ஒலிம்பிக்கிலும் தேமதுர தமிழிசை

உலகத்தையே பிடித்து உலுக்கிக் கொண்டிருக்கிறது ஒலிம்பிக் ஜுரம். தங்கம்,வெள்ளி, வெண்கலம் என்று பதக்கங்களை குவிக்க போராடிக் கொண்டிருக்கிறார்கள் வீரர்கள். இந்தியா பதக்கம் வெல்கிறதோ, இல்லையோ! அதையும் தாண்டி பெருமைப்பட்டுக் கொள்ள ஒரு விஷயத்தை செய்திருக்கிறது. லேகா-சொனாட்டோன் என்ற இசை நிறுவனம், இந்திய ஜெர்மனி தயாரிப்பாக பல்வேறு இசை டிராக்குகளை உருவாக்கி உலக சந்தையில் விற்று வருகின்றன.

ஹாலிவுட் படங்களிலும், உலகெங்கும் பரவியிருக்கும் தொலைக்காட்சி நிலையங்களிலும் இந்த இசைத் தொகுப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ் படங்களிலும் இந்த இசை டிராக்குகளை பின்னணி இசையாக பயன்படுத்த பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் முன் வந்துள்ள நிலையில், ஒலிம்பிக்கில் தங்கள் இசை பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கிறார் லேகா-சொனாட்டோன் நிறுவனத்தின் இந்திய ஒருங்கிணைப்பாளர் லேகா ரத்னகுமார்.

இவர் தயாரித்த ஏசியா டுடே என்ற இசை குறுந்தகட்டிலிருந்து ஒலிம்பிக்கிற்கு தேவையான இசை டிராக்குகளை பயன்படுத்தவிருக்கிறார்களாம். விஷயத்தை கேள்விப்பட்டதிலிருந்து முன்னணி இசையமைப்பாளர்களும் 'ஒரு எட்டு போய் வருவோமே' என்று லேகா-சொனாட்டோனின் சென்னை கிளைக்கு விசிட் அடிக்கிறார்கள். பக்கத்தில் இருக்கிறது வள்ளுவர் கோட்டம். ஈதல் 'இசை'பட வாழ்தல் என்கிறார் வள்ளுவர் மாதிரியே, லேகா ரத்னகுமாரும்!

No comments: