சந்திரனில் விழுந்து சிதறிய சீன "சேஞ்ச் 1' விண்கலம்

சீனாவால் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட விண்கலமொன்று சந்திரனின் மேற்பரப்பில் விழுந்து சிதறியுள்ளது. "சேஞ்ச்1' என்ற மேற்படி விண்கலமானது சந்திரன் வரைபடத்தை உருவாக்கும் தனது 16 மாதகால செயற்பாடுகளின் முடிவில் செயலிழந்து சந்திரனின் மேற்பரப்பில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விண்கலமானது 2007 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஏவப்பட்டது. சீனாவானது சந்திரனில் மனிதனை தரையிறக்குவது, விண்வெளி நிலையத்தை ஸ்தாபிப்பது உள்ளடங்கலாக பல்வேறு விண்வெளி நிகழ்ச்சித்திட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

"சேஞ்ச்1' விண்கலமானது கிழக்கு சீனாவிலுள்ள கிங்டா மற்றும் வட மேற்கு சீனாவிலுள்ள கஷ்கார் ஆகிய இடங்களிலுள்ள இரு விண்வெளி நிலையங்களிலிருந்து தூர இயங்கும் முறையின் மூலம் செயற்படுத்தப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சீனா, எதிர்வரும் வருடம் அந்நாட்டின் முதலாவது விண்வெளி நிலையத்துக்கான இணைப்பை அனுப்ப திட்டமிட்டுள்ளது. சுமார் 8.5 தொன் நிறையுடைய "தியாங்கொங் 1' என்ற இந்த விண்கல இணைப்பானது சீன விஞ்ஞானிகள் பூச்சிய ஈர்ப்புத் தன்மையில் விஞ்ஞான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தளமாக அமையும் எனக் கூறப்படுகிறது.

No comments: