ஸ்ரேசன் மாஸ்டராக........பூனை


ஜப்பானில் ரயில் நிலையமொன்றில் "ஸ்ரேசன் மாஸ்டராக' பூனை ஒன்று செயற்படுகின்றமையால் அந்த ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

ஜப்பானின் குஷிகவா என்ற இடத்தில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகள் வரவு குறைந்து விட்டது. ரயிலில் ஏறுவோரும் இல்லை; இறங்குவோரும் இல்லை. அதனால், வருமானம் இல்லாத ரயில் நிலையம் என்று அறிவிக்கப்பட்டு, ஸ்ரேசன் மாஸ்டரை வேறு ரயில் நிலையத்துக்கு மாற்றிவிட்டது நிர்வாகம்.

இந்த ரயில் நிலையத்துக்கு ஸ்ரேசன் மாஸ்டரே இல்லை. அப்போது தான் பூனையை வைத்து பரபரப்பை ஏற்படுத்த ரயில்வே ஊழியர்கள் முடிவு செய்தனர்.

ரயில் நிலையத்தில் சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பூனை குட்டி போட்டது. அவற்றில் ஒரு குட்டி மட்டும், ரயில் நிலைய பிளாட் பாரத்தில் வளர்ந்தது. அதன் பெயர் டோமா. மற்ற குட்டிகள் வெளியேறி விட்ட நிலையில், ரயில் நிலையத்தை ஒட்டி மளிகைக்கடை வைத்துள்ள ஒருவர் இந்த பூனைக்கு தேவையான உணவு அளித்தார்.

எப்போதும் பிளாட் பாரத்தில் அங்கும் இங்கும் திரிந்து கொண்டிருக்கும், படுத்து உறங்குவதும் அங்கு தான். ஸ்ரேசன் மாஸ்டர் இல்லாததால், இந்த பூனைக்கு ஸ்ரேசன் மாஸ்டர் தொப்பியை அணிவித்து சந்தோஷப்பட்டனர். தொப்பியை அணிந்து பிளாட் பாரத்தில் இந்த பூனை வலம் வரும்.

இந்த தகவல் பத்திரிகைகளில் வெளிவந்ததை அடுத்து, ரயில் நிலையத்துக்கு வந்து பலரும் பார்த்து ஆச்சரிப்பட்டனர். ரயிலில் போவோரும் இதை பார்த்து வியந்தனர். ரயிலை விட்டு இறங்கி இந்த பூனையோடு கொஞ்சி விட்டு செல்லும் பயணிகள் அதிகரித்தனர். நாளடைவில் இந்த ஸ்ரேசனில் இறங்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஜனவரி மாதம் ரயில் நிலைய டிக்கெட் வசூல் 17 சதவீதம் அதிகரித்தது. இது குறித்து ரயில்வே ஊழியர்கள் கூறுகையில், ""எங்களுக்கு சம்பளம் வழங்குவதே இந்த பூனை தான். பூனையை பார்க்க வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது' என்று தெரிவித்தனர்.

No comments: