானது பிற்பகல் 1.53 மணியளவில் அதனை ஏவப்பயன்பட்ட பெகாஸஸ் ஏவுகணையிலிருந்து தனிப்படுத்தப்பட்டு, தனது சுய உபகரணமுறைக் கட்டுப்பாட்டில் செயற்பட ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

45 நாள் பரிசோதனைக் காலக் கட்டத்தின் பிற்பாடு, தனது இரு வருட கால விண்வெளி ஆய்வுப் பயணத்தை மேற்படி விண்கலம் ஆரம்பிக்கும் என கிறீன்பெல்ட்டிலுள்ள நாசாவின் கோட்டார்ட் ஸ்பேஸ் பிளைட் நிலையத்தின் முகாமையாளர் கிரெக் பிரெஸியர் தெரிவித்தார். மேற்படி விண்கலமானது சக்தியேற்றம் பெற்ற உயர்வேக அணுத்துணிக்கைகளின் விளைவுகளை அடிப்படையாக வைத்து, சூரியத்தொகுதிக்கு அப்பாலுள்ள நிலைமை தொடர்பான பிரதிமை ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்த பிரதிமையானது நுண்ணிய எண்ணற்ற வண்ணப்புள்ளிகளால் உருவாக்கப்படவுள்ளது.

சூரியனிலிருந்து அனைத்து திசைகளிலும் மணிக்கு ஒரு மில்லியன் மைல் வேகத்தில் வீசிய சூரியப் புயலொன்றையடுத்தே, இந்த சூரியத் தொகுதி எல்லைப் பகுதி உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி சூரியத் தொகுதி எல்லைப் பகுதியிலிருந்து அபாயமிக்க பிரபஞ்சக் கதிர்கள் பூமியை சுற்றியுள்ள விண்வெளியைத் தாக்கக் கூடிய வாய்ப்புள்ளதால் இது தொடர்பான ஆய்வு அவசியம் என நாசா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

""இந்த ஆய்வின் முடிவில் ஆச்சரியமொன்று காத்திருக்கிறது என்பதை எம்மால் அறிய முடிகிறது'' என "ஐ.பி.ஈ,எக்ஸ்' விண்கலத்தின் பிரதான ஆய்வாளர் டேவிட் மக்கொமஸ் தெரிவித்தார்.

இந்தியாவின் நிலவு நோக்கிய கனவு


இந்தியா நிலவை ஆராய்வதற்காக 'சந்திராயன்' என்று பெயரிடப்பட்ட விண்கலத்தை அக்டோபர் 22 ஆம் தேதி அனுப்ப உள்ளது. இந்த விண்கலத்தில் ஆறு இந்திய உபகரணங்களும், அமெரிக்க உபகரணங்கள் இரண்டு உட்பட, ஆறு வெளிநாட்டு உபகரணங்களும் எடுத்துச் செல்லப்படுகின்றன.

ஆனால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவு, உயர் தொழில்நுட்பத் துறைகளில் சிக்கல் நிறைந்ததாக உள்ளது. சில விடயங்களில் இரு நாடுகளும் ஒத்துழைத்தாலும், வேறு சில இடங்களில் பிரச்சனைகள் உள்ளன.

இந்திய விண்வெளி ஆய்வு நிலையத்தைச் சேர்ந்த பல அமைப்புகளை தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் அமெரிக்கா வைத்துள்ளது. இந்த முரண்பட்ட உறவுகள் குறித்தும் ஆசியாவில் சீனாவும், ஜப்பானும் விண்வெளித் துறையில் கண்டு வரும் வெற்றிகள் காரணமாக இந்தியா நிலவுக்கு விண்கலனை செலுத்துகிறதா என்பது குறித்தும் இன்றைய பகுதி ஆராய்கிறது.

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது செவ்வாயில்...

அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையமானது செவ்வாய்க் கிரகத்திற்கு மிகப் பெரிய விண்கல உபகரணமொன்றை அனுப்பத் உத்தேசித்துள்ளது. 1.8 பில்லியன் செலவான இந்த பாரிய ஆராய்ச்சி கூடத்துடன் சிறிய வட்டவடிவ ரோபோக்களையும் அக்கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொன்றும் 11 இறாத்தல் எடையுடைய இந்த பந்து வடிவ ரொபோக்களானது, சுமார் 62 மைல்களுக்கு உருண்டு சென்று பல்வேறு கோணங்களிலும் செவ்வாய்க்கிரகத்தைப் படம் பிடிக்கவுள்ளதுடன் செவ்வாயின் மண் மாதிரிகளையும் சேகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி ரோபோவின் மேற்பரப்பில் உள்ள சூரிய சக்திப் பிறப்பாக்கிகள் மூலம் அதன் இயக்கத்திற்கு தேவையான சக்தி பெறப்படவுள்ளது. இந்த பந்து வடிவமான ரேபோக்களானது சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரோபோக்கள் போலன்றி செவ்வாயின் மேற்பரப்பில் தங்கு தடையின்றி அசைந்து திரிவதுடன் தூசு துணிக்கைகளின் பாதிப்புகளுக்கும் இலகுவில் உள்ளம்காத தன்மையைக் கொண்டிருக்கும் என நாஸா விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிறை குறைந்த கதிர்ப்புகளால் தாக்கப்படாத கணனி செயற்பாட்டைக் கொண்ட இந்த ரோபோக்களில் நான்கை 6 மில்லியன் அமெரிக்க டொலரிலும் குறைந்த செலவில் உருவாக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

9000 வருடங்களுக்கு முற்பட்ட மனித எச்சங்கள்

இஸ்ரேலிய கடற்கரைக்கு அப்பால் மீட்கப்பட்ட 9000 வருடங்கள் பழைமையான தாயொருவரதும் அவரது குழந்தையினதும் எச்சங்களிலிருந்து, அவர்களுக்கு காசநோய் பாதிப்பு இருந்தமைக்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஹபியா எனும் அண்மையிலிருந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நீரில் மூழ்கிய பண்டைய நியோலிதிக் கிராமமான அலிட்யாமிலிருந்தே இந்த தாயினதும் குழந்தையினதும் எலும்பு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

500,000 வருடங்களுக்கு முன்பே காசநோய் இருந்ததாக வேறு சில ஆராய்ச்சியாளர்கள் உரிமை கோரி வருகின்ற போதும், அது தொடர்பான உறுதியான ஆதாரம் மேற்படி இஸ்ரேலிய எச்சங்களில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறது


இணையத்தளங்களை உபயோகிப்பதானது நடுத்தர வயதுடையவர்களுக்கும் வயதானவர்களுக்கும் மூளையின் திறன் பலமடைய உதவுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தீர்மானமெடுத்தல், குழப்பநிலைகளுக்கான காரணத்தை பகுத்தாராய்தல் என்பனவற்றை கட்டுப்படுத்தும் மூளையின் மையங்கள், இணையத்தள தேடுதலின்போது ஒழுங்கமைக்கப்படுவதாக மேற்படி ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், வயதாதலுடன் தொடர்புடைய மனோவியல் மாற்றங்களை தடுக்கவும் இணையத்தள தேடுதல் உதவுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மேற்படி ஆய்வின் முடிவுகள் அமெரிக்க மனோவியல் மருத்துவ வெளியீட்டில் இடம்பெற்றுள்ளன.

மூளை வயதாவதன் காரணமாக அதன் கலங்களின் செயற்பாடுகளிலான குறைபாடு உள்ளடங்கலான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

குறுக்கெழுத்து புதிர்கள் போன்றவற்றின் மூலம் மூளையின் செயற்பாட்டு திறனை ஊக்குவிக்க முடியும் என முன்னர் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு இணையத்தள பயன்பாடும் கணிசமான அளவில் உதவுவது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஆய்வுக்கு தலைமை தாங்கிய பேராசிரியர் காரி ஸ்மோல் விபரிக்கையில், ""இணையத்தள தேடலானது மூளையின் சிக்கல்மிகு செயற்பாடுகளுடன் தொடர்புடையதாக உள்ளது. இது மூளையின் தொழிற்பாட்டை விருத்தி செய்கிறது'' என்று கூறினார்

விண்வெளிக்கு மின்தூக்கியில் பயணிக்கும் திட்டம் 2030 களுக்குள் பூர்த்தி செய்யப்படும்


பூமியிலுள்ளவர்கள் விண்வெளிக்கு சுலபமாக செல்வதற்கு உதவும் வகையில் மின் தூக்கியை வடிவமைப்பதில் 100 க்கு மேற்பட்ட பொறியியலாளர்களைக் கொண்ட ஜப்பானிய குழுவொன்று மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதியுயர் விஞ்ஞான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்படி மின்தூக்கியை அமைப்பது தொடர்பான திட்டமானது எதிர்வரும் நவம்பர் மாதம் ஜப்பானில் நடைபெறவுள்ள மாநாட்டில் ஆராயப்படவுள்ளது.

பூமி மேற்பரப்பில் அடித்தளத்தைக் கொண்டு நிர்மாணிக்கப்படவுள்ள இந்த மின்தூக்கி, விண்வெளியில் பல்லாயிரக்கணக்கான கிலோமீற்றர் தூரம் வரை ஊடுருவிச் செல்லும் என தெரிவிக்கப்படுகிறது. மேற்படி மின் தூக்கியுடன் இணைத்து அமைக்கப்படும் பாரந்தாங்கியானது அதனது சமநிலையைப் பேணும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த மின்தூக்கி மூலம் விண்வெளியிலுள்ள செய்மதிகளை இலகுவாக சென்றடைய முடியும் என தெரிவிக்கும் பொறியியல் நிபுணர்கள், மின் தூக்கியின் செயற்பாட்டுக்கு தேவையான சக்தியை, அணுசக்தி கழிவுகளிலிருந்து பெறுவது தொடர்பில் யோசனையை முன்வைத்துள்ளனர்.

மேலும் இந்த மின் தூக்கிகளில் சூரிய சக்திப் பிறப்பாக்கிகளை ஸ்தாபித்து அதன் மூலம் சக்தியை பிறப்பிக்கும் பிறிதொரு திட்டமும் பொறியியலாளர்களால் முன் வைக்கப்பட்டுள்ளது. மறைந்த பிரபல விஞ்ஞான எழுத்தாளர் ஆதர் சி கிளார்க்கால் 1979 ஆம் ஆண்டு எழுதப்பட்ட "த பவுண்டெய்ன்ஸ் ஒப் பரடைஸ்' என்ற நாவலில் இந்த விண்வெளிக்கான மின்தூக்கி தொடர்பான திட்டமொன்று விபரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேசமயம் அமெரிக்காவில் லிப்ட்போர்ட் குழுமத்தைச் சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகளும் விண்வெளிக்கான மின் தூக்கியை வடிவமைக்கும் முயற்சியில் களம் இறங்கியுள்ளனர். விண்வெளிக்கான மின்தூக்கியை வெற்றிகரமாக வடிவமைப்பதற்கு ஊக்குவிக்கும் முகமாக, அமெரிக்க நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் "4 மில்லியன் டொலர் விண்வெளி மின்தூக்கி சவால்' போட்டியை முன்வைத்துள்ளது.

இந்நிலையில் மேற்படி விண்வெளிக்கான மின் தூக்கியை வடிவமைப்பதில் ஈடுபட்டுள்ள "ஜப்பான் ஸ்பேஸ் எலவேட்டர்' சங்கத்தின் பேச்சாளரான அகிரா துஸுசிடா விபரிக்கையில், தமது நிறுவனமான அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் "ஸ்பேஸ்வார்ட் பவுண்டேஷன்' மற்றும் லக்ஸம்பேர்க்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ள ஐரோப்பிய நிறுவனம் என்பவற்றுடன் இணைந்து இந்த அரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த விண்வெளி மின் தூக்கியை மேலெடுத்துச் செல்வதற்கு காபன் நுண்குழாய்கள் பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்த அவர், விண்வெளிக்கான மின்தூக்கி இலட்சியமானது 2020 களிலோ அல்லது 2030 களிலோ உரிய இலக்கை எட்டி விடும் என்று கூறினார். மேற்கு அவுஸ்திரேலியாவிலுள்ள கலரஓபாகொஸ் தீவுகளே இந்த மின் தூக்கிகளுக்கான தளமாக அமையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

பி‌க் பே‌ங் சோதனை‌யி‌ல் ‌சி‌க்க‌ல்!

பிரப‌ஞ்ச‌‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்கு‌ம் முய‌ற்‌சி‌யாக ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் உருவா‌க்‌கியு‌ள்ள 'பி‌ங் பே‌ங்' சோதனை இய‌ந்‌திர‌த்‌தி‌ல் பெருமள‌வி‌ல் ஹ‌ீ‌லிய‌ம் வாயு‌க் க‌‌சிவு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. இதனா‌ல் சோதனை‌யி‌ன் அடு‌த்த க‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ச் செ‌ல்வ‌தி‌ல் ‌சி‌க்க‌ல் உருவா‌கியு‌‌ள்ளது.

சுமா‌ர் 14 ‌பி‌ல்‌லிய‌ன் ஆ‌ண்டுகளு‌க்கு மு‌ன்னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட ‌மிக‌ப்பெ‌ரிய அணு‌ ச‌க்‌தி மோத‌லி‌ல்தா‌‌ன் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌‌றியது எ‌ன்ற ‌பி‌க் பே‌ங் (பெரு வெடி‌ப்பு) கோ‌ட்பாடே இ‌ன்றளவு‌ம் ந‌ம்ப‌ப்ப‌ட்டு வரு‌கிறது. பூ‌மி உருவா‌கி உ‌யி‌ர்க‌ள் தோ‌ன்றவு‌ம் இதுவே காரண‌ம் எ‌ன்று கருத‌ப்படு‌கிறது.

இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றியபோது உருவான அணு ச‌க்‌தி மோதலை த‌ற்போது உருவா‌க்‌கி, அத‌ன்மூல‌ம் ‌பிரப‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌‌த்தை‌க் க‌ண்ட‌றிய 36 ‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட நாடுகளை‌ச் சே‌ர்‌ந்த 5,000க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட ‌வி‌ஞ்ஞா‌னிக‌ளு‌ம் பொ‌றியாள‌ர்களு‌ம் முய‌ற்‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர்.

இத‌ற்காக அவ‌ர்க‌ள் ‌பிரா‌ன்‌ஸ் - சு‌வி‌ட்ச‌ர்லா‌ந்து எ‌ல்லை‌யி‌ல் பூ‌மி‌க்கு அடி‌யி‌ல் 100 மீ ஆழ‌த்‌தி‌ல் சுமா‌ர் 27 கிலோ ‌மீ‌ட்ட‌ர் சு‌ற்றள‌வி‌ல் 'பி‌ங் பே‌ங்' சோதனை‌ மை‌ய‌த்தை அமை‌த்து‌ள்ளன‌ர்.

இ‌ங்கு அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள வ‌ட்ட வடிவ‌க் குழா‌யி‌ன் இரு புற‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து‌ம் புரோ‌ட்டா‌ன்களை செலு‌‌த்‌தி நேரு‌க்கு நே‌ர் மோத‌வி‌ட்டு, அ‌‌ப்போது உருவாகு‌ம் மா‌ற்ற‌ங்களை ஆ‌யிர‌க்கண‌க்கான கரு‌விக‌ள் மூல‌‌ம் ஆ‌ய்வு செ‌ய்து ‌பிரப‌‌ஞ்ச‌ம் தோ‌ன்‌றிய ரக‌சிய‌த்தை‌க் க‌ண்டு‌பிடி‌க்க‌ உ‌‌ள்ளன‌ர்.

திரவ ஹ‌ீ‌லிய‌ம் வாயு‌க் க‌சிவு!

புரோ‌ட்டா‌ன்க‌ள் மோது‌ம்போது ஏ‌‌ற்படு‌ம் டி‌ரி‌ல்‌லிய‌ன் டி‌கி‌ரி‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட வெ‌ப்ப‌த்தை‌க் க‌ட்டு‌ப்படு‌த்த ஏராளமான பாதுகா‌ப்பு ஏ‌ற்பாடுக‌ள் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன. இவை மைன‌ஸ் 271.3 டி‌கி‌‌ரி கு‌ளி‌ரி‌ல் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன.

இ‌த்தகைய பாதுகா‌ப்பு ஏ‌ற்பாடுக‌ளி‌ல்தா‌ன் இ‌‌ந்‌திய நேர‌ப்படி நே‌ற்று ம‌திய‌ம் 2.57 ம‌ணி‌க்கு கோளாறு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. கு‌ளிரூ‌ட்டு‌ம் கரு‌வி ஒ‌‌ன்‌றி‌ல் இரு‌ந்து ஒரு ட‌ன்‌னி‌ற்கு‌‌ம் மே‌ற்ப‌ட்ட ‌திரவ ‌நிலை‌யிலான ஹ‌ீ‌லிய‌ம் வாயு க‌சி‌ந்து‌ள்ளது.

இதையடு‌த்து ‌தீ ‌பிடி‌க்கு‌ம் அபாய‌ம் ஏ‌ற்ப‌ட்டதா‌ல் ‌தீயணை‌ப்பு‌க் கரு‌விக‌ள் வரவழை‌க்க‌ப்ப‌ட்டன. ‌பி‌ங் பே‌ங் சோதனை முய‌ற்‌சிக‌ள் அனை‌த்து‌ம் உடனடியாக ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டன.

கோளாறு ஏ‌ற்‌ப‌ட்டு‌ள்ள கரு‌விகளை பொ‌றியாள‌ர்க‌ள் ஆ‌ய்வு செ‌ய்து வரு‌கி‌ன்றன‌ர். கு‌றி‌ப்‌பி‌ட்ட கரு‌வியை சாதாரண வெ‌ப்ப ‌நிலை‌க்கு‌க் கொ‌ண்டுவ‌ந்த ‌பிறகே கோளாறை‌ச் ச‌‌ரிசெ‌ய்ய முடியு‌ம் எ‌‌ன்று‌ம் அத‌‌ற்கு சுமா‌ர் 2 மாத‌ங்க‌ள் ஆகலா‌ம் எ‌ன்று‌ம் ‌வி‌ஞ்ஞா‌னிக‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

மு‌ன்னதாக, பி‌ங் பே‌ங் சோதனை‌யி‌‌ன் முத‌ல்க‌ட்ட‌ம் வெ‌ற்‌றி‌பெ‌ற்றதாக ‌வி‌ஞ்ஞா‌‌னிக‌ள் அ‌றி‌வி‌த்து‌ள்ளது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது. இ‌தி‌ல் கடிகார‌ச் சு‌ற்று‌ப் பாதை‌யி‌ல் புரோ‌ட்டா‌ன்க‌ள் செலு‌த்த‌ப்ப‌ட்டு ஆ‌ய்வு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

செவ்வாய் கிரகத்தில் பனிப்பொழிவு

செவ்வாய்க் கிரகத்தில் பனிப்பொழிவு இடம்பெற்றமைக்கான சான்றுகளை அக்கிரகத்தில் நிலை கொண்டுள்ள பீனிக்ஸ் விண்கலம் பூமிக்கு அனுப்பி வைத்துள்ளது. மேற்படி விண்கலத்திலுள்ள தன்னியக்க இயந்திரமானது செவ்வாய்க்கிரகத்தின் வளிமண்டலத்தினூடாக நீர் மூலக்கூறுகளை கொண்ட பாரிய பனிப்பளிங்குருக்கள் விழுவதை எடுத்துக்காட்டும் தரவுகளை அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தன்னியக்க உபகரணத்தின் லேசர் கதிரலைகள் மூலமே செவ்வாய்க் கிரக வளிமண்டலத்தின் கூறுகளை ஆராய்ந்து மேற்படி தரவுகள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பனிப் பளிங்குருக்களானது செவ்வாயின் மேற்பரப்பை அணுகுவதற்கு முன்பு, நீராவி நிலையை அடைவது கண்டறியப்பட்டுள்ளது.

"இந்த பனி செவ்வாயின் மேற்பரப்பை உண்மையில் எவ்வாறு அடைகிறது என்பதை எதிர்வரும் மாதம்மேலும் உன்னிப்பாக அவதானிக்கத் திட்டமிட்டுள்ளோம்" என பீனிக்ஸ் விண்கலத்தின் முன்னணி விஞ்ஞானியான ரொரன்டோ யோர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜிம் வைட்வே கூறினார்.

"இது செவ்வாய்க் கிரகத்தில் மேற்பரப்பில் நீர் ஆவியாகி ஒடுங்கும் ஐதரசன் வட்டசெயற்பாடு இடம்பெறுவது தொடர்பில் முக்கிய சான்றாக இது உள்ளது" என அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த மே 25 ஆம் திகதி செவ்வாய்க்கிரகத்தின் வட பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்கிய பீனிக்ஸ் விண்கலமானது, செவ்வாய்க்கிரகத்தில் பூகர்ப்பவியல் மற்றும் சுற்றுச் சூழலை ஆராயும் முகமாக பலதரப்பட்ட உபகரணங்களை உள்ளடக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அவ் விண்கலத்திலுள்ள காலநிலை அவதான நிலையம், செவ்வாய்க்கிரகத்தின் வெப்பநிலை, அமுக்கம் வளிமண்டலத்தில் இடம்பெறும் மாற்றங்கள் என்பனவற்றை தொடர்ச்சியாக ஆராய்ந்து வருகிறது.

சைக்கிள் ஓட்டும் ரோபோ

நம்மால் ஒரு காலில் கொஞ்ச நேரம் நிற்பதே கடினம். ஆனால், ஒரு சக்கரம் மட்டுமே உள்ள கைப்பிடி கூட இல்லாத சைக்கிளை ஓட்டி சாதனை செய்கிறது ‘முரட்டா&சீகோ&சான்’ என்ற ரோபோ (இடது).

முரட்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இது, தானாகவே பேலன்ஸ் செய்து கொள்வதுடன் சுற்றுப்புறங்களை உணர்ந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் புறநகர்பகுதியான சிபாவில் ‘சீடெக்’ வருடாந்திர எலக்ட்ரானிக் பொருட்கள் கண்காட்சி தொடங்கி உள்ளது.

இதில்தான் இந்த ரோபோக்கள் இடம்பெற்றுள்ளன.

விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு மாபெரும் ஆபத்து


அண்டவெளியில் சஞ்சரிக்கும் விண்கற்களால் எதிர்கால பூலோகவாசிகளுக்கு பாரிய அபாயம் காத்திருப்பதாகவும், எனவே முழு உலகமும் ஒன்றிணைந்து அதற்கு ஒரு தீர்வைக் காண வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் விசேட கூட்டத்தின்போதே விஞ்ஞானிகள் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பூமிக்கு அண்மையிலான வஸ்துகளின் விண்வெளி வெடிப்புகள் சபையைச் சேர்ந்த இவ் விஞ்ஞானிகள், இரு வருட தீவிர ஆராய்ச்சியையடுத்தே மேற்படி அறிக்கையை சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.""பூமியை விண்கற்கள் அணுகும் பட்சத்தில் அது தொடர்பான அபாயத்தை எதிர்கொள்ள சர்வதேச சமூகம் தயாராக வேண்டும். எனவே நாம் இது சம்பந்தமான முயற்சிகளில் ஒரு நிறுவன கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவது அவசியம்'' என மேற்படி சபை உறுப்பினரும் "அப்பலோ 9' விண்கல விண்வெளிவீரருமான ருஸ்தி ஸெவீக்கார்ட் கூறினார்.

மேற்படி அனர்த்தத்தை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் சர்வர·தச ரீதியான நிறுவனக் கட்டமைப்பு உருவாக்கம் தொடர்பில் போதிய அக்கறை இதுவரை செலுத்தப்படவில்லை என அவர் கவலை தெரிவித்தார். எதிர்வரும் ஆண்டுகளில் முன்னேற்றகரமான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பூமிக்கு அச்சுறுத்தலாக விளங்கக் கூடிய மேலும் பல விண்கற்கள் கண்டறியப்படலாம் என அவர் குறிப்பிட்டார்.

5000 வருடங்களுக்கு முன் ஒரு பஸ் அளவிலான விண்கல்லொன்று அமெரிக்க அரிஸோனா மாநிலத்தில் விழுந்தமைக்கான சான்றுகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின் கடந்த சில வருடங்களில் கனடாவிலும் பெருவிலும் சிறிய அளவான விண்கற்கள் விழுந்துள்ளன. அத்துடன் ஒரு நூற்றாண்டுக்கு முன் சிபேரியாவின் காட்டுப் பகுதியில் விழுந்த விண்கல் மூலம் வெளிப்பட்ட சக்தியானது, ஹிரோசிமாவில் அணுகுண்டு போடப்பட்டபோது வெளிப்படுத்தப்பட்ட சக்தியிலும் 1000 மடங்கு அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

65 மில்லியன் வருடங்களுக்கு முன் பூமியில் விழுந்த பாரிய விண்கல்லால், டைனோஸர்களும் உலகின் ஏனைய 70 சதவீதமான உயிரினங்களும் அழிவடைந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்

உலகின் மிகப் பழைமையான பாறை கனடாவில் கண்டுபிடிப்பு

கனடாவின் ஹட்ஸன் பே கடற்கரையில் 4.28 பில்லியன் ஆண்டுகள் பழைமையான உலகின் மிகவும் ஆதிகாலப் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.ஆதிகால உயிரினங்கள் தொடர்பான சான்றுகளையும் இப்பாறை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

"இப்பாறைகளில் மிகவும் விசேடத்துவம் பொருந்திய இரசாயன கையெழுத்தொன்று காணப்பட்டது.இது மிக பழைமையானதாகும். இத்தகைய பழைய கையெழுத்து உலகில் வேறெங்கும் கண்டுபிடிக்கப்படவில்லை." என மேற்படி கண்டுபிடிப்பை மேற்கொண்ட ஆய்வுக் குழுவில் பங்கேற்ற மொன்றியல் மக்கில் பல்கலைக்கழகத்தின் பூகர்ப்பவியல் பேராசிரியர் டொன் பிரான்சிஸ் தெரிவித்தார்.

இப்பாறையிலுள்ள இரசாயன சான்றுகளானது, உலகம் எவ்வாறு தோன்றியது, உலகில் உயிரினங்கள் எவ்வாறு தோற்றம் பெற்றன என்பன தொடர்பான பல மர்மங்களுக்கு தீர்வுகாண உதவக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

478 காரட் வைரம்

தென் ஆப்பிரிக்காவை போலவே இங்கு ஏராள மான தங்கம், வைர சுரங் கங்கள் உள்ளன. இங்குள்ள வெட்செங் பகுதியில் உள்ள சுரங்கத்தில் அபூர்வ வைரக் கல் வெட்டி எடுத்திருக் கிறார்கள். உலகிலேயே பெரிய வைர கற்களில் இதுவும் ஒன்று.இந்த வைரக்கல் 478 காரட். இன்னும் இந்த வைரக்கல் பட்டை தீட்டப்படவில்லை.

இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 105 காரட் கோகினூர் வைரத்தை விட இது மிகவும் பெரியது.ஆப்பரினாஸ் 3106 காரட் வைரக்கல் கடந்த 1905 வெட்டி எடுக்கப்பட்டது. மிகப் பெரிய வைரக்கற்களில் அது முதல் இடத்தை பிடித்தது. இப்போது லிசோ தோவில் வெட்டி எடுக்கப் பட்ட வைக்கல் இந்த வரிசையில் 20-வது இடத்தை பிடித்துள்ளது.

கோழி முட்டைக்குள் பாம்பு குட்டி

ஆம்லெட் போடுவதற்காக கோழிமுட்டையை உடைத்தவர் அதற்குள் பாம்புக்குட்டி இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பீகார் மாநிலம் சமஸ்திபூருக்கு அருகே உள்ளது சம்து கிராமம். இந்த கிராமத்தைச்சேர்ந்த பகதூர் ராம் என்பவர் 2 கோழிகளை வளர்த்து வருகிறார். அந்த கோழிகள் போடும் முட்டைகளை அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வது வழக்கம்.

நேற்று பகதூர்ராமின் நண்பர் கிஷோர் குமார் என்பவர் ஆம்லெட் சாப்பிட ஆசைப்பட்டு பகதூரிடம் இருந்து ஒரு முட்டையை விலைக்கு வாங்கி வந்தார்.

அடுப்பில் தோசைக்கல்லை போட்டு கல் சூடானதும் முட்டையை உடைத்து தோசைக்கல்லில் ஊற்றினார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் தூக்கி வாரிப்போட்டது. முட்டையில் இருந்து வெள்ளைக்கருவும் மஞ்சள் கருவும் விழுவதற்கு பதிலாக 5 அங்குல நீளமுள்ள குட்டி பாம்பு ஒன்று விழுந்ததுதான் அவருடைய அதிர்ச்சிக்கு காரணம்.

பாம்புக்குட்டியைப் பார்த்து வெலவெலத்துப்போன அவர் உடனே ஓடிச்சென்று நண்பர் பகதூர்ராமிடம் நடந்த சம்பவம் பற்றி கூறினார். முதலில் இதை நம்ப மறுத்த பகதூர் அந்த குறிப்பிட்ட கோழி போட்ட வேறு ஒரு முட்டையை உடைத்து பார்த்தார். அந்த முட்டையிலும் சுமார் 2-முதல் 3- அங்குள நீளமுள்ள பாம்பு குட்டி இருந்தது.

இந்த தகவல் காட்டுத்தீ போல கிராமம் முழுவதும் பரவியது. அடுத்த அரை அணி நேரத்தில் கிராமமே பகதூர் வீட்டு முன்பு திரண்டது. அதிசய கோழியையும் அது போட்ட பாம்பு முட்டைகளையும் அவர்கள் ஆச்சரியத்தோடு பார்த்துச்சென்றனர். இது எப்படி சாத்தியம் என்று தங்களுக்குள் விவாதித்துக்கொண்டனர்.

இதற்கிடையே கால்நடை ஆஸ்பத்திரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கால்நடை டாக்டர் அஜய்குமார் தனது குழுவுடன் விரைந்து வந்து அந்த கோழியையும் அது போட்ட மற்ற முட்டைகளையும் பாம்புக்குட்டியையும் ஆய்வுக்காக எடுத்துச்சென்றார்.

அவர் கூறும்போது, "என்னால் இதை நம்பவே முடியவில்லை, அதிசயமாக இருக்கிறது'' என்று தெரிவித்தார்.கோழி முட்டைக்குள் பாம்புக்குட்டி இருந்ததைத்தொடர்ந்து அந்த கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர். கடைகளில் யாருமே முட்டை வாங்க வில்லை. இதனால் முட்டை விற்பனை முற்றிலும் நின்று விட்டதாக கடைக்காரர்கள் கூறினார்கள்.