வங்கியின் குளறுபடியால் கோடீஸ்வரனான சிறுவன்

பிரிட்டனைச் சேர்ந்த சிறுவனின் வங்கிக் கணக்கில் திடீரென்று கோடிக்கணக்கான ரூபா சேர்ந்ததையடுத்து அச்சிறுவன் திடீர் கோடீஸ்வரனாகி உள்ளான். சிறுவனின் கணக்கில் இந்தப் பணம் எப்படிச் சேர்க்கப்பட்டது என்பதற்கான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்ட வங்கி உத்தரவிட்டுள்ளது.

பிரிட்டனில் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலகாமல் தொடர்ந்து கல்வியைத் தொடருவதற்காக குறிப்பிட்ட தொகைப் பணம் அரசின் கல்வி நிதியாக வழங்கப்படுகிறது.

லண்டனிலுள்ள தோமஸ் டெல்போர்ட் பாடசாலையில் படித்துவந்த வில்லியம் போவன் (வயது 16) என்ற மாணவன் தனது வங்கிக் கணக்கில் வாராந்த கல்வி நிதி சேர்க்கப்பட்டு இருக்கின்றதா என்று பணம் மீளப்பெறும் (ஏ.டி.எம்) இயந்திரத்தில் சரிபார்த்தான்.

அப்போது, அவனது வங்கிக் கணக்கில் 46 கோடி ரூபா சேர்க்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுவும் அரசு அளித்த நிதியாக இருக்கும் என்று கருதி வில்லியம் போவன், உடனடியாக 75 ஆயிரம் ரூபா எடுத்தான். அந்தப் பணத்தை தனது நண்பர்களுடன் இஷ்டம் போல செலவு செய்தான்.

இது குறித்து அவன் தனது தாயிடம் தெரிவிக்கவே, அவர் அதிர்ந்து போனார். வங்கியிடம் விளக்கம் கேட்டபோது, வில்லியம் போவன் கணக்கில் தவறாக பணம் சேர்க்கப்பட்டது தெரியவந்தது. அந்தப் பணம் எந்த கணக்கில் செலுத்தப்பட வேண்டிய பணம் என்பதும் தெரியவில்லை. இதுகுறித்து வங்கி நிர்வாகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

No comments: