6 விண்வெளி வீரர்களுடன் இன்று புறப்படுகிறது டிஷ்கவரி

சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தில் மேலதிக சூரியத் தகடுகளை இணைப்பதற்காக 6 விண்வெளி வீரர்களுடன் டிஷ்கவரி விண்கலம் இன்று புதன்கிழமை புறப்படுகின்றது.
சர்வதேச விண்வெளி மையத்தில் தற்போது 3 வீரர்கள் நிரந்தரமாகத் தங்கி ஆய்வுப் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்நிலையில், 6 வீரர்கள் தங்குவதற்கு ஏற்ப விரிவுபடுத்தும் பணியில் நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு அதிக மின்சாரம் தேவைப்படும். இதற்கான சூரிய மின்சக்தி தகடுகளுடன் கொண்டு டிஷ்கவரி விண்கலம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ஏவுதளத்திலிருந்து இன்று புதன்கிழமை புறப்படுகிறது.

இதில் 6 வீரர்கள் பயணம் செய்கின்றனர். விண்வெளி ஆய்வுமையத்தில் பழுதடைந்த கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்குப் பதில் புதிய சுத்திகரிப்பு இயந்திரத்தையும் டிஷ்கவரி குழுவினர் எடுத்துச் செல்கின்றனர்.

விண்வெளியில் நான்கு முறை நடைப்பயணம் மேற்கொள்ளும் வீரர்கள் தாங்கள் எடுத்துச் செல்லும் சூரிய தகடுகளை பொருத்துவர். 14 நாட்கள் பயணத்துக்குப் பின் டிஷ்கவரி குழுவினர் பூமி திரும்புவார்கள்.

No comments: